திருமதி. கீதா சாம்பசிவம்
அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்களைப்பற்றி. இவரைக்குறித்து அறியாதோர் இருக்க மாட்டார்கள். என்றாலும் ஒரு தெரிந்து கொள்வோம். அந்நாட்களில் திருச்சி என அழைக்கப்படும் தலமான திரிசிரபுரத்தில் அதவத்தூர் என்னும் ஊரில் சைவ வேளாளக்குடும்பத்தில் சிதம்பரம் பிள்ளை என்னும் கணக்காயருக்கும், அன்னத்தாச்சி எனப்படும் அவர் மனைவிக்கும் ஓர் ஆண்மகவு பிறந்தது. 1815-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் தோன்றிய இந்தக் குழந்தைக்கு மீனாக்ஷி சுந்தரம் என்னும் பெயர் வைத்துச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். தக்க பருவம் வந்ததும் திருவாவடுதுறையைச் சார்ந்த வேலாயுத முனிவரிடம் தமிழ் இலக்கியங்களையும், சமய நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். தமது பதினாறாம் பிராயத்திலேயே காவேரி ஆச்சியாரை மணந்து இல்லறத்தில் புகுந்தார். கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிய பிள்ளையவர்கள், பல அறிஞர்களையும் நாடிக் கல்வி கற்றதோடு அல்லாமல், இரவில் பிச்சை எடுக்கும் இராப்பிச்சைக்காரனைக் கூட விடாமல் அவனிடமிருந்தும் பல பாடல்களைக் கற்றார். தண்டி அலங்காரத்தை இவ்வாறே தெருத்தெருவாக அலைந்து திரிந்த ஒரு பரதேசியிடம் கற்றார்.