Home HistoryErode திருச்செங்கோடு

திருச்செங்கோடு

by Dr.K.Subashini
0 comment

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்

கட்டுரையும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி

 

நான் இந்த வருடம் (ஜனவரி 2012ல்) தமிழகம் சென்றிருந்த போது ஈரோட்டில் சில நாட்கள் இருந்ததைத் பற்றி வேறு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். ஈரோட்டில் எனது திட்டப்படி ஒரு சில இடங்களைச் சென்று பார்த்து வர வேண்டும் என்ற ஒரு பட்டியல் இருந்தது. ஈரோட்டில் இருந்த சமயம் திரு.திவாகருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஈரோட்டில் இருந்தால் நிச்சம் திருச்செங்கோடு கோவிலைச் சென்று பார்த்து வாருங்கள் என்று குறிப்பிட்டார். திருமதி பவளா, திரு.ஆரூரன் இவர்கள் இருவருக்கும் இதனைத் தெரிவித்தபோது பயணத்தின் இறுதி நாள் காலையில் இக்கோவில் சென்று வரலாம் என்று ஏற்பாடு செய்தனர்.

 

அடிப்படையில் எந்த ஏற்பாடும் செய்யாமலேயே இந்தக் கோவிலுக்குச் செல்வோம் என்பது முடிவானது. அதிலும் திரு.திவாகர் வேறு சொல்கின்றார். நிச்சயம் மனதிற்கு நிறைவளிக்கும் ஒரு பயணமாக இது அமையும் என்ற நம்பிக்கை மனதில் இருந்தது.
இக்கோவில் மூலஸ்தானத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் அமைந்திருக்கின்றதெனவும் திருச்செங்கோட்டு முருகன் பிரசித்தி பெற்றவர் என்பதும் இத்தலம் தமிழகத்தின் முக்கிய ஸ்தலங்களின் பட்டியலில் இடம் பெரும் ஒன்று என்றும் கொஞ்சம் விபரங்கள் தெரிந்து கொண்டேன். காலை உணவு முடித்து என்னுடன் கண்ணன், ஆரூரன், பவளா நால்வரும் திருச்செங்கோடு புறப்பட்டோம்.
மலைமேல் அமைந்திருக்கும் கோயில். படிகளில் ஏறி கோயிலை அடையலாம். அல்லது வாகனங்கள் செல்ல அமைக்கபப்ட்டிருக்கும் சாலையில் சென்றும் இறைவனை தரிசிக்கலாம். நேரம் குறைவாக இருந்தபடியால் வாகனத்தில் மேலே கோயில் வரைக்கும் செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பாதையிலேயே சென்று கோயிலை அடைந்தோம். கீழிருந்து படிகளில் நடந்தே வருவதற்கும் படிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு நகரிலிருந்து இந்தக் கோயில் ஏறக்குறைய 18 கி.மீ தொலைவில் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருப்பது செங்கோட்டு முருகன் ஆலயமும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும் ஆகும். மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இத்தலத்தில் இறைவி தவம் செய்து இறைவனது திருமேனியில் ஒரு பகுதியைத் தம்முடையதாகப் பெற்றார் என்று புராணம் கூறுவதாகவும் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் இக்கோவில் பாடப்பட்டுள்ளதாகவும் அருணகிரிநாதர் செங்கோட்டு வேலவனிடம் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார் எனவும் V.கந்தசாமி அவர்கள் தமிழ் நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

இக்கோவிலில் இன்னாள் காணப்படும் கட்டடப்பணி கி.பி 16ஆம் நூற்றாண்டில் திரியம்பக உடையாரால் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. மகா மண்டபம் சம்போஜி என்ற சங்கரிதுர்க் ஆளுநரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, சீயாலகட்டி முதலியால் நிறைவு செய்யப்பட்டது. திருச்செங்கோட்டிற்கு அருகிலுள்ள மோரைத் தலநகராக்கிக் கொண்டு சிற்றரசர்கள் ஆட்சி புரிந்தனர். மோரைச் சேர்ந்த ஆத்தப்ப நல்லத்தம்பி காங்கேயன் என்பவரால் கிபி. 1599இல் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் நிருத்த மண்டபம் கட்டப்பட்டது. இக்கோவிலின் மூலவர் வலப்பாதி ஆண் உருவத்தையும் இடப்பாதி பெண் உருவத்தையும் கொண்ட அர்த்த நாரீஸ்வரர் ஆவார் என்று இந்த நூல் மேலும் விளக்குகின்றது.
தெய்வங்கள்
இக்கோயிலின் ப்ரதான தெய்வம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம். கோவிலுக்குள் செல்லும் போது உடனே இப்பகுதிக்கு வர முடியாது. கோயிலின் வாசல் புறத்திலிருந்து சுற்றி வந்து முதலில் முருகன் சன்னிதியைப் பார்த்து கடந்து இந்த அர்த்தநாரீஸ்வரர் இருக்கின்ற கோவில் பகுதிக்கு வரலாம்.
அர்த்தநாரீஸ்வரரைப் போல திருச்செங்கோட்டு வேலவனும் முக்கிய தெய்வமாக இக்கோயிலில் அமைந்திருக்கின்றார். முருகனுக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக இக்கோவிலின் மற்றொரு முக்கிய தெய்வமாக நாகேஸ்வரர் அமைந்திருக்கின்றார். தனிச் சன்னிதியாக மற்ற ஆலயங்களில் இல்லாத புதுமையாக ஐந்தலை நாகங்கள் பின்னிப் பிணைந்தது போன்ற வடிவத்தில் அமைந்த ஒரு பகுதி உள்ளது.
இதைத் தவிர சிவலிங்கம், நடராஜர், அம்மன், பிள்ளையார் சன்னிதிகளும் உள்ளன. ஒரு பகுதியில் 63 நாயன்மார்களின் சிலைகளும் வரிசையாக வைக்கப்பட்டு வழிபாடு செய்யபப்டுகிறது.
தல விருட்சம்
இக்கோவிலின் தல விருட்சம் இலுப்பை மரம். இம்மரம் கோவிலின் வடக்குப் பகுதியில் நடராஜர் சன்னிதிக்கும், சிவலிங்க சன்னிதிக்கும் இடையில் அமைந்துள்ளது.
சிற்பக்கலை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளிமீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 சிற்ப வேலைப்பாடு மிக்க ஒற்றைக் கற்றூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
செங்கோட்டு வேலவர் சந்திதி முன்னுள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளி முதலிய ஒற்றைக் கல்லிலாலான சிற்பங்கள் உள்ளன. இம்மண்டபத்தில் கூரைப் பகுதியில் கல்லிலானா தாமரை மலர்கள், மலை, கிளிகள், கற்சங்கிலிகள் பறவைகள், முனிவர்கள் போன்ற சிற்ப விநோதங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாகேஸ்வரரின் கருவறை சிற்ப வேலைப்பாடு மிக்கது. கருவறை முன்மண்டபத்தில் குதிரை அல்லது யாழி மீதுள்ள வீரர்களில் கற்றூண் சிற்பங்கள் உள்ளன. கூரைப்பகுதியில் கவிழ்ந்த தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது.
எல்லா தூண்களையும் கவின்மிகு சிற்ப வடிவங்கள் அலங்கரிக்கின்றன. சுவாமி சன்னிதிகளின் சுவர்களில் மிக நுணுக்கமான கலைவேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓரளவு சிற்ப வடிவங்கள் தாரமங்கலம் கோயில் அமைப்பை ஒத்ததாகவும் அமைந்திருக்கின்றது என்றே எனக்குத் தோன்றியது.
செங்கோட்டு வேலவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது வேறு கோவில்களில் நான் இதுவரை பார்த்திராத ஒரு வியக்க வைக்கும் கலைப்படைப்பு.
அர்த்தநாரீஸ்வரர்
கொங்கு நாட்டில் காவிரி நதியின் வடகரையில் அமைந்திருக்கும் இந்தச் சிவத்தலம் கொங்கேழ் சிவத்தலங்களில் ஒன்று என்று சிறப்பித்துக் கூறப்படுவது. இக்கோயிலின் சிறப்புக்கள் பலவற்றில் முதன்மையானதும் பக்தர்கள் வியக்கும் தனமையுடையதுமாக அமைந்திருப்பது இக்கோவிலின் மூலஸ்தான தெய்வமாக வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவம்.
சிவனை மாதொருபாகன், மங்கைபங்கன் என்றும் அழைப்போம். அதனை இங்கே உருவமாகப் படைத்து வழிபாட்டிற்கு வைக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் இறைவனை மாதொரு பாகன் என்று குறிப்பிட்டு பல பாடல்கள் பாடியுள்ளார். அது இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திற்கும் சிறப்பாகப் பொருந்துவதாக உள்ளது.
வெந்தவெண்ணீறணிந்து விரிதூறிகழ் மார்மினல்ல
கந்தணவும் விரளொரு பாகம் மமர்ந்தளு
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வந்தணனைத் தொழுவா ரவல மறுப்பரே 
-தேவாரம்
தலம், பெயர்க்காரணம்
திருச்செங்கோட்டு ஆலயம் ஒரு தெய்வத்தை மட்டும் சிறப்பிக்கும் நிலையில்லாது சிவஸ்தலம், செங்கோட்டு முருகனின் தலம், நாகதேவர் ஸ்தலம் என மூன்று வகையில் இக்கோயில் மக்களால் அறியப்படுகின்றது. மலைமேல் எழுந்தருளியிருக்கும் கோயில்கள் தமிழகத்தில் பல உள்ளன.  அவற்றில் வித்தியாசமாக அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் அம்மையும் அப்பனும் ஒருங்கே அமையப்பெற்ற மலைமேல் அமைக்கப்பட்ட ஒரு தெய்வீகத்தலமாக இதனைக் குறிப்பிடலாம்.
பிற பெயர்கள்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர ஆலயம் என்பது மட்டுமல்லாது இப்புண்ணியத் ஸ்தலத்திற்கு மேலும் பல பெயர்கள் அமைந்திருக்கின்றன.
  • கொடிமாடச் செங்குன்றம்
  • தெய்வத்திருமலை
  • நாககிரி
  • அரவாகிரி
  • உரகவெற்பு
  • கட்செவிக் குன்றூர்
  • பணிமலை
  • தந்தகிரி
  • நகபூதரம்
  • புசகபூதரம்
  • நாகாசலம்
  • நாகமலை
  • முருகாசலம்
  • தாருகாசலம்
  • திருவேரகம்
என்ற பெயர்களும் வழங்கப்பெற்றுள்ளன என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.
திருச்செங்கோடு என்பதன் பொருளை அழகுமிக்க சிவந்த நிறம் வாய்ந்த குன்று என்று பொருள் காணலாம்.
நாகதேவருக்கு இங்கு ப்ரத்தியேகமான சன்னிதானம் அமைந்திருப்பதால் நாகத்தின் பெயரை உள்ளடக்கிய வகையில் நாககிரி, அரவகிரி, உரகவெற்பு போன்ற பெயர்களும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று.
இக்கோயில் அமைந்திருக்கும் மலை
  • கோதமலை
  • முத்தலை
  • கடகமலை
  • துர்க்கைமலை
  • முத்திமலை
  • வாயுமலை
  • பொறுதுமலை
  • வந்திமலை
  • அழகுமலை
  • தாருமலை
  • சூதமலை
  • தவமலை
  • அனந்தன்மலை
  • தங்கமலை
  • யோமலை
  • மேருமலை
  • கொங்குமலை
  • கத்தகிரி
  • ஞானகிரி
  • இரத்தகிரி
  • கோணகிரி
  • பிரம்மகிரி
  • தீர்த்தகிரி
  • தர்மகிரி
  • கந்தகிரி
  • பதுமகிரி
  • தேதுகிரி
என்று தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றது என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.
மலையும் அதன் வடிவமுமும்
இம்மலையின் தோற்றம் குறிப்பாக மலையின் சிகரத்தின் தோற்றம் தூரத்திலிருந்து காண்பவர்களுக்குச் சிவலிங்கத்தின் அமைப்பைப் போன்று காட்சியளிக்கின்றது. கீழ்ப்பகுதி ஒரு பெரும்பாம்பு கீழ்த்திசையில் தனது பெரும்படத்தை அகல விரித்து இரு கூறாக உயர்ந்தும் ஒரு புறத்தில் பாம்பின் உடல் போலச் சிறுத்திருப்பது போலவும் காட்சியளிக்கின்றது. இம்மலை சிவப்பு மஞ்சள் கலந்த நிறமாகவும் தோன்றுகின்றது. காலை சூரியனின் எழில் கிரணங்கள் மலையின் மீது படும் போது இவ்வர்ணக்கலவை எழில் மிகு காட்சியாக கண்களுக்கு விருந்தளிப்பதை நேரில் பார்த்து ரசித்தோம்.
ஆலய ஐதீகம்
அதீசேடனும் வாயுவும் தங்கள் தங்கள் பலத்தைக் காட்ட நேர்ந்த சொற்போரில் இங்கு வந்து வீழ்ந்த ஆண் நாகச்சிகரமும்,காமதேனு பரமேஸ்வரன் அருள் பெற்று கொண்டு வந்த பெண் நாகச் சிகரமும் சிவனும் உமையும் போலக் கூடிப்பிரியாதிருக்கின்றன என்பது இங்கு ஒரு ஐதீகமாகும்.
நாககிரி பால் வண்ணமும் மற்றொரு பாகம் பச்சை வண்ணமுமாக ஓர் பாகம் விளங்குவது உமை சிவன் இவர்களின் நிறங்களைப் போல் பிரகாசிக்கின்றன என்பதும் மற்றோர் ஐதீகம் (திருச்செங்கோட்டு ஸ்தல புராணம்)
தெய்வ வடிவங்களின் அமைப்பு
இக்கோவிலின் அர்த்தநாரீஸ்வர வடிவம் மேற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்திலும், முருகப் பெருமான் கிழக்கு முகமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்திருவுருவங்கள் கற்சிலையோ செம்பு வெண்கலம் பித்தளை போன்ற உலோகங்களோ அல்லாமல் மகத்தான யோகம் வாய்ந்த சித்தர் மூர்த்திகளால் ஆக்கப்பட்ட ஒரு வகை அமைப்பு என்று இக்கோயில் தலபுராணம் குறிப்பிடுகின்றது.
கல்வெட்டு
அர்த்தநாரீஸ்வரர் சிலை அருகில் மரகதலிங்கம் ஒரு பேழையுள் வைத்து பூஜிக்கப்படுகின்றது. மேற்கு திசை நோக்கிய திருமுகம் அமைக்கப்பட்டிருப்பதால் மகாமண்டபத்துக்கு மேற்கு வாயில் அமைக்கப்படவில்லை. மேற்கு மண்டபத்தின் கற்சுவற்றில் ஒன்பது துளைகளுள்ள சித்திரப் பலகணியொன்று செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு வருவதற்கு தெற்குப் பகுதி வாயிலிலிருந்து உள்ளே வந்து இறைவனை தரிசிக்க வேண்டும். இப்பலகணியின் முன்னே விமானம், சபா மண்டபம், நந்தி மண்டபம், கொடிக் கம்பம் உயர்ந்த பலி பீடம், மேற்கு திருவாயில், திருக்கதவு முதலியன அமைக்கப்பட்டுள்ளன. இப்படி அடைப்புக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களில் இந்த ஒன்பது துளைகளினுள்ளாகச் சென்று அர்த்தநாரீஸ்வரக் கடவுளின் திருப்பாதங்களைத் தொட்டு திருமுடியுங் கண்டு மறைகின்றது என்று தல புராணம் குறிப்பிடுகின்றது.
ஆலயத்தின் அடிவாரம்
ஆலயத்திற்கு மலைமேல் வாகனம் செல்ல சிறந்த சாலை அமைக்கப்படிருந்த போதிலும் பக்தர்கள் நடந்து செல்ல நினைத்தால் அவர்களின் பயணம் சிறப்பாக அமையும் வகையில் கைப்பிடிச் சுவர்களும் பாதைகளும் சீர்செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறிச் செல்ல சிறிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன.
அடிவாரத்திலேயே கஜமுகப்பட்டி விநாயகர் ஆலயம் மலையின் முதற்படியைச் சார்ந்து ஒரு கிழுவை மரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருக்கின்றார். விநாயகர் சிலையின் இரு புறங்களிலும் இரும்பினால் ஆன வேல்களும் நாகர் கற்சிலைகளும் இருக்கின்றன. இங்கிருந்துதான் மலை மீது செல்வதற்குக் கற்படிகள் தொடங்குவதால் இது கஜமுகப்படி என அழைக்கப்படுகின்றது.
இங்கிருந்து மலை மேல் உள்ள இராய கோபுரம் மண்டபம் வரை செல்ல 1206 படிகளை கடக்க வேண்டும். கடக்கும் வழியில் உள்ள மண்டபங்களை இனி காண்போம்.
1. காளத்தி சுவாமிகள் திருமடம் – அளவில் மிகப் பெரிய மண்டபம் இது. இங்கே பக்தர்கள் அருந்த தண்ணீர் தொட்டியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
2.திருமுடியார் மண்டபம் – திருமுடியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிய மண்டபம். இக்குலத்து ஆண்கள் திருமுடிக்கவுண்டர் என்றும் பெண்கள் திருமுடித்தாசிகள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு ஆலயத் திருப்பணி செய்வதும் திருச்செங்கோட்டு திருப்பணிமாலையில் குறிப்பிடப்படுகின்றது. (பக் 87) இம்மண்டபம் திருமுடித்தரசி சேனாபதி வேலாள் என்பவரால் கட்டப்பட்டது (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை -வெண்பா 341 )
3.தயிலி மண்டபம்– இம்மண்டம் தயிலி எனும் ஒரு அறச்செல்வியால் கட்டப்பட்டது (திருச்செங்கோட்டு திருப்பணிமாலை – செய்யுள் 432). இம்மண்டபத்தின் கிழக்குப் புறத்தில் ஒரு வீரபத்திரர் கோயில் உள்ளது. சற்று அருகாமையில் படுத்திருக்கும் ஒரு நந்தி உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு இறைவனை தரிசிக்க வருவோர் அம்மாவாசை நாளில் நந்தியின் முகம், கொம்பு, திமிழ், முதுகு ஆகிய இடங்களில் வெண்ணெய் வைத்து வழிபடுகின்றனர். இந்த நந்தி மண்டபத்திலிருந்து 28 படிகளைக் கட்ந்து சென்றால் கற்பாறையின் மீது 60அடி நீளத்தில் பெரியதோர் உருவத்தில் ஐந்து தலை பாம்பு வடிக்கப்பட்டுள்ளது. பாம்பின் நடுவில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
4.செங்குந்த சின்ன முதலியார் மண்டபம் – இது திருவாளர் சின்ன முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் யானைமுகப் பிள்ளயார் சிலையும் வீரம்மிக்க நவவீரர்கள் ஒன்பதினர் திருவுருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
5. சிங்கத்தூண் மண்டபம் – செங்குந்தர் மண்டபத்திலிருந்து 157 படிகளைக் கடந்து சென்றால் இந்த மண்டபத்தை அடையலாம்.
மிக அழகிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்கள் இந்த மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இங்கிருந்து 62 படிகள் ஏறிச் சென்றால் அடுத்து வருவது அறுபதாம் படி. இவை சத்தியப் படிகள் என்றும் வழங்கப்படுகின்றன.மக்களில் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டால் இங்கு வந்து இப்படிகளில் சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது. இந்த 60 கற்படிகளையும் வெட்டுவித்தவர்கள் திருச்செங்கோடு மோழைக் கவுண்டன்பாளையம் காட்டு வேட்டுவர்கள். இந்த சத்தியச் செய்தியை இங்கு வருகை புரிந்த அருணகிரினாதர் திருப்புகழில்
பாடல் 601 – திருச்செங்கோடு
தத்த தாத்தத் தத்த தாத்தத்
தத்த தாத்தத் …… தனதான
 
 
அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
தத்தை மார்க்குத் …… தமராயன் 
 
பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
றச்சு தோட்பற் …… றியவோடும் 
 
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
சிக்கை நீக்கித் …… திணிதாய 
 
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
செச்சை சாத்தப் …… பெறுவேனோ 
 
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
கொற்ற வேத்துக் …… கரசாய 
 
குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
பொற்ப வேற்கைக் …… குமரேசா 
 
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
தெட்டு மேற்றுத் …… திடமேவும் 
 
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
சத்ய வாக்யப் …… பெருமாளே.
எனக் குறிப்பிடுகின்றார்.
இச்சத்தியப்படிக்குக் கீழே சோழமன்னன் பரகேசரிவர்மன் ஒருவனின் 20ம் ஆட்சி ஆண்டில் ஒரு நந்தா விளக்கு வைக்க பொன்
தானம் கொடுத்த செய்தி கல்வெட்டாக உள்ளது.
6. அறுபதாம்படி மண்டபம் – இது மோரூர் கொங்கு வேளாளர்களில் கண்ணகுலம் என்னும் ஒரு பிரிவினரால் கட்டப்பட்ட மண்டபம். பிற்காலத்தில் இவர்கள் இம்மணடபத்தைச் சாணார் (நாடார்) என்னும் சமூகத்தினருக்கு உரிமையாகும்படி விட்டுவிட்டதாக தலபுராணம் விவர்க்கின்றது.
இம்மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அமர்ந்த நிலையிருக்கும் முருகன் கற்சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்திலிருந்து மேலே சென்றால் 10ம் படியிலிருந்து 21ம் படிவரைக்கும் இடையிலுள்ள சதுரமான பாறை மீது வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில் ஜடவர்ம சுந்தர பாண்டிய தேவர் பத்தாம் ஆண்டில் பூமிதானம் செய்யப்பட்ட செய்தி காணப்படுவதோடு செங்கோட்டு வேலவரை “சுப்பிரமயிப் பிள்ளையார்” என்றும் குறிப்பிட்டுள்ளது. இக்கல்வெட்டு சிதைந்த நிலையில் இருக்கின்றது.
7.செட்டிக்கவுண்டன் மண்டபம் – இம்மண்டபம் குமாரபாளையம் என்கின்ற மண்டபப்பாளையம்கொங்குவேளாளர் தூரகுலத்து மசவேலகவுண்டன் மனைவி வள்ளியம்மாள் என்பவர் கட்டத்தொடங்கினார். இப்பணி முற்றுப்பெறாத நிலையில் குமரமங்கலத்தைச் சார்ந்த சிவநேசர் குமரபூபதி செட்டிகவுண்டன் என்பவர் இம்மணடபத் திருப்பணியை நிறைவேற்றினார். (திருப்பணிமாலை 338ம் செய்யுள்). இதே சிவபக்தர் மலைமேலுள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் பகுதிகளிலும் சில திருப்பணிகளைச் செய்துள்ளார்.
8.தேவரடியாள் மண்டபம் -செட்டிக்கவுண்டன் மண்டபத்திலிருந்து 78 படிகள் ஏறிச் சென்றால் அடுத்து வருவது தேவரடியார் மண்டபம். இவர்கள் தம்மை உருத்திரக் கணிகையர் என்று கூறிக் கொள்கின்றனர் என்று தலபுராணம் விவரிக்கின்றது. இம்மண்டபத்தைக் கட்டிய கணிகையின் பெயர் குருவம்ம மாணிக்கம் என்பதாகும். இவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். தரும சிந்தனையுடைய இக்கணிகையே இம்மண்டபத்தைக் கட்டினார். (திருப்பணிமாலை 345ம் செய்யுள்).
9. இளைப்பாறு மண்டபம் – இது இதுவரை குறிப்பிடப்பட்ட 7 மண்டபங்களையும் விட பெரியது. இம்மண்டபத்தின் தெற்குப் பகுதியில் விநாயகருக்கு ஒரு சிறு ஆலயம் அமைந்துள்ளது.
10. கோபுரவாசல் மண்டபம் – இளைப்பாறு மண்டபத்திலிருந்து தொண்ணூற்றொன்பது படிகள் மேலே ஏறிச் சென்றால் இந்த மண்டபததை அடையலாம். இம்மண்டபம் கி.பி.1654ஆம் ஆண்டில் சீயால கட்டி முதலியாரால் திருப்பணி தொடங்கப்பட்டு சேலம், இராசிபுரம், விழியகுலத்தாரால் பூர்த்தி செய்யப்பட்டது. இம்மண்டபத்தின் மேற்குப் பகுதியில் பெரிய சிறிய இரண்டு விநாயகர் கற்சிலைகளை எழுந்தருளச் செய்திருக்கின்றனர். இம்மண்டபத்தில் மலைமேல் நிகழும் பூஜா காலங்களை அறிவிக்கும் ஓசை மிகுந்த வெங்கல சேகண்டி ஒன்றும் தொங்கவிடப்பட்டிருக்கின்றது.
இந்த 10 மண்டபங்களையும் கடந்து கோபுர வாசலைக் கடந்து கோயிலுக்குள் செல்லும் போது மிகப்பெரிய கலைநுணுக்கம் வாய்ந்த கோபுரக்கதவுகளைக் கடந்து கோயிலுக்குள் செல்லலாம்.
கோயில் அமைப்பில் மிகவும் வித்தியாசமான அமைப்பைக் கொண்ட கோயில் இது. சிறந்த கைதேர்ந்த சிற்ப வேலைப்பாடுகள் இக்கோயிலின் எல்லா பகுதிகளிலும் நிறைந்திருக்கின்றன.
இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இக்கோயில் தனித்துவத்துடன் விளங்குகின்றது என்பதை இங்கு வந்து செல்வோர் நிச்சயம் உணர முடியும்.
திருமதி.பவளசங்கரி, சுபா
டாக்டர். நா.கண்ணன், ஆரூரன்

 


 

திருச்செங்கோட்டு இறைவனுக்கான பாடல்கள் மேலும்…

 

 

கந்தர் அலங்காரம்

 

23. தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செஞ்சுடரே

வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்

ஐவர்க்கு இடம் பெறக் கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு

கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.

 

நன்றி: ஆரூரன்

 

 

 

நன்றி.திரு.நரசய்யா

 

 

 

அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் சொல்கிறார்:

 

விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா

மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்புசெய்த  பழிக்குத்துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி

வழிக்குத்துணை வ டிவேலும் செங்கோடன் மயூரமுமே!

 

 

இதைத் தவிர திருப்புகழில் ஐந்து பாடல்கள் அவர் திருச்செங்கோடு குறித்துப் பாடியுள்ளார்.

 

1.

அன்பாக வந்து உன்றாள் பணிந்து

ஐம்பூத மொன்ற …… நினையாமல் 

 

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க

ளம்போரு கங்கள் …… முலைதானும் 

 

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று

கொண்டாடு கின்ற …… குழலாரைக் 

 

கொண்டே நினைந்து மன்பேது மண்டி

குன்றா மலைந்து …… அலைவேனோ 

 

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த

வம்பார் கடம்பை …… யணிவோனே 

 

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்

வம்பே தொலைந்த …… வடிவேலா 

 

சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ

செஞ்சேவல் கொண்டு …… வரவேணும் 

 

செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த

செங்கோ டமர்ந்த …… பெருமாளே.

 

2

காலனிடத் …… தணுகாதே 

 

காசினியிற் …… பிறவாதே 

 

சீலஅகத் …… தியஞான 

 

தேனமுதைத் …… தருவாயே 

 

மாலயனுக் …… கரியானே 

 

மாதவரைப் …… பிரியானே 

 

நாலுமறைப் …… பொருளானே 

 

நாககிரிப் …… பெருமாளே.

3

கொடிய மறலியு மவனது கடகமு

மடிய வொருதின மிருபதம் வழிபடு

குதலை யடியவ னினதருள் கொடுபொரு …… மமர்காண 

 

குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு

மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்

கொடியு மகிலமும் வெளிபட இருதிசை …… யிருநாலும் 

 

படியு நெடியன எழுபுண ரியுமுது

திகிரி திகிரியும் வருகென வருதகு

பவுரி வருமொரு மரகத துரகத …… மிசையேறிப் 

 

பழய அடியவ ருடனிமை யவர்கண

மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு

பரவ வருமதி லருணையி லொருவிசை …… வரவேணும் 

 

சடில தரவிட தரபணி தரதர

பரசு தரசசி தரசுசி தரவித

தமரு கமிருக தரவனி தரசிர …… தரபாரத் 

 

தரணி தரதநு தரவெகு முககுல

தடினி தரசிவ சுதகுண தரபணி

சயில விதரண தருபுர சசிதரு …… மயில்வாழ்வே 

 

நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ

எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி

நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ …… நெடுவானும் 

 

நிலனும் வெருவர வருநிசி சரர்தள

நிகில சகலமு மடியவொர் படைதொடு

நிருப குருபர சுரபதி பரவிய …… பெருமாளே.

 

4

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு

பட்சிந டத்திய …… குகபூர்வ 

 

பச்சிம தட்சிண வுத்தர திக்குள

பத்தர்க ளற்புத …… மெனவோதுஞ் 

 

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி

ருப்புக ழைச்சிறி …… தடியேனுஞ் 

 

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி

சித்தவ நுக்ரக …… மறவேனே 

 

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி

கற்கவ ணிட்டெறி …… தினைகாவல் 

 

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி

கட்டிய ணைத்தப …… னிருதோளா 

 

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத

கப்பனு மெச்சிட …… மறைநூலின் 

 

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய

சர்ப்பகி ரிச்சுரர் …… பெருமாளே.

 

5

புற்புதமெ னாம அற்பநிலை யாத

பொய்க்குடில்கு லாவு …… மனையாளும் 

 

புத்திரரும் வீடு மித்திரரு மான

புத்திசலி யாத …… பெருவாழ்வு 

 

நிற்பதொரு கோடி கற்பமென மாய

நிட்டையுடன் வாழு …… மடியேன்யான் 

 

நித்தநின தாளில் வைத்ததொரு காதல்

நிற்கும்வகை யோத …… நினைவாயே 

 

சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத

சக்ரகதை பாணி …… மருகோனே 

 

தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற

வைத்தவொரு காழி …… மறையோனே 

 

கற்புவழு வாது வெற்படியின் மேவு

கற்றைமற வாணர் …… கொடிகோவே 

 

கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால

கற்பதரு நாடர் …… பெருமாளே.

 

(நன்றி திரு கோபாலசுந்தரம்; கெளமாரம்)

 

 

 

You may also like

Leave a Comment