Home Historymalaysia ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்

by Dr.K.Subashini
0 comment

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்

கிருஷ்ணன், சிங்கை

 

முழு முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுகிறது. பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து  இவ்வுலகத்தையே படைத்துள்ளன. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதிபராசக்திதான். ஆதிபராசக்தியின் மூலமே பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகா சக்திகளாயினர். இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணர்களும் ஆவர்.

Asrto Physic என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துகொள்ளலாம். திரிமூர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் ”எலக்ரோன்” [Electron], ”நியூட்ரோன்” Neutron], ”புரோட்டன்” [Proton] என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே. புராணகாலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரம்மதேவன் சிருஷ்டிப்பவராகவும்,  மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும் பொறுப்பாளர்களாகின்றார்கள். 

 

 

 
நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயகமாக ஆதிபராசக்தியாகயே திகழ்கின்றாள். அவளுக்குத் துணையாக எலக்ட்ரோன் [Electron] பிரம்மதேவனும், ‘நியூட்ரோனாக  [Neutron] விஷ்ணுவாகவும்,  ”புரோட்டோ னாக” [Proton]  மகேஸ்வரனும் விளங்குகின்றனர். இதைக் கண்ணுறும் பொழுது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியான அரும்பெரும் தத்துவங்களைக் கொண்ட ஒரு பெர்஢ய பொருளாக விளங்குகின்றாள்.

 

நமது இந்து சமயம் ஆதிசமயம், இந்து வேதம் ஆதிவேதம். அதில் சொல்லாதது ஒன்றுமில்லை. அது பழமைக்குப் பழமையாயும், புதுமைக்குப் புதுமையாயும், விஞ்ஞானத்திற்கு விஞ்ஞானமாயும், மெய்ஞ்ஞானத்திற்கு மெய்ஞ்ஞானமாயும் நடைமுறைக்கேற்றவாறு அமைந்து இருக்கிறது.

 

 

 

 

இதனால்தான் சங்க இலக்கியம் அம்மையைப் பழையோள் எனவும் குறிக்கிறது. அம்மையின் உருவம் வெறும் பெண் உரு மட்டும் அன்று. முதற் பொருள் ஞாயிறும் அதன் ஒளியும் போலவும், மலரும் அதன் மணமும் போலவும், தானும் தன் இயற்கை அருள் என்றும், ஒளியும் என்றும்  இரு திறப்பட்டு இயைந்து நிற்கிறது. இயற்கையின் ஆற்றல்களுள் மழை பெய்வது உலகம் உய்ய, உயிர் வாழ நீர் இன்றியமையாதது. நீர் இல்லாது உலகமில்லை. திருவள்ளுவர் கூட கடவுள் வாழ்த்தில் வான் சிறப்பைக் கூறியுள்ளார். இத்தகைய மழைக்கு ஆதி தெய்வ அருளாற்றலே மகா மாரியம்மன் ஆகும். [மாரி – மழை] உலகியல் நடைபெறுவதற்கு மழை மிக முக்கிய துணைக்காரணமாகும். இவ்வருட் சக்தியையே பெண்ணாக உருவகப்படுத்தி, மக்கள் வழிபாட்டிற்குரிய தெய்வமாக, நமது முன்னோர்களான அறிவுடைச் சான்றோர்கள் அமைத்தனர் என்று உணரும்போது அவர்களின் மதிநுட்பம் எத்துணை சிறப்புடையது என்று நமக்குப் புலப்படுகிறது.

 

தாய் அன்பே தலையாய அன்பு என்பதை உணர்ந்த நமது முன்னோர்களும், அருளாளர்களும், அருட்
சக்தியாகிய அன்னை பல்வேறு நாமங்களில்,காசியிலிருந்து கன்னியாகுமரி வரை இலங்கை மற்றும் சிங்கப்பூரிலிருந்து மலேசியா வரை, அதனையும் தாண்டி தென்கிழக்கு ஆசியா வரை, ஏன் இன்று அமெரிக்கா, ஐரோப்பா வரை மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறாள்.சிறப்பாகத் தமிழ் நாட்டில், சிங்கப்பூரில், மலேசியாவில் ஆதிசக்தி அம்மன் ஆலயம் இல்லாத ஊரே இல்லை எனச் சொல்லலாம். மாரியெனத் தன்னருளை வாரி வழங்குவதால், மாரியெனப் பெயர் பெற்றாள் போலும். மக்கள் துயர் தீர்க்கும் புற்றாய்; மாமருந்தாய்; மகேஸ்வரியாய் விளங்குகிறாள்.

      
ஸ்டாம் போர்டு ராகபிள்ஸ் சிங்கப்பூர் வருகை

 

சிங்கப்பூர் தீவு கேந்திர முக்கியமான இடத்தில் அமைந்திருந்த காரணத்தால்,பல நாடுகளிலிருந்தும்
வந்த கடலோடிகளை ஈர்த்து கவர்ந்தது. போர்ச்சுகீசிய, ஸ்பானிய,டச்சு, பிரெஞ்சு கடற்படைகள் சிங்கப்பூர் மீது கண் வைத்தன. ஆனால், கடைசியில் சிங்கப்பூரைப் பிடித்தது ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனிதான். 

 

1819-ஆம் ஆண்டில் ஸ்டாம் போர்டு ராகபிள்ஸ் சிங்கப்பூர் வந்திறங்கிய பின்னர் இத்தீவு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. சிங்கப்பூர் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த பாறையில் இந்திய மொழி போன்று செதுக்கப்பட்டிருந்த சொற்களை அவரின் பயணக் குழு கண்டுபிடித்தபோது, சிங்கப்பூரில் இந்து செல்வாக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை அவர் மறு உறுதிப்படுத்தினார். ராகபிள்ஸ்வுடன் முன்ஷி அப்துல்லா எனும் மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் பயணம் செய்தார். முன்ஷி அப்துல்லா தமிழகத்துக் கடற்கரைப்பட்டினமான நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் பாண்டித்தியம் பெற்ற தமிழ் முஸ்லிம். மலாய் மொழியை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். மலாய்க்காரர்களுடன் முன்ஷி அப்துல்லா நெருங்கி பழக்கக்கூடியவராக இருந்ததால் ராபிள்ஸ்,  மலாய்க்காரர்களுடன் உள்ள தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள முன்ஷி அப்துல்லாவையே பயன்படுத்தி இருக்கிறார். சிங்கப்பூர் சரித்திர வரலாற்றுக் குறிப்புக்கு முன்ஷி அப்துல்லா குறிப்புகளே மிகவும் உதவியாகி இருந்து வந்துள்ளன.

 

முன்ஷி அப்துல்லா தமது பயணங்களைப் பற்றி குறிப்பு எழுதி வைக்கும் பழக்கம் உடையவர். அவர் தமது குழு கண்ட பாறைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் நீரால் அரிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார். அதனைக் கண்டதும் பல இனத்தவரும் அங்கு கூடிவிட்டனர்.பின்னர் அங்கு நடைபெற்றதை அவர் விவரிப்பது சி.பி.பக்லி என்பவரின் சிங்கப்பூர் பற்றிய வாய்மொழி வரலாறு (1819- 1867) எனும் நூலில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது:

"இந்துக்கள், அவை இந்து எழுத்துக்கள் என்றனர், சீனர், அவை சீன மொழி என்றனர். நான் திரு. ராகபிள்ஸ், திரு.தாம்சனுடனும் மற்றவர்களுடன் சென்றேன். பாறையில் இருந்தசொற்களைக் கண்ட போது அவை அரபு மொழி என நான் கருதினேன். ஆனால் என்னால் அதனைப்படிக்க முடியவில்லை. திரு. ராகபிள்ஸ் பாறையில் செதுக்கப்பட்ட சொற்கள் இந்து வார்த்தைகள் என்றார். ஑ஒஏனெனில் இந்து இனம் இந்தத் தீவுக்கூட்டங்களுக்கு முதலில் வந்த இனம். தொடக்கத்தில் ஜாவா, பிறகு பாலி, அதன் பிறகு சயாம் (தாய்லாந்து) ஆகிய இடங்களுக்கு அவர்கள் சென்றனர். இவ்விடங்களில் உள்ள அனைவரும் அவர்களின் மரபு வழி வந்தவர்களேஒஒ என்றார். இருப்பினும் செதுக்கப்பட்டிருந்த சொற்கள் என்ன
என்பதைச் சிங்கப்பூரில் இருந்த ஒருவராலும் கூற இயலவில்லை."

 

மகா மாரியம்மன் ஆலயம்

 

சிங்கப்பூரில் ஆகப் பழமையான கோவில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில். 1827-ல் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இவ்வாலயம் அன்று தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறிய குறிப்பாக நாகப்பட்டினம், கடலூரிலிருந்து வந்த தமிழ் மக்களின் உறுதுணையோடு இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.
 

 

அன்று வீட்டுத் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் பலருக்கு இருந்து அருள் பாலித்த மாரியம்மன் இங்கும் நோய் காக்கும் தெய்வமாகவும் நிலைப்பெற்று இருந்து இருக்கிறாள். அம்மை நோய் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக வழிபாட்டுத் தலங்களை அன்று வந்தவர்கள் இந்தக் கோயிலை   அமைத்துள்ளார்கள்.

இவ்வாலயம் தற்போது சைனா டவுன் என்று அழைக்கப்படும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் கோயில் அமைக்கப்பட்ட போது  நான்கு நிலைக்கொண்ட கோபுரமும், அதனை ஒட்டி அமைக்கப்பட்ட வாயில் நிலையையும் மாறாமல் இருக்க, காலத்திற்கு ஏற்ற உள்ளமைப்பு  மாற்றம் பெற்று அன்றும் இன்றும் தமிழர் சமுதாயத்திற்கு ஒரு முக்கிய வழிபாட்டு தலமாகவும், சமூக சேவை நிலையமாகவும் இருந்து வருகிறது.

 

நாராயணப்பிள்ளை  வருகை

 

இந்த மகா மாரியம்மன் ஆலயம் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் தமிழ் நாட்டிலிருந்து வந்த திரு.நாராயணப்பிள்ளை ஆவார்.பிரிட்டீஸ் கிழக்கிந்திய கம்பெனியில் பிள்ளை ஒரு குமாஸ்தாவாகப் பினாங் தீவில் [மலாயா] பணிபுரிந்து வந்தார்.

 

 

 

 

சிங்கப்பூரை இனம் கண்டு, அடையாளம் காட்டிய சர்.ஸ்டாம்போட் ராபிள்சுடன் பினாங்கிலிருந்து வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். சர்.ஸ்டாம்போர்ட் ராபிள் 1819 – ல் சிங்கப்பூருக்கு இரண்டாவது முறை வந்தபோது அவருடன் இந்து வணிகர்களும், ஑இந்தியானாஒ என்ற கப்பலில் அழைத்து வந்தார்.அவர்களுடன் 120 சிப்பாய்களும்,உதவியாளர்களும் வேலைக்காரர்களும் வந்தனர்.அவர்களில் பலர் இந்துக்காளாகும்.    

 

நாராயணப்பிள்ளை இங்கு பிரிக்லினி என்ற  வர்த்தக அமைப்பை நிறுவி அதன் வழி  வியாபாரமும், வர்த்தகத்தின் மூலமாகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ராபிள்ஸ் உதவியுடன் அவர் செங்கல் ஆலை ஒன்றைத் தொடங்கியதுடன் சிங்கப்பூரில் முதல் கட்டுக் குத்தகையாளராகவும் விளங்கினார்.  நாராயணப்பிள்ளை தொடங்கித் தொழில் வளர தொடங்கியதால் பினாங்கிலிருந்து தமக்குத் தெரிந்த திறமையான தச்சர்களையும், கட்டுமானத் தொழிலாளர்களையும் சிங்கப்பூருக்கு வரவழைத்தார்.

 

நாளடைவில் நாராயணப்பிள்ளையின் கவனம் ஜவுளி வியாபாரத்தில் மீது திரும்பியது.பருத்தி ஆடைகள் விற்கும் கடை ஒன்றை குரோஸ் சாலையில் (Cross Street) அவர் நடத்தினார். 1822-ல் மூண்ட தீயினால் அவர் கடையை இழந்தார். சேர்த்த செல்வம் தீக்கிரையானதால் ராபிள்ஸ்சின் உதவியை நாடினார். ராபிள்ஸ்சின் உதவியுடன் மீண்டும் ஒரு கடையைத் திறந்தார்.

 

இந்தியாவிலிருந்து வந்த குடியேறிகளில் தமிழர்களும் ஒரு சில வங்காள இனத்தவரும், செளத் பிரிட்ஜ் ரோடு, தஞ்சோங் பகார், டோ பி காட், சிராங்கூன் ஆகிய நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கத்  தொடங்கினர். தொடக்கக்கால இந்தியக் குடியேறிகளில் வர்த்தகர்கள், சிப்பாய்கள், தொழிலாளர்கள், படகோட்டிகள், சலவைத் தொழிலாளர் எனப் பலர் இருந்தனர்.

 

அதே சமயம் திரு. நாராயணப் பிள்ளையை இந்திய சமூகத் தலைவராகவும் ஆங்கில அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. நாட்டு மக்கள் நன்றாக இருக்கவும், நல்ல சுபிட்ச வாழ்க்கை அமையவும் ஆண்டவன் அருள் வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தினை அமைக்க எண்ணினார். வருங்காலத்தில் சிங்கப்பூர் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கப் போகிறது என்ற யூகம் அவர் மனதில் உதித்திருக்கிறது.

 

தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த பலரும் திரு. நாராயணப் பிள்ளையிடம் வேலை பார்த்தனர். அப்படி வந்தவர்களில் பொய்கையூரைச் சேர்ந்த பண்டாரமும் ஒருவர். தமது ஊர் முத்து மாரியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த அவருக்கும் உறவினருக்கும் இடையில் எழுந்த பிரச்சனையால், கோயிலில் இருந்த அம்மன் சிலையைத் தன்னோடு எடுத்துக் கொண்டு பினாங் வந்திறங்கினார். நாராயணப் பிள்ளையை இல்லை என்று அறிந்து சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர் வந்த அவர் அம்மன் சிலைக்குக் சிறிய கோயில் ஒன்றை கட்ட நாராயணப் பிள்ளையின் உதவியை நாடினார்.

 

கோவிலுக்கு நிலம்

 
அப்போது சிங்கப்பூரில்  இந்துக்களின் எண்ணிக்கை பெருகவே கோயிலுக்கான தேவை ஏற்பட்டது. கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்கக் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில்
முன் வந்தது. வழிப்பாட்டுத் தலத்திற்கு ஆங்கிலேயரால் சுட்டிக்காட்டப்பட்ட இடம் தெலுக்காயரில் தெலுக் ஆயர் சாலை (Telok Ayer Street) ஆனால், அவ்விடம் இந்து சமய ஆலய ஆகமங்களுக்கும் சடங்குகளுக்கும் உரிய இடமாக அமையவில்லை. தினம் நடக்கும் அபிஷேகத்திற்கு நல்ல நீர் கிடைக்காத இடமாதலால் அந்த இடம் தவிர்க்கப்பட்டது.

அப்போது நகரத் திட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. 1819஖1823 காலக் கட்டத்தில் சிங்கப்பூரின் பிரிட்டிஷாரின் பிரதிநிதியாக இருந்தவர் மேஜர். கபார்குவார். கோயில் கட்ட ஸ்டாம் போர்ட் கால்வாய் (Stamford Canel) அமைந்துள்ள பகுதியில் இந்துக்கோயில் கட்டுவதற்கு நாராயணப்பிள்ளைக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடமும் வழிபாட்டுக்கும், ஆலயத்திற்கும் உகந்த இடமாக அமையவில்லை. இறுதியாக 1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.

 

1827-ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து "சின்ன அம்மன்" என்ற பெயரில் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டைத் தொடங்கினார் நாராயணப் பிள்ளை. அந்த அம்மன் இன்று  மகா மாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.

 

வளர்ச்சியும், மாற்றமும் தவிர்க்க இயலாதவை. தேவைகளும், அவசியமும் பெருக 16 ஆண்டுகளுக்குப் பின் சிறு அளவிலிருந்த கோயில்  1862-ல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான ஑பெரிய அம்மன்ஒ எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962஖ல் இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுபொலிவும், உள்ளமைப்பு விரிவும், இன்றைய கால தேவைக்கு ஏற்ப நவீன வசதியும், பொதுமக்கள் தேவைக்கும் சமூக, சடங்குகளுக்கு ஏற்ற திருமண மண்டபம், அரங்கம் போன்றவை விரிவு பெற்றன. சிற்பக்கலைக்கும், வண்ணத்திற்கும் புனரமைப்பு தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள்/ஸ்தபதிகள் உயிருட்டினர்.

 

1827-ல் ஆலயம் உருவாகியிருந்தாலும் ஜூன் திங்கள், 1936-ல்  தான் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் கும்பஷேகம்/ குடமுழுக்கு நடந்தாக எந்த வரலாற்று குறிப்பும் இல்லை. இரண்டாவது குடமுழுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 1949-ல் மூன்றாவது குடமுழுக்கு ஜூன், 6-ம் நாளும், 1977-ல் நான்காவது, குடமுழுக்கு செப்டம்பர் – 6-ம் நாளும், 1984 ஖ ல் ஐந்தாவது குடமுழுக்கும், 1996 ல் மே மாதம் 19-ம் நாள் நடந்துள்ளது.

 

தஞ்சம் என்று வந்தோருக்கு..

 

மகா மாரியம்மன் ஆலயம் ஆரம்ப காலங்களில் வழிபாட்டுத் தலமாக மட்டும் விளங்கவில்லை. சமூக பணியிலும், பொது மக்கள் தேவைகளிலும் சேவை செய்வதிலும் தலையாய இடமாகத்  திகழ்திருக்கிறது. பிரிட்டீஸ் ஆட்சிக் காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வேலை தேடி வரும் தமிழர்க்கு உதவி நல்கிடும் வேடங்தாங்கலாகவும் இருந்துள்ளது. ஒரு நிலையான தொழில்,வேலை கிடைக்கும் வரை கோவிலில் தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளார்கள்.

 

சிங்கப்பூரையும் மலாயாவையும் [இப்போது மலேசியா] பிரிப்பது மலாக்கா ஜலசந்தி. இதன் நீளம் ஒரு கி. மீ. தூரம்தான். ஆகவே சிங்கப்பூரை ஓட்டியுள்ள மலாயா ஊர்களிலிருந்து தமிழ் நாடு செல்ல சிங்கப்பூர் துறைமுகம் வசதியாக அமைந்திருந்தது. தமிழ் நாடு செல்லும் இந்தியர்கள் ஓரிரு நாட்களுக்கு முன்னமே சிங்கப்பூர் வந்துவிடுவார்கள். சில சமயங்களில் குறித்த காலத்தில், குறித்த நேரத்தில் கப்பல் வராதபோது அவர்களுக்கு அபயக்கரம் காட்டியுள்ளது மாரியம்மன் கோயில்.  மேலும் பல உதவிகள் புரிந்துள்ள நிலையமாகவும், சமூக வளர்ச்சிக்கும் மகா மாரியம்மன் உறைவிடமாக இருந்துள்ளது, இருந்தும் வருகிறது.

 

இந்திய திருமணங்களைச் சட்டப்படி பதிவுசெய்து செய்யும் பதிவகமாகவும் மகா மாரியம்மன் ஆலயமாகச் செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி சம்பிராதய சடங்கு பூர்வமான வைதீக புரோகிதர்களைக் கொண்டு திருமண சடங்கும் நடைபெறுகிறது. தற்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதோடு பள்ளி குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஆதரவு நல்கி வருகிறது.

 

கோயிலில் சீனர்களின் பங்கு

 

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் "சைனா டவுன்" பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அந்தக் காலத்தில் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் வழங்கியோரில் பெரும்பாலோர் சீனர்களே என்று  தெரிகிறது. ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள்.ஆயிரக்கணக்கான எலுமிச்சை பழங்களையும் இலவசமாக வழங்குகிறார்கள். கட்டுமான பணிகளுக்கு நிதியுதவி வழங்கியவர்களில் பலர் சீனர்கள்பொதுவாக இந்து சமயத்திற்கும் சீன மதத்திற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. நமது இந்து சமயத்திலிருக்கும் விநாயகர், அம்மன், சரஸ்வதி, அனுமான் போன்ற தெய்வங்கள் வேறு பெயருடன், சற்று வித்தியசமான அமைப்புடன் இருக்கும். தங்களின் கருணைக் கடவுளுக்குச் சமமாக (குவான் இன்) மதித்தனர். ஆக, அம்பாள் அவர்களுடன் ஐயக்கியமாகிவிட்டாள். அவளை முழுமையாக நம்பியவர்களின் இடர்களை, துயர்களை, நோயினைத் தீர்த்து வைத்திருக்கிறாள். இன்றும் பல சீனர்கள் இவ்வாலயம் வந்து பிராத்தனையும், வழிபாடும் செய்வதைக் காணலாம். .ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் பெரும்வாரியாகப் பங்கு பெறுகிறார்கள்.

 

 

விழாக்கள்

 

  

 

தீ மிதி விழா முக்கிய சமயத் திருவிழாவாக அக்டோ பர்/நவம்பரில் தீமிதி விழா நடக்கிறது. இத்திரு விழா 1842 முதல் நடைபெறுவதாகக் வரலாற்று குறிப்பு காட்டுகிறது. திரெளபதை அம்மனுக்கு எடுக்கப்படும் விழா இது. டோ பி காட் அருகே ஓடிய ஓடைக்கு அருகில் கரகம் கட்டி மாரியம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் வழக்கமிருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால் 1900 களின் தொடக்கத்தில் மாரியம்மன் கோயிலும்,பெருமாள் கோயிலும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் வந்தததை தொடர்ந்து கரகத்தை பெருமாள் கோயிலிருந்து கட்டி எடுத்து வரும் வழக்கம் தொடங்கியது. வழக்கமாக மாலையில் நடந்து வந்த தீமிதி 1999-ஆம் ஆண்டு முதல் அதிகாலையில் நடத்தப்படுகிறது. அதன் மூலம் நீண்ட காலம் தடைப்பட்டிருந்த திரெளபதையின் இரத ஊர்வலத்தைத் தீமிதி தினத்தன்று மீண்டும் நடத்த வழி ஏற்பட்டது.

நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை, திரெளபதைப் உற்சவம் ஆகியவிழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. 

 

 

 
(எல்லா) வெளி நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்து ஆலயம் எப்படி இருக்கும் என விளக்கும் ஆலயமாகவும் இப்போது திகழ்கிறது.

 

ஆலய முகவரி:-
Sri Mariamman Temple,
244, South Bridge Road,
Singapore 058792

Tel. 62234064 Fax. 62255015

 

நன்றி :- சிங்கப்பூர் "இந்து அறக்கட்டளை வாரியம்"

 

You may also like

Leave a Comment