மெய்கண்டார்
அறிமுகம்
இவரது தந்தையார் அச்சுதகளப்பாளர். இவர் வேளாண்மரபினர். இவரது குலக்குரு அருள்நந்தி சிவாசாரியார்.
பல நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் வருந்தி வந்தார், அச்சுதகளப்பாளர். தமது மனக்குறையைக் குருவிடம்
கூற, அவரும் சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்து குழந்தை பிறக்க வேண்டினார். திருவெண்காடு
சென்று அங்கு திருமுறைகளைப் பாடி இறைவனை அத்தம்பதியர் வணங்கினர். இறையருளால் குழந்தைப் பேறு
கிட்டியது. அக்குழந்தைக்குச் சுவேதனப் பெருமாள் எனப் பெயரிட்டு அழைத்தனர்.
பரஞ்சோதி முனிவர் தமது தவத்திறனால், இக்குழந்தையின் பக்குவத்தை அறிந்து ஞானபதேசம் செய்வித்தார்.
சைவ ஞானத்தை அனைவருக்கும் விளக்குமாறு பணித்து நூல்வடிவில் செய்தருளக் கூறிச் சென்றார். அத்தோடு
தமது குருவின் பெயரான சத்திய ஞான தரிசினி எனும் பெயரையும் சூட்டினார். சத்திய ஞான தரிசினி எனும்
பெயரின் தமிழாக்கமே மெய்கண்டார் என்பதாகும்.
இவர் திருமடத்தினை அமைத்து அங்கு மாணாக்கர்களுக்கு மெய்யுணர்வை பரப்பி வந்தார். இவரைக் காண
ஒரு நாள் இவரது குலக்குருவான அருள்நந்தி சிவாசாரியார் வந்திருந்தார். ஆணவ மலத்தை விளக்கிப் பாடம்
சொல்லிக் கொண்டிருந்த மெய்கண்டாரைக் பார்த்து, ‘ஆணவ மலத்தின் வடிவம் யாது?’ என்க் கேட்டார்.
மெய்கண்டார் தனது சுட்டு விரலால் அருள்நந்தி சிவாசாரியாரைச் சுட்டினார். அதைப் பார்த்து அக்குழந்தையே
இறையருளால் தன்னை உய்விக்க வந்த குருவாக நினைந்து அவருக்கு மாணாக்கரானார் அருள்நந்தி சிவாசாரியார்.
மெய்கண்டாரின் மாணவர்கள் மொத்தம் 49 பேர்.
உயர்ந்த சேவை மனப்பான்மை உடையவராகத் திகழ்ந்தார், மெய்கண்டார். இவர் தமது பெயரில் ஒரு ஏரியையும்
மெய்கண்டதேசுசுரம் என்னும் ஒரு திருக்கோயிலையும் அமைத்தார். அத்தோடு வழிபாட்டிற்காக தனது நிலங்களையும்
வழங்கியுள்ளதாகவும், திருவண்ணாமலைத் திருக்கோயிலிலுள்ள மூன்றாம் இராசராசனின் பதினாறாவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு குறிக்கின்றது.
மெய்கண்டார் தமது தலைமை மாணவரான அருள்நந்தி சிவாசாரியாரை குருபரம்பரையை வளர்க்கும் பணியைத் தந்து சிவப்பேறு பெற்றார். இவர் இயற்றிய நூல் சிவஞானபோதம். – 2008-12-01 21:48:30