Home History குன்றக்குடி குடைவரைக் கோயில்

குன்றக்குடி குடைவரைக் கோயில்

by Dr.K.Subashini
0 comment

படங்களும் கட்டுரையும்:

முனைவர்.க.சுபாஷிணி


 

குடைவரைக் கோயில்

 

குன்றக்குடியில் குன்றக்குடி மடத்தின் அருகாமையில் உள்ள குடைவரைக் கோயில் பொதுவாக பார்ப்பவர்களுக்குச் சிறு குகைக் கோயில் என்ற எண்ணத்தைக் கொடுத்தாலும் உள்ளே சென்று பார்க்கும் போது அங்குள்ள சிற்பங்களும், கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்க வடிவமும் மனதைப் பரவசப் படுத்தும் அற்புதச் சிற்பங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

துர்க்கை

கோயில் முழுக்க மலையைக் குடைந்து சிற்பிகள் உயர்ந்த பெரிய சிற்பங்கள் வடித்திருப்பது போல இச்சிறிய குடைவரைக் கோயில் முழுதும் பல கல்வெட்டுக்கள் நிறைந்திருப்பதும் இக்கோயிலின் சிறப்பாக அமைகின்றது. குறிப்பாக திருமகள் போல பெருநிலச் செல்வியும் எனத் தொடங்கும் ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்தியைக் காட்டும் கல்வெட்டு சோழ மன்னர்கள் செய்த தானங்கள் மற்றும் பல வரலாற்றுக் குறிப்புக்களை இன்றளவும் வெளிக்காட்டும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.
கல்வெட்டு
இந்தக் குடைவரைக் கோவிலின் மூலஸ்தானத்தில் அமைந்திருப்பது சிவலிங்க வடிவம். மலையிலேயே குடையப்பட்ட சிவலிங்கம் – பாறையைக் குடைந்து செதுக்கி இவ்வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தக் குடைவரைக் கோயிலில் ஒரு பக்கத்தில் வலம்புரி பிள்ளையாரின் சிலையும் வடிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் உள்ளதைப் போலவே இந்தக் கோயிலில் அமைந்துள்ள பிள்ளையார் சிலையும் வலம்புரிப்பிள்ளயார் வடிவமாக, இரண்டு கரங்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றது.
பழமையான இந்தக் கோயில் 7 அல்லது 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று இங்குள்ள எழுத்துக்களின் தோற்ற அமைப்பைக் கருத்தில் கொண்டு கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் பின்னர் வந்த சோழ மன்னர்களும் இக்கோயிலைப் பராமரித்து இங்கே தங்கள் கல்வெட்டுச் செய்திகளையும் செதுக்கி வைத்து இக்கோயிலில் தொடர்ந்து வழிபாடு நடந்து வர ஆவண செய்திருக்கின்றனர்.
வெளியேயிருந்து பார்க்கும் போது ஒரு கோயிலாகத் தெரிந்தாலும் இக்கோயிலுக்குள் மூன்று கோயில்கள் அமைந்திருக்கின்றன.
முதலில் அமைக்கப்பட்டுள்ள கோயிலில் மூலஸ்தானத்தில் இறைவன் சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றார். வெளிப்பக்கச் சுவற்றில் பாறையைக் குடைந்தே ஒரு புறம் துர்க்கையின் வடிவமும் ஒரு புறம் விஷ்ணுவின் சிலையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. சங்கு சக்கரத்துடன் உள்ள மிகப் பிரமாண்டமான திருமால் வடிவம் இது. நடந்து செல்லும் வகையில் இந்த திருமால் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.திருமால் துர்க்கை, இரண்டு சிலைகளுமே மிகப் பெரிதாக ப்ரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது குடைவரைக் கோயில் சற்று எளிமையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலிலும் மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவமே அமைந்துள்ளது. இதுவும் பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட சிவலிங்க சிலையே.
மூன்றாவதாக அமைந்துள்ள கோயிலில் முன் வாசல் பகுதியில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்திருக்கின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.குடவறை கோயில் படிகள் பாதி வட்டமாக (அர்த்தவட்டம்) அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.இக்கோயிலில் தற்சமயம் மாத ப்ரதோஷத்தின் போது மட்டும் இங்கு பூஜை நடைபெறுகின்றது. மற்ற சமயங்களில் இக்கோயில் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் குன்றக்குடி ஆதீனத்தின் மேற்பார்வையிலேயே தற்சமயம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பதிக்கப்பட்டுள்ள குறிப்புக்களின் வழி முன்னர் இக்கோயில் மசிலீச்வரம் என்று அழைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
குன்றக்குடியில் ஆதீனகர்த்தரை சந்திந்து விட்டு முனைவர்.வள்ளி.முனைவர்.கண்ணன்,முனைவர்.காளைராசன் நான் ஆகிய நால்வரும் இந்தக் கோயிலைப் பார்க்க வந்தோம். எங்களுக்கு உதவியாக கோயிலைத் திறந்து காட்டி உதவிட மடத்திலிருந்து ஒரு உதவியாளரும் வந்திருந்தார்.
விஷ்ணு
முனைவர்.வள்ளியுடன் வந்திருந்ததால் கல்வெட்டுக்களை வாசித்து உடன் பொருளறிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. மாமன்னன் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள், குலோத்துங்க சோழனின் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் ஆகியவற்றை டாக்டர் வள்ளி அவர்கள் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்தோம்.அத்துடன் ஒரு கல்வெட்டில் குன்றக்குடி என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. இது இவ்வூருக்கு அமைந்துள்ள பெயரின் பழமைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.ராஜ ராஜ சோழன் காலத்தில் பாண்டி நாடு சோழர் ஆட்சியின் கீழ் இருந்ததால் இக்கல்வெட்டுக்கள் சோழ அரசரின் மெய்கீர்த்தி குறிப்புக்களோடு தொடங்குவதைக் காணமுடிகின்றது.
பொதுவாக எங்கெங்கெல்லாம் சமணப் பள்ளிகள் இருந்தனவோ அங்கெல்லாம் இவ்வகைக் குடைவரைக் கோயில்களை சைவ வைஷ்ணவ தெய்வங்களுக்காக உருவாக்கியிருக்கின்றனர் என்று டாக்டர் வள்ளி தகவல் பகிர்ந்து கொண்டார்.
கோயிலின் முன் வாசல் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் மன்னர்களின் சிலைகள் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. மன்னர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் சிற்பங்களின் வடிவங்களைப் பார்த்தே அரசர்களின் வடிவங்கள் இவை என்பதை உறுதி செய்து கொள்ள முடிகின்றது.
இக்கோயிலுள்ள அனைத்து கல்வெட்டுக்களும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு மிக்க குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்று. கலைச்சிற்பங்களாக அமைந்திருக்கும் இறை வடிவங்களும் தமிழர் வரலாற்றை இன்றளவும் போற்றிப் பாதுகாக்கும் கல்வெட்டு ஆவணங்களும் நிறைந்துள்ள இக்குடைவரைக் கோயிலைப் பற்றி பலரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் வள்ளி அவர்களுடன் இக்குடைவரைக் கோயிலுக்குச் சென்றிருந்த போது பதிவு செய்த ஒலிப்பதிவுகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
பகுதி 1: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nagarathar/kundrakudi_kudavarai_temple1.mp3{/play}
பகுதி 2: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/nagarathar/kundrakudi_kudavarai_temple2.mp3{/play}

 

படங்கள்

 

குடைவரைக் கோயிலின் வாயில் புறம்

கோயிலின் முன்புறம்

கோயிலின் பின் பகுதி

மலையை ஒட்டி இக்குடைவரைக் கோயில் அமைந்திருக்கின்றது

துர்க்கை சிலையின் கால் பகுதி

வீரன் துர்க்கைக்கு காணிக்கையாக தனது தலையை வெட்டிக்கொள்ளும் நவகண்டம்

துர்க்கையின் பாதத்தில் எருதின் தலை

ஒரு பக்கச் சுவரில் திருமால் , அருகில் சிவன் நடுவில் இருக்க ஒரு பக்கத்தில் விஷ்ணு மறு பக்கத்தில் சக்தி (இப்படத்தில் மறைந்துள்ளது)

திருமால் சங்கு சக்கரத்துடன் (ஒரு பாகம் ஆணாகவும் மறு பாகம் பெண்ணாகவும்)

மற்றொரு திருமால் சிலை

சதுர அமைப்பில் அமைந்த அர்த்தமண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள தூண்கள்

துவாரபாலகர்

துவாரபாலகர்

வெளிப்புற த்தில் உள்ள தூண்கள் அதில் அமைந்துள்ள சிற்பங்கள்

மேல்பகுதில் உள்ள சிற்பங்கள் – நந்தியின் மேல் சிவன் பார்வதியுடன் அமர்ந்திருக்கும் காட்சி

கல்வெட்டு

மூன்றாவது கோயிலின் நுழைவாயில்

கஜலக்‌ஷ்மி

வாசல்புறத் தூண்கள்

ஆலயத்தின் பின் பகுதி

ஒரு மூலையில் இருக்கின்ற ஐந்தலை நாகம் – நடுவே நர்த்தனமாடும் கண்ணன்

ஆலயத்தின் வெளியே ஐந்தலை நாகச் சிற்பங்கள்

You may also like

Leave a Comment