Home HistoryEtayapuram 39. ராஜா பள்ளிக்கூடம்

39. ராஜா பள்ளிக்கூடம்

by Dr.K.Subashini
0 comment

19 Dec, 2010

 

39. ராஜா பள்ளிக்கூடம்


 
 

 

 

ஏட்டுப் பள்ளிக்கூடம் என்ற சொல்லை எப்போதோ கேட்டிருக்கின்றேன். அதனை பற்றிய ஒரு சுவாரசியமான உரையாடலை திரு.கருணாகரபாண்டியன், செல்வி.கிருஷ்ணவேணீ மூலமாக மேலும் தெரிந்து கொள்ள முடிந்ததில் எனக்கு சந்தோஷம். அக்காலத்தில் அதாவது அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில்  ஒரே ஒரு பள்ளிக்கூடம் மாத்திரம் இருக்குமாம். அந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் இருப்பார்களாம். கிராமத்திலுள்ள குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வருவதில்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவே. ஆக ஒரு ஆசிரியரே பல மாணவர்களுக்கு போதிக்கும் நிலை இருந்திருக்கின்றது.
 
 
திரு.கருணாகரபாண்டியனின் கல்வி அனுபவம் சுவாரசியமானது. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது இளம் பிராயத்தில் கணக்கு ஆசிரியரின் பாட போதனையை நினைவு கூர்ந்தார்.
 
ஒரு கால் கால்
இரு கால் அறை
மூன்று கால் முக்கால்
நாலு கால் ஒன்று
என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டே செல்வாராம்.  மாணவர்கள் ஆசிரியர் சொல்வதைத் தொடர்ந்து மீண்டும் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டுமாம். மீண்டும் மீண்டும் இது தொடருமாம். இப்படியே மனப்பாடம் செய்து படிப்பார்களாம் மாணவர்கள். இப்பொழுதும் கூட இவ்வகையான கல்விமுறை நடைமுறையில் இருக்கின்றது.  அதிலும் வாய்விட்டுச் சொல்லி மனனம் செய்வது நீண்ட நாட்கள் ஞாபகத்தில் இருப்பதற்கும் துணை புரியும்.
 
பள்ளிகளில் எப்போதும் எல்லா மாணவர்களும் ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். குறும்புத் தனம் செய்யும் மாணவர்களும் இருக்கத்தானே செய்வர். ஆக மாணவர்கள் குறும்பு செய்தால் தண்டனையும் கிடைக்கும். இவரது ஆசிரியர் வழங்கிய தண்டனை சற்றே வித்தியாசமானது. மாணவர்கள் குறும்புத்தனம் செய்தால், தரையில் கிடக்கும் மணலை அள்ளி தொடையில் வைத்து கிள்ளுவாராம் ஆசிரியர். அந்தத் தண்டனை தரும் வலிக்குப் பயந்து இவர்கள் படிப்பார்களாம்.
 
பள்ளிக்கூடட்திற்கு வரும் புதிய மானவருக்கு ஏடு ஒன்றைத் தந்து விடுவார்களாம். பள்ளி நுழைவு என்பது விஜய தசமி அன்று தான். ஒரு மாணவருக்கு அன்று தான் கல்வி தொடங்குமாம். பாடம் கற்றுக் கொள்ளச் செல்லும் குழந்தை ஆசிரியருக்குக் குருதட்சனை செலுத்த வேண்டியது முறையாக கடைபிடிக்கப்பட்டிருக்கின்றது. குருதட்சனையாக ஒரு தாம்பளத்தில் தேங்காய் பூ பழம் வைத்து அதனை ஒரு துணியில் சுற்றி கட்டி ஒரு தாம்பளத்தில் வைத்து பெற்றோர்கள் மாணவரின் கையில் கொடுத்து விடுவார்களாம். மாணவர்கள் பள்ளிக்கு அதனை கொண்டு வருவார்களாம். ஆசிரியர் பள்ளியிலுள்ள சரஸ்வதி சிலை முன குருதட்சனையை வைத்து மாணவர்களை ஒவ்வொருவராக தனது மடியில் அமரவைத்து மஞ்சள் அரியில் எழுத வைப்பாராம். பின்னர் நாக்கை நீட்ட வைத்து நாக்கில் அரிசியால் ஹரி ஓம் நமஹ என எழுதுவாராம். இப்படித்தான் அக்காலத்தில் ஒரு மாணவரின் வாழ்க்கையில் பள்ளிப் படிப்பு என்பது தொடங்கப்பட்டிருக்கின்றது.
 
எட்டயபுரத்தில் முதன் முதலாக ஒரு பள்ளிக்கூடத்தை எட்டயபுர ஜமீந்தார் தொடக்கி வைத்திருக்கின்றார். அந்தப் பள்ளிக்கூடத்தின் தற்போதைய பெயர் ராஜா பள்ளிகூடம். இது தற்சமயம் ஆரம்ப நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்ற இரண்டு பிரிவுகளாக ஒரிடத்திலேயே அமைந்திருக்கின்றது. 

 

 

 
தமிழக கிராமத்தின் ஏனைய பள்ளிகளைப் போல இந்தப் பள்ளியில் படித்த பலர் இந்தியாவின் பல இடங்களிலும் சிலர் அயல் நாடுகளிலும்  கூட தற்சமயம் நல்ல நிலையில் பணிபுரிந்து வருகின்றனர் என்று இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி.கிருஷ்ணவேணி என்னிடம் தெரிவித்தார். அவ்வப்போது யாராவது சிலர் இந்தப் பள்ளிக்கு வருவார்களாம். இந்த ஆண்டில் இந்தப் பள்ளியில் படித்தேன் என்று சொல்லி பள்ளியின் வாசலில் விழுந்து கும்பிட்டு தரையில் கிடக்கும் மண்ணை நெற்றியில் இட்டுக் கொண்டு பள்ளியை மீண்டும் சுற்றிப் பார்த்து விட்டு செல்வதை தனது அனுபவத்திலேயே பார்த்திருப்பதாக செல்வி.கிருஷ்ணவேணி என்னிடம் குறிப்பிட்டார். பள்ளிக் கூடங்கள் தானே நமது கல்விக்கு ஆதார மையம். எந்த ஒரு மனிதரும் தனது பள்ளிப் பிராயத்து நிகழ்வுகளை மறக்க முடியுமா?

 

 
இந்தப் பள்ளிக்குத் தமிழ் நாடு அளவில் மேலும் ஒரு தனிச் சிறப்பும் இருக்கின்றது. அதாவது தமிழ் நாட்டில் அரசாங்கம் திட்டமிட்டு பள்ளியில் மாணவர்களுக்கான இலவச மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னரே இந்தப் பள்ளியில் இலவச உணவுத் திட்டம் 1956ல் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்திருக்கின்றது.  இதனை தொடக்கியவர்கள் எட்டயபுர  ஜமீன் குடும்பத்தினர்.  
 
 

 

 
 
ராஜா பள்ளிக்கூடம் அரண்மணைக்கு பக்கத்திலேயே இருப்பதால் உணவு அரண்மனை சமையலறைப் பகுதியிலேயே தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுமாம். பள்ளி ஆசிரியர்களே ஒவ்வொருவராக முறை எடுத்துக் கொண்டு  மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பணியைச் செய்வார்களாம்.
இந்தப் பள்ளியில் படித்து இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் கல்லூரியில் தமிழ்  தொண்டு புரிந்து மறைந்த துரைராஜ் அவர்களின் புதல்வி செல்வி.கிருஷ்ணவேணி அவர்களே தற்சமயம் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கின்றார்.
 

 
இவரது இல்லத்திலேயே தங்கியிருந்து நான் எட்டயபுர கிராமத்தின் வரலாற்று அம்சங்களைப் பதிவு செய்ய இந்த அம்மையார் எனக்கு மிகவும் உதவினார். இவரது தாயாரின் சகோதரர்கள் தமிழறிஞர் சி.மு.தொட்டைமான், சி.மு.ரகுநாதர் ஆகியோர். இந்த குடும்பத்தினரின் கல்விப்பணி இன்றும் தொடர்கின்றது என்பதை நினைக்கும் போது இவர்களைப் போற்றவே மனம் நினைக்கின்றது.
 
 

இந்தப் பள்ளி மேலும் மேம்பாடுகளைக் காண வேண்டும். தற்சமயம் இப்பள்ளிக்கூடக் கட்டிடம் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது. மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு மண்டபமும் ஆரம்ப நிலைப்பள்ளிக்காக ஒரு பழைய மண்டபமும் ஒதுக்கியிருக்கின்றார்கள். ஆரம்ப நிலை பள்ளியில் ஒரு மூலையில் குழுவாக பத்து பதினைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார். இன்னொரு மூலையில் மேலும் சில குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றார். தனி அறைகள் இல்லை.  இந்த மண்டபத்தை சற்று சீரமைக்கலாம். அதன் வழி தனித் தனி அறைகள் அமைத்து மாணவர்களுக்கு நாற்காலி மேசைகள் ஏற்பாடு செய்து படிக்க ஏற்பாடு செய்யலாம். இப்போதும் கூட மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலையில் இருப்பது தமிழகம் முழுதும் கல்விக்கழகங்களுக்கான சீரிய  மேம்பாட்டு நிலையில் அரசாங்கம் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் இருப்பதை உணர்த்துகின்றது. 
தொடரும்..
 

 

 

 

 

 

 

 

அன்புடன்
சுபா

You may also like

Leave a Comment