திருமதி. கீதா சாம்பசிவம்
தஞ்சை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கேடிலியப்ப பிள்ளை என்னும் சைவ வேளாளர் வாழ்ந்து வந்தார். வேளாண்மை குலத்தொழில் என்றாலும் எல்லையற்ற சிவபக்தியால் அவ்வூரின் சிவஸ்தலத்தின் நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஆலயம் புதிய ஒழுங்குக்கு வந்தது. அப்போது நாயக்கர் ஆட்சிக் காலம். திருச்சியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் கடல் நீராடி வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க எண்ணி அங்கே வருகை புரிந்தார். கேடிலியப்ப பிள்ளை மன்னரை முறைப்படி வரவேற்று மரியாதைகள் எல்லாம் செய்து தரிசனமும் செய்து வைத்தார். கோவில் வழிபாட்டில் இருந்த நியமங்களையும், கோயிலின் சுத்தத்தையும், ஒழுங்கான முறையான நிர்வாகத்தையும் கவனித்த அரசர் நிர்வாகியான கேடிலியப்ப பிள்ளையின் கல்வித்தேர்ச்சியையும் கவனித்துக்கொண்டார். இத்தனை திறமை வாய்ந்த அவர் இருக்குமிடம் இதுவல்ல என முடிவு செய்த அரசர் அவரைத் திருச்சி அழைத்தார்.