26. வழங்கப்பட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும்
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்து கயத்தாறுவிற்குக் கொண்டு வந்து விடுகின்றனர். அங்கே தான் விசாரனை நடக்கின்றது. இந்த விசாரனை நடக்கும் போது ஏனைய பாளையக்காரர்களும் அங்கு வந்திருக்கின்றனர். இதனை Etaiyapuram Past and Present இப்படி பதிகின்றது. "Cataboma Nayakar, and six of his companions in adversity and sharers in his iniquity, were brought down to Kayatar on the 5th October. All the Poligars having arrived by the 16th Octr., Cataboma Nayakar was brought before Major Bannerman, Major R.Turin, Mr. George Hughes (Malabar Translator) and the assembled Poligars." (pg 98)
இந்த நிகழ்ச்சியை மேலும் விவரிப்பதாக அமைந்திருக்கின்றது வம்சமணிதீபிகையின் 22வது அதிகரணம்.
"அப்பால் அக்டோபர் மாதம் 5ம் தேதி கட்டபொம்மு நாயக்கர் அவரை சேர்ந்தவர்களான மேற்படி ஸகோதரன் குமாரசுவாமி நாயக்கர் 1. மைத்துனராகிய முத்தையநாயக்கர் 2. குமாரசுவாமி நாயக்கர் 3. முத்துக்குமாரசுவாமி நாயக்கர் 4. அவருக்கு முக்கிய நம்பிக்கையுள்ள வீரணமணியகாரன் 5. அவரிடத்தி லெப்பொழுது மிருக்கப்பட்ட காக்கிளியணன் 6. ஆக இவர்களுடன் கயத்தாற்றிலிருந்தனுப்பிக்கப்பட்ட சைந்நியங்களாலே கயத்தாற்றில் பானர்மான் துரையவர்கள் கூடாரத்துக்குக் கொண்டு வரப்பட்டார் அக்டோபர் 16ம் தேதி எட்டயபுரத்தார் முதலான எல்லாப்பாளையக்காரர்களும் வந்து சேர்ந்தார்கள் அன்றையத் தினம் பானர்மான் துரையவர்க ளுத்தரவின் பேரில் மேற்படி பாளையக்காரர்களுடையவும் மேஜர் ராபர்ட்டி டியூரின் மலபாரட்டிரான்சிலேடராகிய மிஸ்டர் ஜார்ஜ்ஹியூஸ் இவர்களுடையவும் முன்பாகக் கட்டபொம்முநாயக்கர் காவலாளிகளாற் கொண்டு வரப்பட்டார்." (பக்கம் 83)
"…சாஷிகளால் ருசுச் செய்யப்பட்டன கட்டபொம்முநாயக்கராலே பங்கப்படுத்தப்பட்ட ஆக்கினையை மீட்டுக் கொள்வதற்காக மேற்படி கட்டபொம்முநாயக்கருக்குப் பயங்கரமான மரண தெண்டனை விதிக்கப்பட்டது ஊமைக் குமாரசாமிநாயக்கர் முதலான மற்றக் கைதிகளைப் பாளையங்கோட்டையில் சயிலிலிருக்கும்படி தீர்ப்புச் செய்யப்பட்டது."
"இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுகிறதற்காக மேற்படி கட்டபொம்முநாயக்கர் கயத்தாற்றுப் பழைய கோட்டைக்குச் சமீபத்தில் உந்நதமான ஒருவிடத்திலிருந்த தூக்குமரத்துக்குக் கொண்டு போகப்பட்டார்."
"அவர் அவ்விடத்துக்குப் போங்காலத்தில் அவரைப்பிடிக்க விசேஷப்பிரயத்தனஞ் செய்த எட்டயபுரம் ஜெகவீரராம குமார எட்டப்பநாயக்கர் அய்யனவர்களையும் முன்னே தன்விஷயத்திற் கும்பினியாருக்கோபமூடின சிவகிரி பாளையத்துக்காரரையும் அடிக்கடி இகழ்ச்சியாட்டார் த்தார்தை வியத்துடன் வேகமாய் தூக்குமரத்தின் சமீபத்துக்கு நடந்தார் சமீபத்திற் போனவுடன் என் கோட்டையைவிட்டு வந்துவிட்டேன் அதைக் காத்துக் கொள்ளுகிற விஷயத்திற் பிராணனை விட்டால் நலமாயிருக்குமென்று சொன்னார் உடனே பானர்மான் துரையவர்கள் தீர்ப்புப்படி நிறைவேற்றிவிட்டார்கள்." (பக்கம் 84)
கட்டபொம்மனுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட உடனேயே ஏனைய பாளையக்காரர்களிடம் அவர்கள் வசமுள்ள எல்லா கன்பவுடர், சிப்பாய்கள் அனைத்தையுமே பக்கத்திலுள்ள கச்சேரியில் (காவல் நிலையம்) ஒப்படைத்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கின்றது. ஆயுதங்களை மறைவாக வைத்திருக்கக் கூடாது என்று ஆங்கியலேய அரசு அறிவித்து விடுகின்றனர். மீண்டும் புரட்சி வராமல் தடுக்க வேண்டும் என்பது அவர்களது அப்போதைய முக்கிய நோக்கமாக இருந்திருக்கின்றது. இந்தத் தகவல் பதித்த பட்டயத்தை செதுக்கி ஒவ்வொரு பாளையத்துக்காரர்களும் அவர்கள் ஊரில் பொது மக்கள் பார்க்கும் ஓரிடத்தில் வைத்து விட வேண்டும் என்று ஆணையும் பிறப்பித்திருக்கின்றனர்.
ஏனைய பாளையக்காரர்களைப் போல அதனை ஏற்று எட்டயபுர ஜமீனும் இவ்வகை பட்டயத்தை தயார் செய்து கோட்டைக்கு முன்னால் பதிந்து வைத்திருக்கின்றனர். இந்த பட்டயம் எட்டீஸ்வரன் கோயிலுக்கு செல்லும் வழியில் கோயிலுக்கு முன்னர் வைக்கபப்ட்டுள்ளது. சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டயத்தை இன்றும் காணலாம்.
குறிப்பு: இங்கு சான்றுக்குப் பயன்படுத்தப்பட்ட பகுதிகள் எழுத்தில் மாற்றமில்லாமல் அப்படியே இங்கு வழங்கப்பட்டுள்ளன.
அன்புடன்
சுபா