Home Tamilmanigal திருக்குறள் வீ.முனிசாமி

திருக்குறள் வீ.முனிசாமி

by Dr.K.Subashini
0 comment

குறளாக வாழ்ந்தவர் திருக்குறள் வீ.முனிசாமி

கோ.செங்குட்டுவன்


 

 

வானொலியில் திருக்குறள் அமுதம் பருக அதிகாலையில் நம்மை எழுப்பிய "ஏ மனிதா" என்ற முதல் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தக் கணீர் குரலுக்குச் சொந்தக்காரர் திருக்குறளார் வீ.முனிசாமி.

 

விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை – வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

 

திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்த அவர், திருக்குறளை நகைச்சுவையாகவும் நயமாகவும் அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனும் முயற்சியில் ஈடுபட்டார்.1935ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய திருக்குறள் பரப்பும் திருக்குறளாரின் பணி, அரை நூற்றாண்டையும் கடந்தது.

1941ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள்

  • அ.கி.பரந்தாமனார்
  • நடேசனார்
  • வடிவேலனார்

ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார்.

 

தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள்

  • இரா.பி.சேதுப் பிள்ளை
  • சுப்பிரமணியப் பிள்ளை
  • இராசாக்கண்ணனார்

உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

 

தந்தை பெரியார் 1948இல் சென்னை இராயபுரத்தில் நடத்திய திருக்குறள் மாநாட்டில்,

  • திரு.வி.க.
  • தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
  • "கல்விக்கடல்" சக்ரவர்த்தி நயினார்
  • "நாவலர்" நெடுஞ்செழியன்

ஆகியோருடன் பங்கேற்று திருக்குறளார் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.

 

புராண, இதிகாச நூல்களை சோறு, குழம்பு போலவும், திருக்குறளை ஊறுகாய் போலவும் வைத்துக்கொண்டிருந்த அக்காலத்தில், திருக்குறளை சோறாகவும் குழம்பாகவும் வைத்துக்கொண்டு, புராண இதிகாசங்களை ஊறுகாயாக வைத்துக்கொள்வதுதான் முறையான செயல் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்பதையே தனது வாழ்வின் அடிப்படை நோக்கமாகக் கொண்டார் திருக்குறளார் வீ.முனிசாமி.

 

பல்பொடி, கண்ணாடி, கடிகாரம் போல் திருக்குறளும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய திருக்குறளார், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார்.

பாமரர்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையிலான அவரது பேச்சில் நகைச்சுவை ததும்பியது.

 

"இந்த உலகத்தில் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும். ரொம்ப வருடங்களாக இங்கிருந்த ஆலமரம் புயல் காற்றிலே விழுந்துவிட்டது.

 

இங்கிருந்த பெரிய கட்டடம் மழை பெய்து இடிந்துவிட்டது. அதோ போகிறாரே 10 வருடங்களுக்கு முன்பு அவர் இலட்சாதிபதியாக இருந்தார்.

 

இப்போ, எல்லாம் செலவழித்து ஏழையாகிவிட்டார். இது அழியும் செல்வம். ஆனால் கல்வி அப்படிப்பட்டதல்ல. அவர் 10 வருடங்களுக்கு முன்பு எம்.ஏ., பாஸ் செய்திருந்தார். இப்போது அது எல்லாம் செலவாகி எஸ்.எஸ்.எல்.சி. ஆகிவிட்டார் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்".

 

"கேடில் விழுச்செல்வம்" என்ற குறளுக்கு, திருக்குறளார் அளித்த எளிய விளக்கம் இது.

 

அதே போல் "எல்லோரிடத்திலும் எல்லாவிதமான கேள்விகளும் கேட்டுவிடக்கூடாது. எந்த வருடத்தில் பிறந்தீர்கள் என்று கேட்கலாம்.

 

எத்தனை வருடங்கள் இருக்கலாம் என்று இருக்கிறீர்கள் என்று கேட்கக்கூடாது. யார் யாரோ போய்விட்டாங்களே, நீங்க எப்போது பேறதாயிருக்கீங்க என்று கேட்டுவிடக்கூடாது" என்கிற திருக்குறளாரின் பேச்சு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

அதே நேரம், சிரித்து மறக்கப்படாது சிந்திக்க வேண்டும்" என வலியுறுத்தினார் திருக்குறளார்.

 

இலக்கியம், இலக்கணம் என்றாலே முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் கூட, திருக்குறளாரின் பேச்சின் இரசிகர்களானார்கள்.

 

வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது.

 

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் மேலோங்கியிருந்த அக்காலக்கட்டத்தில் திருக்குறளாரின் திருக்குறள் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

  • பெரியார்
  • பாரதிதாசன்
  • ப.ஜீவானந்தம்
  • காமராசர்
  • டாக்டர் மு.வ.
  • கி.ஆ.பெ.விசுவநாதம்
  • இரா.பி.சேதுப்பிள்ளை
  • ந.மு.வேங்கடசாமி நாட்டார்
  • "நாவலர்" சோமசுந்தர பாரதியார்
  • குன்றக்குடி அடிகளார்
  • "கவியோகி" சுத்தானந்த பாரதி
  • உ.வே.சா.
  • "மகாவித்வான்" தண்டபாணி தேசிகர்
  • சுவாமி சகஜானந்தா
  • சுவாமி விபுலானந்த அடிகளார்
  • சர்.பி.டி.இராசன்
  • சி.பா.ஆதித்தனார்
  • "கலைவாணர்" என்.எஸ்.கிருஷ்ணன்

உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.

 

திருக்குறளாரின் பணியை "குறட்பயன் கொள்ள நம் திருக்குறள் முனிசாமி சொல் கொள்வது போதுமே"
என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

1949ஆம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார். மேலும், "குறள் மலர்" இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் தில்லியிலும், மும்பையிலும், கடல்கடந்து மலேசிய, சிங்கப்பூர் நாடுகளிலும் திருக்குறளாரின் திருக்குறள் பரப்பும் பணி தொடர்ந்தது.

 

நாடாளுமன்ற உறுப்பினராக (1952 – 1957) இருந்தபோது, நாடாளுமன்றக் கூட்டங்களில் திருக்குறளுடன் பேச்சைத் தொடங்கினார்.

 

நாடாளுமன்றப் பதிவேடுகளில் தனது பெயருக்கு முன்பு "திருக்குறளார்" என்பதை இடம்பெறச் செய்தார்.

 

நாடாளுமன்றத்தில் அப்போது மக்களவைத் தலைவராய் (சபாநாயகர்) இருந்த அனந்தசயனம் அய்யங்கார், திருக்குறளார் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நல்ல ஆர்வமும், ஊக்கமும் கொடுத்தார். இக்காலகட்டத்தை தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வாழும் தமிழர்களிடையே குறட்பாக்களை எடுத்துப் பேசுவதற்கு திருக்குறளார் பயன்படுத்திக் கொண்டார்.

 

1981ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், திருக்குறளுக்காக ஒரு நாளை ஒதுக்கிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.அந்த அரங்கிற்கு திருக்குறளாரை தலைமையேற்று நடத்தச் செய்தார். தமிழக அரசு தொடங்கிய திருக்குறள் நெறி பரப்பு மையத்திற்கு தொடர்ந்து நான்கு முறை இயக்குநராக நியமிக்கப்பட்டார் திருக்குறளார்.

 

  • வள்ளுவர் வழிப்பயணம்
  • வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப் பாதை
  • வள்ளுவர் பூங்கா
  • வள்ளுவரும் பரிமேலழகரும்
  • திருக்குறள் இன்பம்
  • வள்ளுவரைக் காணோம்
  • திருக்குறள் காமத்துப்பால் பொழிப்புரை
  • வள்ளுவர் ஏன் எழுதினார்
  • வள்ளுவர் காட்டிய வழி

என 30 நூல்களைப் படைத்திருந்தாலும், உலகப் பொதுமறை – திருக்குறள் உரைவிளக்கம், திருக்குறளாருக்கு அழியாப்புகழைக் கொடுத்தது.

 

இதுபோன்ற விளக்க நூல் இதுவரை திருக்குறளுக்கு வெளிவரவில்லை என்ற சிறப்பைப் பெற்றது.

 

  • தமிழ்மறைக்காவலர்
  • திருக்குறள் கேசரி
  • முப்பால் வித்தகர்
  • திருக்குறள் இரத்தினம்
  • நகைச்சுவை இமயம்

என ஏராளமான பட்டங்கள் உலகத் தமிழர்களால் வழங்கப்பட்டன.

 

ஆனாலும், 23.1.1951இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறு நிலமன்னர்  கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் முதன் முதலில் அளித்த பட்டமான "திருக்குறளார்"  எனும் பட்டமே இவருக்கு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.திருக்குறள் வகுப்புகள் நடத்தியும்,  தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்து,  வள்ளுவர் வழி நடந்த திருக்குறளார் வீ.முனிசாமி 1994ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி  இவ்வுலக வாழ்வை நீத்தார்.

 

திருக்குறள் உள்ளவரை திருக்குறளார் வீ.முனிசாமியின் பெயரும் புகழும் நின்று நிலைக்கும்.

 

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment