Home Saivism அபிராமி பட்டர்

அபிராமி பட்டர்

by Dr.K.Subashini
0 comment

அபிராமி பட்டர்

திருமதி.கீதா சாம்பசிவம்

sep 19, 2009
 
சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்க ஐயரவர்கள். இளமை முதலே ஸ்ரீ அபிராமி அம்மையின் பால் தனிப்பற்றும், பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள்.  தம் உள்ளத்தே அன்னையின் பால் தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடி வந்தார். 

 
யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆநந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படைப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமலும், சற்றும் லக்ஷியம் செய்யாமலுமே அபிராமியைத் துதிப்பதும், அவள் பால் துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர். தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும். 

 
அப்படி இருக்கையில் ஒரு நாள் தஞ்சையின் அரசன் ஆன ராஜா சரபோஜி தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடி, திருக்கடவூருக்குத் தரிசனம் செய்ய வந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேராநந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனால் சுற்றி இருப்பவர்களோ தங்களுக்குள்ளாகக் கிசுகிசுவெனப் பேசிக் கொண்டனர். மன்னர் வந்திருப்பதும் அறியாமல், மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே என நினைத்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், “இவர் ஒரு பைத்தியம். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுகிறார்.” என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம், “ இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?” என்று கேட்டார்.

 
அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ, “ ஆஹா, இன்று பெளர்ணமி அல்லவோ?” என்று சொல்லிவிட்டார். சுற்றிலும் இருந்தவர்களில் சிலர் கைகொட்டிச் சிரிக்காத குறையாய் அவரை ஏளனத்துடன் பார்க்க, மன்னர் சுற்றிலும் இருந்தவர்கள் கூறியது உண்மையே என நினைத்த வண்ணம் பட்டரை மதிக்காமல் அலக்ஷியத்துடன் சென்று விட்டார்.  சென்றாரே தவிர மன்னனுக்கு அவருடைய தோற்றமே கண்ணெதிரே வந்தது. திரும்பத் திரும்ப அன்று பெளர்ணமி என பட்டர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னை அறியாமல் கண்ணயர, கர்ப்பகிருஹத்து அபிராமி அவர் கண்ணெதிரே தோன்றினாள். “இதோ பார், “ என்று சொல்லிக் கொண்டே தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். “ஆஹா, இது பூரண நிலவு அன்றோ! முழுமதி சுடர் விடுகின்றது பாருங்கள்,” என சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தான். கனவா? நனவா??? மன்னர் உடல் எல்லாம் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.

 

இங்கே பட்டருக்கு மன்னன் சென்றதுமே தாம் செய்த பெருந்தவறு புரிந்தது. ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்திய அவர்,  உடனேயே அன்னையின் அருளால் மனம் தெளிவுற்று, இதுவும் ஒரு நன்மைக்கே எனத் தெளிந்து அன்னையின் அருளைத் துதித்துப் பாடல்கள் இயற்றலாயினார்.  அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் அநுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அருவி போலப் பொழியலாயிற்று. அங்கே கண் விழித்து எழுந்த மன்னருக்கு அபிராமி பட்டர் பெரும் ஞாநி என்பது புலப்பட்டது. உடனேயே பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் அளித்தார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார்.  இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை.
 
மேற்சொன்ன நிகழ்வைச் சிலர் வேறு விதமாயும் கூறுகின்றனர்.  மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாய்க் கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னதாய்ச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் அக்னியை மூட்டி அதற்கு மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, “அம்பிகை எனக்குக் காக்ஷி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாடியதாகவும் கூறுவார்கள். “உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்” என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், “விழிக்கே அருளுண்டு “ என்ற 79-வது பாடலின் போது மயங்கும் மாலைப் பொழுதில் அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் தெரியும் வண்ணம் காக்ஷி கொடுத்துத் தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் சொல்லுவார்கள். எங்கனமாயினும் பட்டரின் பக்தியும், பெருமையும் சற்றும் குறைந்தது அல்ல. அதே போல் மன்னன் எவ்வாறோ அன்னையின் அருளைப் பூரணமாய் உணர்ந்திருந்தான் என்பதும் உண்மையே.

 

 அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல் ஜொலிக்க அவள் காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க அந்த அமாவாசை இருளானது, அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேராநந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. தாம் கண்ட அந்த அதிசய ஆநந்ததைப் பட்டரும், “கூட்டியவா என்னை” என்ற 80 வது பாடலில் சொல்லி மேலும் இருபது பாடல்களைப் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்தார். அன்று முதல் அவர் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அவர் சந்ததியினருக்கு பாரதியார் என்ற பட்டமும் மன்னரால் வழங்கப் பட்டது.
 
“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!  அபிராமி அந்தாதி பாடல் 79
 
கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!”

 

You may also like

Leave a Comment