திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் மூன்றவாது மரபுநடை( 25/11/2018) தொல்லோவியங்களால் சிறப்பு பெற்ற 5000 ஆண்டுகளுக்கு முந்தைய விழுப்புரம் மாவட்டம் செத்தவரை, கீழ்வாலை, பனைமனை தாளகிரிஸ்வரர் கோயிலுக்கு மரபு நடைப்பயணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 60 பேர் கலந்து கொண்ட இந்த மரபு நடைப்பயணம் பேராசிரியர் பன்னீர்செல்வம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த காலை சிற்றுண்டியுடன், சிறப்பு அழைப்பாளர்கள் ஓவியர் சந்திரு அவர்களின் அறிமுகவுரையுடன் செத்தவரை ஓவியங்களைக்காண சென்றோம். சற்றே கடினமான வழித்தடம் என்றாலும் மனம் தளராமல் அனைவரும் மலைமீது ஏறி வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களைப்பார்த்து பரவசமடைந்தனர். மலைமீதே இவ்வோவியங்களைப்பற்றி ஓவியர் இராமச்சந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இரண்டாவது இடமான கீழ்வாலை ஓவியத்திற்கு பாறை குகைகளைச் கடந்து சென்றது மறக்கமுடியாத அனுபவமாகும். இதில் கண்டாச்சிபுரம் கவிஞர் கண்டராதித்தனும் கலந்துகொண்டு சிறப்பித்தார். இங்குள்ள பாறை ஓவியங்களைப்பற்றி ஓவியர் சந்திரு அழகான விளக்கங்களுடன் விவரித்தார்.
மூன்றாவதாக ராஜசிம்மன் கட்டிய பனைமலை நாதர் கோயில் ஓவியங்களையும் கட்டிடக்கலையின் சிறப்பையும் கண்டறிந்தோம். இக்கோயிலின் வரலாறு, கலை, தத்துவம், ஓவியம், சமயம் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளுடன் ஓவியர் இராமச்சந்திரன் விளக்கமளித்தார்.