பெண்ணேஸ்வரர் திருக்கோயில்
பதிவு:05.03.2012
ஒலிப்பதிவு: முனைவர்.க.சுபாஷிணி
படங்கள்: டாக்டர்.நா.கண்ணன், ப்ரகாஷ் சுகுமாரன், முனைவர்.க.சுபாஷிணி
தமிழ் மரபு அறக்கட்டளையினர் கிருஷ்ணகிரி நகருக்குச் சென்றிருந்த போது பெண்ணேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று அக்கோயிலின் பழம் பெருமைகளைப் பற்றி தொல்லியர் அறிஞர், ஆர்வளர் திரு.சுகவனம் முருகன் அவர்கள் கூறக்கேட்டு பதிவு செய்து வந்தனர். இப்பயணத்தில் கலந்து கொண்டவர்கள் : செல்வமுரளி, சக்தி, ப்ரகாஷ் சுகுமாரன், டாக்டர்.நாகண்ணன், முனைவர்.க.சுபாஷிணி ஆகியோர்.
பதிவுகள் ஒலிப்பதிவாகவும் படங்களாகவும் இடம்பெருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சில சோழர்காலக் கோயில்களே இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒரு கோயிலாகத் திகழ்வது பெண்ணேஸ்வரர் திருக்கோயில். ஆறு, மலை, நிலம் மூன்றும் அருகருகே உள்ளவாறு அமைந்த கோயில் இது.போசாள வீர ராமனாதன் காலத்தில் மிகச் சிறப்பான நிலையில் இக்கோயில் இருந்துள்ளது. ஆதியில் ஒரு பனைமரத்தின் கீழ் கிடைத்ததனால் பனையீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர் இறைவன். இக்கோயில் இருப்பது தென்பெண்ணையாற்றின் கரையில். தென்பெண்ணையாறு பற்றிய குறிப்புக்கள் தேவார பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கனின் மகன் மூன்றாம் ராசராசனின் காலத்தில் புகழ் பெற்ற ஒரு ஆலயமாகத் திகழ்ந்திருக்கின்றது இவ்வாலயம். மூன்றாம் ராசராசனின் மனைவி இக்கோயிலிற்கு நந்தா விளக்கு வைக்க கொடைகள் வழங்கியிருக்கின்றார் என்ற செய்திகள் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுள்ளன. இக்கோயிலில் சோழ லச்சினை எனக் குறிப்பிடப்படும் புலிச்சின்னம் பதிக்கப்பட்டுள்ளமையை இன்றும் காணமுடிகின்றது. இக்கோயிலின் பல இடங்களில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழில் உள்ள இக்கல்வெட்டுக்கள் நல்ல வாசிக்கும் நிலையில் உள்ளவை.