Home HistorySivagangai குன்றக்குடி ஆதீனம்

குன்றக்குடி ஆதீனம்

by Dr.K.Subashini
0 comment

 குன்றக்குடி ஆதீன வரலாறு

 

 

குரு அருள்
அருள்தரு சண்முகநாதப் பெருமான் துணை
குன்றக்குடி
திருக்கயிலாய பரம்பரைத்
திருவண்ணாமலை ஆதீன வரலாறு
 
45-ஆவது குரு மகாநந்நிதானம்
திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக
பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின்
அருளாணையின் வண்ணம் எழுதப் பெற்று,
 
திருவண்ணாமலை
குருமுதல்வர் திருக்கோயில்
2-9-1990 திருக்குட நீராட்டு விழாவையொட்டி
1-9-1990 இல்
மாண்புமிகு ப.உ.சண்முகம் அவர்கள் தலைமையில்
தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
திருமிகு, டாக்டர்.சி.பாலசுப்ரமணியம் அவர்களால்
வெளியிடப் பெற்றது.
 
வெளியீடு:
திருவண்ணாமலை ஆதீனம்
குன்றக்குடி- 623 206
பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம்.
தமிழ்நாடு.
தொகுத்து எழுதியவர்:  மரு. பரமகுரு
 


 

பதிப்புரை

திருக்கயிலாயப் பரம்பரையில் வந்த சுத்த சைவ ஆதீனங்கள் பதினெட்டு.  அவற்றுள் தொன்மையான ஆதீனங்கள் சிலவற்றில் ஒன்று நமது திருவண்ணாமலை ஆதீனமாகும்.
 
இந்த ஆதீனத்தின் சுருக்கவரலாறு இது.  இந்த ஆதீன வரலாறு பேராசிரியர் திரு. சுவர்ண காளீச்சுரன் அவர்களால் எழுதப் பெற்று 1960 இல் (சார்வரி—ஆவணி—பூரட்டாதி நாளில்) வெளிவந்துள்ளது.  பெரும்பாலும் அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றது இது.  எனினும் இது காலக் குறிப்புக்களுடனும் சில மாறுதல்களுடனும் மேலும் கிடைத்த சில செய்திகளுடனும் எழுதப் பெற்றுள்ளது.
 
அடியேனுக்கு இப்பணியை அருளிய திருவருள் திரு குருமகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் பொன்னார் திருவடிக் கமலங்களைப் போற்றி வணங்குகின்றேன்.
 
இந்தப் பணியில் பல்லாற்றானும் உதவிய என் இனிய நண்பர் வித்துவான் திரு க.கதிரேசன் எம்.ஏ.பி.எட்., அவர்களுக்கு என் நன்றி.
 
மிகக்குறைந்த காலத்தில் இதனை விரைந்து அச்சிட்டு உதவிய குன்றக்குடி சண்முகநாதன் அச்சகத்தார்க்கு நன்றி.
 
தொன்று தொட்டு இன்று வரை எவரெல்லாம் இந்த ஆதீனச் சிறப்புக்குப் பணி செய்தார்களோ, எவரெல்லாம் இனி வருங்காலத்திலும் பணி செய்யவிருக்கிறார்களோ அவர்களுக்கு, இந்த நூல் காணிக்கையாக்கப் பெறுகின்றது.
 
ஆதீன அடியவன்
மரு. பரமகுரு
குன்றக்குடி
27-8-1990.

 


 

செய்ய தமிழும் சிவநெறியும்
சிறக்கத் தொண்டு புரிந்திடுவோன்
ஐயன் குன்றக்குடி அடிகள்
அருணா சலதே சிசுநாதன்
தையல் பாகன் தண்ணருளால்
சமயச் செங்கோல் இனிதோச்சி
வையம் புகழப் பல்லாண்டு
வாழ்க! வாழ்க!  வாழ்கவே!
–கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

 

குரு அருள்

அருள்தரு சண்முகநாதப் பெருமான் துணை

 


 

குன்றக்குடி திருகயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீன வரலாறு

 

தெய்வசிகாமணி தேசிகர் வணக்கம்

இருபதின் மேல் இரு நான்காக மங்களும் ஈரிரண்டு
சுருதியின் வாக்கியமும் தவறாது மெய்த் தொண்டர்மனத்து
இருள்மல பாசத்தை நீக்கி மெய்ஞ் ஞான இயற்கைதரும்
திருவருணாசலத் தேவ சிகாமணிச் சிற்குருவே!
–சிற்குருமாலை

 

திருவண்ணாமலை ஞானமலை; இறைவன் பேரொளிப் பிழம்பாய்த் தோன்றிக் காரிருள் ஆணவக் கட்டறுத்த ஒளிமலை; தொன்று தொட்டு இன்று வரை எண்ணற்ற தவசீலர்களுக்கும் ஞானிகளுக்கும் மோனிகளுக்கும் முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் ஞானத்தொட்டிலாக விளங்கி வரும் அருள்மலை; சக்திக்கு ஒரு பாகம் தான் கொடுத்து நின்ற மலை; முத்திக்கு வித்தாய் முளைத்த மலை; சிந்திப்பார் முன்னின்று முத்தி வழங்கு மலை; உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய இறைவன் அமர்ந்து அருள் சுரக்கும் தெய்வமலை;  திருமாமணி மண்ணார்ந்த அருவித்திரன் மழலை முழவு அதிரும் அழகு மலை; அருளாளர் பலரின் திருப்பாடல்கள் பெற்றுப் பொன்றாப் புகழுடன் திகழும் புண்ணியமலை.
 
இத்தகு பெருமையெல்லாம் வாய்ந்த திருவண்ணாமலைத் திருத்தலம் ஆறு ஆதாரத் தலங்களுள் மணிபூரகத்தலமாகவும் ஐம்பெரும் பூதத்தலங்களுள் ஒன்றாகவும் திகழும் திருத்தலம்.  பிறக்க முத்தியளிப்பது திருவாரூர்; தரிசிக்க முத்தி தருவது தில்லையம்பதி; இறக்க முத்தி வழங்குவது காசி; ஆனால் நினைத்த அளவிலேயே முத்தி முந்தித் தருவது திருவண்ணாமலை திருத்தலம் என்பது ஆன்றோர் திருவாக்காகும்.

இந்தத் திருவண்ணாமலைத் திருத்தலத்தில் இற்றைக்கு 740 ஆண்டுகளுக்கு முன் திருவவதாரம் செய்தருளியவர் திருவருள் திரு தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்திகள்.  அவர்கள் திருவண்ணாமலைப்பதியில் 680 ஆண்டுகளுக்கு முன் ஞாலமுய்ய, நாமுய்ய, சைவ நன்னெறியின் சீலமுய்ய வேண்டி, திருவண்ணாமலை ஆதீனத்திருமடத்தை நிறுவியருளினார்கள்.  அந்த ஆதீனத்திருமடம் இக்காலத்தில் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் குன்றக்குடியில் அமைந்து அருள் சுரந்து வருகிறது.  குன்றக்குடி, காரைக்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும் திருப்புத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் மதுரை—காரைக்குடி (குன்றக்குடி வழி) பேருந்துச் சாலையில் உள்ளது.
 
திருக்கயிலாய பரம்பரை
 
திருக்கயிலாய மலையில் கல்லாலின் நீழலிலே தென்முகப் பரமனாய் எழுந்தருளியுள்ள ஶ்ரீகண்டபரமசிவம் சிவஞான போதத்தை, திருநந்தி தேவருக்கு உணர்த்தியருளினார்.  முப்பொருளுண்மையை உணர்த்தி எப்பாலவரையும் உய்விக்கும் அந்தச் சிவஞானச் செல்வத்தைத் தம் அருமை மாணாக்கராகிய சனற்குமார முனிவருக்கு அருளிச் செய்தார் திருநந்தி தேவர். சனற்குமார முனிவர் அதனைத் தன் மாணாக்கருள் சிறந்த சத்தியஞானதரிசினிக்கு அருளினார்.  அவர் அதனைத் தம் மாணாக்கருள் சிறந்த பரஞ்சோதி முனிவருக்கு அருளிச் செய்தார்.  இது திருக்கயிலாயத்தில் நிகழ்ந்தது.  ஆதலின் திருநந்திதேவர் முதலிய நால்வரும் இந்தப் பரம்பரையிலே “தேவசந்தானத்தார்” எனவும் “அகச் சந்தானத்தார்” எனவும் வழங்கப் பெறுவர்.
 
மெய்கண்ட தேவர்
 
தெய்வமணங்கமழும் தமிழகத்தில் நடுநாட்டிலே உள்ள திருப்பெண்ணாகடத்தில் சைவவேளாள மரபில் அச்சுத களப்பாளர் என்பவர் ஒருவர் இருந்தார்.  அவர் பெருஞ்செல்வர்.  அவருக்கு நெடுநாள் வரை மகப்பேறு வாய்க்கவில்லை.  அதனால் அவர் மிகவும் வருந்தினார்.  திருத்துறையூரிலே அக்காலத்தில் எழுந்தருளியிருந்த தமது குலகுருவாகிய சகலாகம பண்டிதரிடம் சென்று தமது கவலையைத் தெரிவித்தார்.  சகலாகம பண்டிதர் தம் சீடராகிய அச்சுத களப்பாளரின் குறையைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டார்.  செந்தமிழ்மறையாகிய தேவாரத் திருமுறையை வழிபட்டுக் கயிறு சாத்தினார்.  அதுபோது, திருநெறிய தமிழாகிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரத்தில், திருவெண்காட்டுத் திருப்பதிகத்திலுள்ள,
 
“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயன தோன் உமைபங்கள் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே”

 

என்னும் திருப்பாடல் காட்சியளித்தது.  அதுகண்ட அச்சுத களப்பாளர் அத்திருப்பாடலில் சொல்லியவண்ணம் தமது அருமை வாழ்க்கைத் துணைவியாரோடு புறப்பட்டுத் திருவெண்காடு சென்றடைந்தார்.  அங்குள்ள முக்குளத் தீர்த்தத்தில் முறைப்படி நீராடினார்.  அருள் தரு சுவேதவனப் பெருமானையும் அருள் தரு பிரமவித்தியா நாயகியையும் நியமத்துடன் வழிபட்டு வந்தார்.  அந்த நாளில் அவர் தம் வாழ்க்கைத் துணைவியார் திருவயிறு வாய்க்கப் பெற்றார்.  அச்சுத களப்பாளர் அளவிலா மகிழ்வடைந்தார்;  பத்து மாதங்களிலும் சிவாகம விதிப்படி செய்ய வேண்டிய சடங்குகளையும் செய்வித்தார்.  ஒரு நல்ல நாளில் தமிழகம் செய்த தவப்பயனாய்த் திருவவதாரம் செய்தார் ஒரு ஞானப் புதல்வர்.  அச்சுத களப்பாளர் அகம் மிக மகிழ்ந்தார்.  சுவேதவனப் பெருமானின் திருவருளை எண்ணி, தமது திருமகனார்க்கு சுவேதவனப் பெருமாள் என்று பிள்ளைத் திருநாமம் சாத்தினார்; பின் தமது வாழ்க்கைத் துணைவியாரையும் தெய்வத் திருக்குழந்தையையும் அழைத்துக்கொண்டு திருப்பெண்ணாகடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
 
அச்சுத களப்பாளரின் அருமைத் துணைவியாரின் சகோதரர் காங்கேய பூபதி என்பவர்.  அவர் திருவெண்ணெய்நல்லூரில் வசித்து வந்தார்.  அவர், தம் சகோதரியின் புதல்வராகிய சுவேதவனப் பெருமாளைக் காண்பதற்குத் திருப்பெண்ணாகடத்துக்குச் சென்றார்.  சென்றவர் சுவேதவனப் பெருமாளை, திருவெண்ணெய்நல்லூருக்கு அழைத்துச் சென்று தமது இல்லத்தில் வளர்த்து வந்தார்;  குழந்தைக்கு இரண்டு வயதானது.
 
அந்த நாளில் முன்பு திருநந்திதேவர் மரபிலே சிவஞான உபதேசம் பெற்றப் பரஞ்சோதி முனிவர் மாட்சிமை மிக்க அகத்தியரைக் காணும் பொருட்டுப் பொதிய மலைக்குச் சென்று கொண்டிருந்தார்.  செல்லும்போது வழியிலே திருவெண்ணெய் நல்லூர்த் திருவீதியில் இரண்டு வயதுக் குழந்தையாய் விளையாடிக் கொண்டிருக்கும் சுவேதவனப் பெருமாளைக் கண்டார்;  அவருடைய பக்குவ நிலையைத் தெரிந்தார்.  சுவேதவனப் பெருமாளை அணுகி அவருக்குச் சிவதீக்கை செய்து தமது ஆசிரியர் திருப்பெயருக்கேற்ப “மெய்கண்டான்” என்னும் திருப்பெயர் சாத்தினார்;  தாம் மரபுவழிக் கேட்டுணர்ந்த சிவஞான போதத்தை அவருக்கு உபதேசித்தார்;  பின் பொதியமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.  மெய்கண்டதேவர் தாம் கேட்ட சிவஞான போதப் பொருள்களைச் சிந்தித்துத் தெளிவு பெற்றார்;  சிவஞான போதத்தைத் தெய்வத் தமிழ் மொழியில் அருளிச் செய்து உலகிற்கு வழங்கினார்.

 

சகலாகம பண்டிதர் என்னும் அருணந்தி தேவர்
 
மெய்கண்ட தேவரின் குலகுருவாகத் திருத்துறையூரிலே எழுந்தருளியிருந்த சகலாகம பண்டிதருக்கு இச்செய்தி எட்டியது.  அவர் திருவெண்ணெய்நல்லூருக்குச் சென்று மெய்கண்ட தேவரைக் கண்டார்;  தம்மை ஆட்கொண்டருளுமாறு வேண்டினார்.  அவரது பக்குவ நிலை கண்டு மெய்கண்டதேவர் அவருக்குத் தீக்கை செய்து தாம் அருளிச் செய்த சிவஞானபோதத்தை உபதேசித்தார்.  “அருள் நந்தி” எனத் தீட்சாநாமமும் சூட்டினார்.  அதன் பின் அருள் நந்தி தேவர், மெய்கண்டார் அருளிய சிஞான போத நூற்பொருளை விரித்துச் சிவஞான சித்தியார் என்னும் பெருநூலை இயற்றினார்.
 
இத்தகைய அருள்நந்தி தேவரின் அருமைச் சீடர்களுள் ஒருவரே நமது திருவண்ணாமலை ஆதீனக் குரு முதல்வர் திருவருள் திரு தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார்கள்.
 
ஆதீனக் குரு முதல்வர்
 
திருவண்ணாமலையில் மாதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் பெருமையுடைய ஆதிசைவ மரபிலே திருவவதாரம் செய்தவர் நமது ஆதீனக் குரு முதல்வர்.  இவர்களைப் பெற்ற பேற்றினையுடைய தாயாரும் தந்தையாரும் இத்தெய்வக் குழந்தையை நன்முறையில் வளர்த்துவந்தனர்.  இத்தவப் புதல்வர் வளர்ந்து பதினாறு வயதுக்குக் கற்பன கற்றும், கேட்பன கேட்டும், உணர்வன உணர்ந்தும் பக்குவ நிலையடைந்தார்.  தம் தெய்வத் திருமகனாரின் வளர்ச்சி நிலை கண்டு பெற்றோர் இருவரும் அளவிலா மகிழ்வு கொண்டனர்.
 
இறைவன் அருட்காட்சி
 
முப்போதும் திருமேனி தீண்டிப் பூசனை செய்யும் முறைமையுடைய இவரது தந்தையார் ஒரு நாள் மாலைப் பொழுதில் அண்ணாமலை அண்ணலின் திருக்கோயிலுக்குப் பதினாறு வயது நிரம்பிய தெய்வசிகாமணியை உடன் அழைத்துச் சென்றார்.  அழைத்துச் சென்ற தந்தையார் கருவறைக்குள் சென்றார்.  அங்குச் சென்று அருணாசலேசுவரப் பெருமான் திருமேனிக்குத் திருமுழுக்குச் செய்து பூசனை செய்து கொண்டிருந்தார்.
 

 

தம் தந்தையாருடன் பின் சென்ற தெய்வசிகாமணி ஆலயத்தின் திருக்கொடி மரத்தை அடைந்ததுமே தன்னை மறந்தார்;  தலைவன் தாளை நினைத்தார்; செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய பொங்குமலர்ப் பாதத்தைப் போற்றி உளமுருகினார்; கைகளைத் தலையில் வைத்துக் கண்ணீர் ததும்பினார்;  கல்லும் கரையும் வண்ணம் கானம் எழுப்பிக் கசிந்துருகினார்.  கொடிமரம் மின்னிற்று!  எங்கும் அமைதி நிலவிற்று!  எங்கும் அருளாட்சி!  அண்ணாமலை அண்ணல் வெள்விடைமேல் தோன்றிக் காட்சியளித்தார் தெய்வசிகாமணிக்கு!  சில விநாடியில் கொடிமரத்தின் அருகில் மறை ஆயிரம் மொழிந்த திருவாயான் அந்தண வடிவாய்த் திருமேனி கொண்டு நின்றார்.  இவ்வரிய காட்சியைக் கண்ட தவப் புதல்வர், அவ்வந்தணர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்; ஆடினார்; பாடினார்;  ஆனந்தக் கூத்தாடினார்; இறைவன், :அன்பனே, நீ, திருத்துறையூரிலுள்ள அருள்நந்தியிடம் சென்று சேர்வாயாக!” எனத் திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.  அந்தணனாகி வந்து ஆட்கொண்ட எம்பெருமானைக் காணாது திகைத்தார் தெய்வசிகாமணி.  அப்பொழுது தந்தையார் வழிபாட்டை முடித்துக்கொண்டு வந்தார்; தம் மைந்தரைக் கண்டு வீட்டிற்கு அழைத்தார்.  எல்லாருக்கும் தந்தையான இறைவன் ஆணையைக் கூறி தம் தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார் அருள்ஞான வள்ளல்;  இறைவன் ஆணை வழி ஞானாசிரியரைத் தேடித் திருத்துறையூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
 
திருத்துறையூரிலிருந்த அருள்நந்தி சிவாச்சாரியாரின் கனவில் இறைவன் தோன்றினான்.  “நமது அன்பன் தெய்வசிகாமணி, திருவண்ணாமலயிலிருந்து உன்னை நாடி வருகின்றான்.  அவனுக்கு ஞானோபதேசம் செய்வாயாக!” என்று அவரிடம் கூறி மறைந்தருளினான்.  அருள்நந்தி சிவாச்சாரியார் துயில் நீங்கி, இறைவன் அருளைச் சிந்தித்து வாழ்த்தி தெய்வசிகாமணியின் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.  தெய்வசிகாமணி விரைந்து சென்று திருத்துறையூரை அடைந்தார்.  இறைவன் உணர்த்தியருளிய ஞானாசிரியரைக் கண்டார்;  அவர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.  அருள்நந்தி சிவாச்சாரியாரும் தம் சீடர்களில் ஒருவராகத் தெய்வசிகாமணியை ஏற்றருளினார்; சிவஞான போதத்தை உபதேசித்தருளினார்.

 
இவ்வாறிருக்கும் நாளில் ஒரு நாள் நமது ஞானப் பெருங்குரவர் இறைவனே சுயம்புவாகத் தமது ஆன்மார்த்த மூர்த்தியாகப் பூசைக்கு எழுந்தருள வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டார்;  இவ்விருப்பத்தினைத் தம் ஞானாசிரியரிடம் விண்ணப்பித்துக்கொண்டார்.  ஞானாசிரியர் இறையருளைச் சிந்தித்து, திருக்காளத்திக்குச் செல்லுமாறு பணித்தார்.  அவர் பணித்தவண்ணம் தெய்வசிகாமணி திருக்காளத்தியைச் சென்றடைந்தார்.  திருக்காளத்தி எழுகொழுந்தாய் உள்ள ஏகநாயகரைக் கண்டார்.  எழுந்த பேருவகை அன்பின் வேகமானது மேற்செல்ல, மிக்க விரைவோடு ஓடிச் சென்றார்.  இருகரம் தலைமேல் கூப்பி ஆனந்த பரவசமானார்;  அடியற்ற மரம் போல் ஐயன் திருமுன்பில் வீழ்ந்தார்; தன்னை மறந்தார்;  அந்நிலையில் நித்திரையானார்.  அப்பொழுது திருக்காளத்தியப்பர் அருட்பெருங்குரவர் கனவில் தோன்றி, “அன்பனே! நாம் உனக்காகத் திருக்கோயில் அருகேயுள்ள புற்றிலே சிவலிங்க உருவாய்த் திகழ்கின்றோம்;  அங்கு வருக!” எனக்கூறி மறைந்தான்.  அத்திருமொழி உணர்ந்து விழித்த ஞானப் பெருங்குரவர் ஆராக்காதல் பெருக, எழுந்தோடிப் புற்றருகே சென்றார்; அங்குக் காளத்தியப்பராம் புனித வாழ்வைச் சிவலிங்க வடிவில் கண்டு, எடுத்து , மார்புறத் தழுவினார்; மட்டிலா மகிழ்வு கொண்டார். தமது ஆன்மார்த்த வழிபாட்டு மூர்த்தியாகிய அப்பெருமானை ஏந்திக் கொண்டு காளத்தியை விட்டுத் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்று அங்கிருந்து வழிபட்டு வருவாராயினார்.
 

இவ்வாறு நமது குருமுதல்வருக்காகச் சிவலிங்க வடிவாய் எழுந்தருளிய காளத்தியப்பர், திருவண்ணாமலையில் அமைந்த ஆதீனத் திருமடத்திலும் பின் ஆதீனத் திருமடம் பிரான் மலை (பறம்பு மலை)யில் அமைந்த போது அங்கும், அதன் பின் குன்றக்குடியில் ஆதீனம் அமைந்த போது குன்றக்குடித் திருமடத்திலும் எழுந்தருள்விக்கப்பெற்று வழிவழி நம் ஆதீனக்குருமூர்த்திகளால் வழிபாடு செய்யப் பெற்று வருகிறார்.

 

 

குதிரையை உயிர்ப்பித்த குருநாதர்

 

நமது குரு முதல்வர் திருவண்ணாமலையில் எழுந்தருளியிருந்த காலத்தில் விளைந்த அற்புதங்கள் பல.  அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கே காண்போம்.

 

வீரவல்லாள தேவன் திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு (கி.பி. 1291—-1342) ஆட்சி செய்து வந்தான்.  அக்காலத்தில் ஒருநாள் அவன், குதிரை வீரர்கள் புடைசூழப் பவனி வந்தான்.  அப்போது அவனுடைய பட்டத்துப் புரவி பதறி வீழ்ந்தது.  வாயால் நுரை கக்கிற்று;  சிறிது நேரத்தில் உயிரிழந்தது;  இதனால் எங்கும் பரபரப்பானது.  அரசன் மிகுந்த கவலையுற்றான்,  மக்கள் வருந்தினர்.  இந்த நேரத்தில் நமது அருட்பெருங்குரவர் அங்கே தோன்றினார்.  அரசன் தவமுனிவரின் திருவடியை வணங்கினான்;  குறை நீக்க வேண்டினான்.  குறுநகை புரிந்தார் குருமுனிவர்.  திருநீறெடுத்துத் திருமந்திரமாம் திருவைந்தெழுத்தை ஓதித் திருவருளைச் சிந்தித்தார்; திருநீற்றினைப் புரவி மீது தெளித்தார். புரவி படுத்துறங்கி விழித்தெழுந்தது போல் எழுந்தது.  மன்னன் மனமகிழ்ந்து கரங்குவித்து அண்ணலை வணங்கினான்.  மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தழுந்தினர்.  குருமுனிவர் தம் திருக்கரத்தால் மன்னனையும் மக்களையும் வாழ்த்தியருளினார்.

 

கருணை நிறைந்த குருமுதல்வரின் இந்த அற்புத வரலாறு, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலின் தெற்கு மதிற்சுவரில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளதை இன்றும் காணலாம்.  குரு முதல்வரின் திருவருளால் மேலும் பற்பல சித்துக்கள் நிகழ்ந்தன;  கொடிய விலங்குகளும் தம் குணம் நீங்கி உறவு கலந்து வாழ்ந்தன;  சிறுத்தையும், பசுவும் ஒன்று கூடி மகிழ்ந்து விளையாடின.  இந்த உலகம் அறியாத புதுமை கண்டு, மக்கள் வியந்தனர்.

 

இவ்வாறு அனுபூதிச் செல்வராக விளங்கிய குரு முதல்வரை நாடிச் சீடர்கள் வந்தனர்.  அவர்களுக்குச் சிவஞானச் செல்வத்தை அருளிச் செய்தார் குருமுதல்வர்.  சீடர்கள் தொகை பெருகப் பெருக அவர்கள் தங்கியிருந்து உபதேசம் பெற்றுக்கொள்ளும் வகையில் தமது 60—ஆம் வயதுக் காலத்தில் (கி.பி. 1310 இல்) திருவண்ணாமலையில் ஆதீனத் திருமடம் தோற்றுவித்தருளினார் குருமுதல்வர். மேலும் சிலகாலம் அருளுபதேசம் செய்து கொண்டிருந்து தமது சீடருள் சிறந்தவராகிய  தாண்டவராய தேசிக குருமூர்த்தியிடம் திருமடத்துப் பொறுப்பினை வழங்கி, ஒரு ஆவணி மாதம் பூரட்டாதி நாளன்று, திருவண்ணாமலைத் திருப்பதியில் வேட்டவலம் சாலையின் தென்புறத்தில் சிவயோக நிலையில் எழுந்தருளியுள்ளார்.

 

குரு முதல்வர் காலம்

 

நமது ஆதீனக் குரு முதல்வர் மண்ணுலகில் திருமேனி கொண்டுலவிய காலம் கி.பி. 1250—-1325.  ஏறத்தாழ 75 ஆண்டுகள் என்று கொள்வது பொருந்தும்.

 

திருவண்ணாமலைக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ள திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவனே சிவஞான போதம் செய்த மெய்கண்ட தேவராகலாம் என்பதும் அவர் கி.பி. 1232-இல் வாழ்ந்தவர் என்பதும் ஆராய்ச்சியாளர் முடிபு.  அது மூன்றாம் இராசராசன் ஆட்சிக்காலத்து 15-ஆவது ஆண்டு ஆகும்.  மூன்றாம் இராசராசன் ஆட்சிக்காலம் கி.பி.1210—1256.  இவற்றை அடிப்படையாகக் கொண்டு மெய்கண்டார் காலம் ஒருவாறு ஆராய்ச்சியாளர்களால் கி.பி.1223 எனத் துணியப் பட்டு நடைமுறையிலிருந்து வருகிறது.  மெய்கண்டார் ஆண்டு கி.பி.1223 எனின், அவருக்கு மூத்தவராகிய அருள்நந்தி தேவர், “சகலாகம பண்டிதர்” எனப் புகழ் பெற்று விளங்கிய காலம் அது.  ஆதலால் அருள் நந்தி தேவர், குறைந்தது 40 வயது மெய்கண்டாருக்கு மூத்தவராதல் வேண்டும்.  எனவே அருள் நந்தி தேவர் தமது 84-ஆம் வயதில் கி.பி. 1267-இல் தெய்வசிகாமணி தேசிகருக்கு ஞானோபதேசம் செய்து அருளினார் என்பது பொருந்தும்.

 

திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த வீரவல்லாளன் தேவன் III ஆட்சிக்காலம் கி.பி. 1291—1342.  தனது ஆட்சித் தொடக்க காலத்தில் 40 வயது நிறைந்தவராக இருந்த தெய்வசிகாமணி தேசிகரின் பெருமையை உணர்ந்தவன் வல்லாள தேவன்.  இவனது ஆட்சி தொடங்கிய பின் 30—35 ஆண்டுகள் வரை நிலவுலகில் குருமுதல்வர் இருந்து தம் முதிர்ந்த வயதில் அதாவது 75 வயதில் (கி.பி. 1325—இல்) சிவயோகநிலை எய்தினார் எனலாம்.  தாம் சிவயோக நிட்டை கூடுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன் கி.பி. 1310—இல் குருமுதல்வர் திருவண்ணாமலையில் ஆதீனத்திருமடத்தை நிறுவியிருத்தல் இயலும்.

 

 

 

2 ஆம் பட்டம் முதல் 17 ஆம் பட்டம் வரை (கி.பி.1325—1630)

 

நம் ஆதிகுருமுதல்வரால் கி.பி. 1310-இல் நிறுவப் பெற்ற திருமடத்தில் எழுந்தருளி அருளாட்சி புரிந்த குருமூர்த்திகள் வருமாறு:

 

2. திருவருள் திரு தாண்டவராய தேசிகர் I

3. திருவருள் திரு வினைதீர்த்த தேசிகர்

4. திருவருள் திரு கனகசபாபதி தேசிகர்

5. திருவருள் திரு வேலப்ப தேசிகர்

6. திருவருள் திரு சுப்பிரமணிய தேசிகர்

7. திருவருள் திரு உருத்திரகோடி தேசிகர்

8. திருவருள் திரு சதாசிவ தேசிகர்

9. திருவருள் திரு கண்ணப்ப தேசிகர்

10.திருவருள் திரு மாசிலாமணி தேசிகர்

11.திருவருள் திரு சந்திரசேகர தேசிகர்

12.திருவருள் திரு குமரகுரு தேசிகர்

13.திருவருள் திரு அம்பலவாண தேசிகர்

14.திருவருள் திரு அருணகிரி தேசிகர்

15.திருவருள் திரு கந்தப்ப தேசிகர்

16,திருவருள் திரு சுவாமிநாத தேசிகர்

 

இக்குருமூர்த்திகள் அனைவரும் திருவருள் பண்பாடு நிறைந்த அருளாளர்களாக விளங்கியவர்கள்.  குருவருள் ஒன்றே அவர்களது குறிக்கோளாக அமைந்தது.  அருளார்ந்த நெஞ்சினராய், சிவஞானத் தெள்ளமுதினை மக்களுக்கு வழங்கியவர்கள்;  பின் சிவஞான மேலீட்டால் தம்மை மறந்து தியான சமாதியில் அமர்ந்தவர்கள்.

 

17ஆம் பட்டம், நாகலிங்க தேசிக சுவாமிகள் (கி.பி.1680—1700)

 

திருவருள் திரு நாகலிங்க தேசிகர்,  ஆதீனத்தின் 17 ஆவது பட்டமாக எழுந்தருளியவர்.  இந்த அருளாளர் உலகம் வாழ்வதற்கென வாழ்ந்தவர்;  நல்லனவற்றையே சிந்தித்துச் சிவநெறி பேணியவர்;  சிவநெறியை எடுத்தியம்பி மக்களிடையே சைவப் பயிர் வளர்த்தவர்.

 

இராமேசுவர யாத்திரை

 

இத்தகு பெருமை வாய்ந்த நாகலிங்க தேசிக குருமூர்த்திகள் தென்னாட்டில் திருத்தல யாத்திரை செய்யத் திருவுள்ளம் கொண்டு எழுந்தருளினார்.   தீர்த்தமாடிச் சிவனார் உறையும் திருக்கோயில்கள் வலம் வந்து வழிபாடு செய்து மகிழ்ந்தார்.  ஆங்காங்கே அறிஞர்களும், சான்றோர்களும் மெய்யன்பர்களும் குருநாதரை வரவேற்றனர்;  பக்திப் பரவசத்தால் கண்ணீர் மல்கினர்; குருநாதருக்குப் பணிவிடை செய்து பேறு பெற்றனர்.  குருமூர்த்தியும் தம்மை வந்தடைந்தவர்களுக்குச் சிவஞானத்தின் சிறப்பினை உபதேசித்து அருள் மழை பொழிந்து வந்தார்.  இங்ஙனம் திருவண்ணாமலையிலிருந்து எழுந்தருளிய குருமூர்த்திகள் திருமுதுகுன்றம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருப்பெருந்துறை, திருவாடானை, காளையார்கோயில் முதலிய திருத்தலங்களை வழிபட்டுத் திருச்சுழியலுக்கு எழுந்தருளினார்கள். 

 

திருச்சுழியலுக்குக் குருமூர்த்திகள் எழுந்தருளிய செய்தி கேட்ட இராமநாதபுரம் மன்னர் இரகுநாத சேதுபதி (கி.பி. 1675—1710) மட்டில்லா மகிழ்ச்சி கொண்டார்.  நமது குருமூர்த்திகளின் பெருமையை முன்பே தெரிந்தவர் சேதுபதி மன்னர்.  ஆதலால், உடனே திருச்சுழியலுக்கு வந்து குருமூர்த்திகளைக் கண்டு கொண்டு திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.  இராமேசுவரத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற குருமூர்த்திகளின் விருப்பத்தை உணர்ந்த மன்னர், உடனே அதற்கு ஆவன செய்தார்.  மன்னரும் ஏவலாளர்களும் புடைசூழ, குருமகாசந்நிதானம் இராமேசுவரம் சென்று, தீர்த்தமாடி இறை வழிபாடு செய்து திரும்பினார்கள். இவ்வாறு திரும்பி வருங்கால் மன்னர், இந்தச் சீமையிலேயே சுவாமிகள் தங்கி அருளாட்சி புரிய வேண்டும் என்று வேண்டினார்;  பொன்னும் மணியும் காணிக்கையாகச் செலுத்தினார். மன்னரின் வேண்டுதலைக் குருநாதர் கருணையுடன் ஏற்று கி.பி. 1690 ஆம் ஆண்டளவில் பிரான்மலையில் காளத்திநாதரை எழுந்தருள்வித்து, அருளாட்சி புரியத் தொடங்கினார்கள்.  இவ்வாறு பிரான்மலையில் தொடங்கி நடந்து வந்த அருளாட்சியில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் வருமாறு:

 

18. திருவருள் திரு குமரசாமி தேசிகர்

19. திருவருள் திரு திருச்சிற்றம்பல தேசிகர் I

20. திருவருள் திரு சிதம்பரநாத தேசிகர்

21. திருவருள் திரு சிவக்கொழுந்து தேசிகர்

22. திருவருள் திரு நமச்சிவாய தேசிகர்

23. திருவருள் திரு அகத்தீசுவர தேசிகர்

24. திருவருள் திரு பொன்னம்பல தேசிகர் I

25. திருவருள் திரு ஏகாம்பர தேசிகர்

26. திருவருள் திரு வைத்தியநாத தேசிகர்

27. திருவருள் திரு அண்ணாமலை தேசிகர்  I

28. திருவருள் திரு ஞானப்பிரகாச தேசிகர்

29. திருவருள் திரு ஆறுமுக தேசிகர் I

30. திருவருள் திரு திருச்சிற்றம்பல தேசிகர் II

 

பிரான் மலையிலிருந்து அருளாட்சி புரிந்த குருமூர்த்திகளில் பலர் மிகக் குறைவான காலமே அருளாட்சி புரிந்தனர்.  அவர்கள் காலத்தில் பிரான்மலையில் ஆதீனத் திருமடம் நிறுவப் பெற்றது.  பிரான்மலை, (பிரான்மலை உட்கிடைக்கோயில் சதுர்வேதி மங்கலம்) திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி, தேனாச்சியம்மன் கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி புரிந்தனர்.  அன்று முதல் இன்று வரை நமது ஆதீனத்தின் குருமூர்த்திகள் தொடர்ந்து பிரான்மலை வகை ஐந்து கோயில்களின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து அருளாட்சி செய்து வருகின்றனர்.  பிரான்மலையில் எழுந்தருளியிருந்த குருமூர்த்திகள் அனைவரும் அருளும் தவமும் அறமும் நிறைந்தவர்களாக விளங்கினர்.

 

பிரான்மலையிலிருந்து குன்றக்குடிக்கு வருதல்

 

28-ஆம் பட்டம் ஞானப் பிரகாச தேசிகர் அவர்கள் குன்றக்குடி அருள் தரு சண்முகநாதப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடுள்ளவர்கள்.  இந்த ஈடுபாட்டின் காரணமாகவே 29-ஆம் பட்டம் குருமூர்த்திக்கு ஆறுமுகதேசிகரெனத் தீட்சாநாமம் சாத்தினார்கள்.  28-ஆம் பட்டம் ஞானப்பிரகாச தேசிகர் அவர்கள் முதல் 30—ஆம் பட்டம் திருச்சிற்றம்பல தேசிகர் அவர்கள் வரை பிரான்மலையில் இருந்து கொண்டு அருளாட்சி புரிந்து வந்த போதிலும் அவர்கள் அனைவருக்கும் குன்றக்குடிப் பெருமான் மீது ஈடுபாடு மிகுந்து வரலாயிற்று.  திருவருள் திரு மருதநாயக தேசிகர் காலம், சிவகங்கைச் சீமையையாண்ட மருது பாண்டியர் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் திருக்கோயிலை இப்போதிருக்கும் பெரிய அளவில் திருப்பணி செய்து சாந்துப்புலவரைக் கொண்டு மயூரகிரிக்கோவையையும், (கி.பி. 1778) செய்வித்துத் தனிப்பெருமை சேர்த்திருந்த காலம்.  எனவே, மருதநாயக தேசிக குருமூர்த்திகளால் பிரான்மலையிலிருந்த காளத்தியப்பர் குன்றக்குடித் திருமடத்துக்கு எழுந்தருள்விக்கப் பெற்றார்.  அக்காலம் முதல் திருவண்ணாமலை ஆதீனமடாலயம் குன்றக்குடியில் திகழ்ந்து வருகிறது.  31—ஆம் பட்டம் திருவருள் திரு மருதநாயக தேசிகருக்குப் பின் கி.பி. 1860 வரை குன்றக்குடியிலிருந்து அருளாட்சி புரிந்து வந்த குருமூர்த்திகள் வருமாறு:

 

32. திருவருள் திரு தண்டவராய தேசிகர் II

33. திருவருள் திரு சிவசுப்பிரமணிய தேசிகர்

34. திருவருள் திரு சாம்பசிவ தேசிகர்

35. திருவருள் திரு ஆறுமுக தேசிகர் II

36. திருவருள் திரு அருணாசல தேசிகர் I

37. திருவருள் திரு பொன்னம்பல தேசிகர் II

 

இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த அருளாளர்களாக விளங்கினர்.  சைவமும், தமிழும் தழைத்தினிதோங்கப் பெரும்பணிகள் புரிந்தனர்.  சென்னையிலுள்ள மயிலாப்பூர் கட்டளை மடம், நாட்டுப் பிள்ளையார் கோயில் தெரு கட்டளை மடங்களில் தம்பிரான்களை நியமித்து நல்லாட்சி புரிந்து வந்தனர்.

 

திருவாவடுதுறைக்கு வந்து நாவலர் பட்டம் பெற்றவுடன் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் சென்னைக்குச் சென்றிருந்தார்.  அங்கு அவர் நமது ஆதீனச் சின்னப்பட்டமாகிய அருணாசல தேசிகரைச் சந்தித்தார்.  அப்போது அருணாசல தேசிகர் (36-ஆம் பட்டமாகப் பிற்காலத்தில் எழுந்தருளியவர்கள்) நாவலரை மிகவும் பாராட்டி, நமது மடத்தில் சில காலம் தங்கும்படி கேட்டுக் கொண்டார்.  நாவலர் அவர்கள் தமது இன்றியமையாத பணிகளின் காரணமாக யாழ்ப்பாணம் செல்லவேண்டியதிருந்ததால் பிறிதொரு சமயம் வருவதாகக் கூறி அவரிடம் விடை பெற்றுச் சென்றுவிட்டார்.  நாவலர் தாம்கூறியபடி மீண்டும் குன்றக்குடிக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

 
38-ஆம் பட்டம் பெரிய ஆறுமுக தேசிகர் (கி.பி.1860—1889)
 
இந்த ஆதீனத்தின் 38—ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்தவர்கள் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக சுவாமிகள்.  இவர்கள் காலத்தில் இந்த ஆதீனம் மிகச் சிறந்து விளங்கியது.  சபாபதி முனிவர் என்னும் பெரியார் காறுபாறாக இருந்து திருத்தொண்டு செய்தார்.  ஆதீன மடாலயமும் இப்போதிருக்கும் நிலையில் பெரிதாகத் திருப்பணி செய்யப் பெற்றது.  குருமகாசந்நிதானம் சபாபதி முனிவரிடத்திலேயே எல்லாப் பொறுப்பையும் விடுத்துத் தாம் சிவபூசை, சிவஞானபோத  உபதேசம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தார்கள்.  இவர்கள் காலத்தில் கி.பி.1864- இல் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் குன்றக்குடி ஆதீனத்திருமடத்துக்கு வந்தார்; சிறந்த சொற்பொழிவு நிகழ்த்தினார்.  குருமகா சந்நிதானம் அவர்கள் நாவலரை நன்கு பாராட்டி, எந்த ஆதீனமும் செய்யாத வகையில் புதிதாகச் சிவிகை (பல்லக்கு)செய்வித்து அதில் அமரச் செய்து ஊர்வலச் சிறப்பும் செய்வித்தருளினார்கள்.
 
மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் திருப்பெருந்துறைக்கு வந்து, திருப்பெருந்துறைப் புராணத்தை அரங்கேற்றிய பின் குன்றக்குடிக்கு வந்தார்.  குருமகாசந்நிதானம் அவர்கள் அவர்களைச் சில நாள்கள் குன்றக்குடியில் தங்க வைத்து அவர்களுக்குத் தக்க சன்மானமும் வழங்கியபின், பல்லக்கு வைத்து காரைக்குடி வரை அனுப்பி வைத்தார்கள்.
 
இவர்கள் சிலேடைப்புலி வேம்பத்தூர் பிச்சு ஐயர் அவர்களைக் கொண்டு, குன்றக்குடி சண்முகநாதருக்கு உலா இயற்றுவித்தார்கள்.  இந்த உலா நூலில் அக்காலத்து ஆதீனச் சிறப்பையும் ஐந்து கோயில்களிலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் மிக அழகாகப் பாடியுள்ளார் சிலேடைப்புலி!
 
“நந்தி பரம்பரையில் நல்(கு) அருணைஆதீனத்(து)
இந்(து) அணிவோன் வாயால் இனி(து) இயம்ப-வந்திலகு
சைவாகமம் விளங்கத் தாரணியில் ஆலயங்கள்
மைவார் பைங்கூழ்போல மன்னி நிற்ப—மெய் வாய்ந்த
சீராரும் தெய்வ சிகாமணியென்றே உதித்துப்
பாராள் குருமரபில் பார்க்கரன்போல்—ஏராரும்
தன்மகர்த்தாவாகி இந்தத் தாரணியெல்லாம் புகழும்
சின்மயனாம் ஆறுமுக தேசிகன்.”
(சண்முக நாதர் உலா, கண்ணி: 172—175)
என்று ஆதீனத்தைப் பற்றியும் குருமகாசந்நிதானம் அவர்களைப் பற்றியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
 
இவர்கள் காலத்தில் பெரிய புராணத்துக்கு உரையெழுதிய அருள்திரு ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் சென்னை நாட்டுப் பிள்ளையார் கோயில் தெரு மடத்தில் தங்கியிருந்து பலருக்கு சித்தாந்தப் பாடமும், செந்தமிழிலக்கிய இலக்கணங்களும் கற்பித்து வந்தார்கள்.  இந்தத் தம்பிரான் சுவாமிகளிடம் பாடம் கேட்டு வந்த நமது ஆதீனக் குட்டித்தம்பிரான் சுவாமிகளை திருவாவடுதுறை ஆதீனம் 16-ஆவது பட்டம் திருவருள் திரு மேலகரம் சுப்பிரமணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் விருப்பத்தின் வண்ணம் நமது குருமகாசந்நிதானம் அவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.  அந்தக் குட்டித் தம்பிரான் சுவாமிகளே பிற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனம் 17-ஆவது பட்டம் திருவருள் திரு அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆவார்கள்.   திருவாவடுதுறை ஆதீனக் குருபீடத்திற்குத் தகுதியாகத் தமது ஆதீனத்திலிருந்து ஒரு அடியவரை அனுப்பியது போல், குருமகாசந்நிதானம் அவர்கள் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கருள் ஒருவராகிய திருவாவடுதுறை ஆதீனம் அருள்திரு ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளை அழைத்துத் திருவண்ணாமலை ஆதீனத்தில் சின்னப்பட்டமாக்க விரும்பினார்கள்.  அப்போது நமது ஆதீனத்திருமடத்தின் காறுபாறாகவிருந்த தாண்டவராயத் தம்பிரானையும் நமது ஆதீன வித்துவான் தில்லைநாத பிள்ளையையும் தலைமை எழுத்தர் அப்பாபிள்ளையையும் திருவாவடுதுறைக்கு 10—12—1888இல் அனுப்பி, தமது விருப்பத்தைத் தெரிவிக்கச் செய்தார்கள்.  திருவாவடுதுறை மகாசந்நிதானம் திருவருள் திரு மேலகரம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகளும் இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.  பின் ஒரு நல்ல நாளில் அருள் திரு ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளைக் குன்றக்குடி ஆதீனத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.  அவர்களை, மகாசந்நிதானம் அவர்கள் சின்னப்பட்டமாக நியமித்தார்கள்.  அருள் திரு குமரசாமி முனிவர், குருமுதல்வர் மீது பாடியருளிய ஞானவந்தாதி நான்மணிமாலை ஆகிய நூல்களை ஆதீனவித்துவான் தில்லைநாத பிள்ளையைக் கொண்டு 1887இல் (சர்வசித்து—வைகாசி) அச்சிட்டு வழங்கினார்கள்.  இவ்வாறு பெரிய ஆறுமுக தேசிக மூர்த்திகள் அருளாட்சி புரிந்து சிவமானார்கள்.
 
 
39-ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் (கி.பி.1890—1893)
 
இவர்கள் 38ஆம் பட்டம் மகாசந்நிதானம் அவர்களால் சின்னப்பட்டமாக எழுந்தருள்விக்கப் பெற்றவர்கள்; மகாவித்துவானாகத் திகழ்ந்தவர்கள்; தணிகைப் புராணம், பெரிய புராணம், மெய்கண்ட நூல்கள், பண்டாரசாத்திரம் முதலியவைகளை நன்றாகப் பாடம் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள்.  பெரிய ஆறுமுக தேசிக சுவாமிகள் காலத்தில் யாழ்ப்பாணம் தில்லைநாத பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்ற ஞானவந்தாதி, தெய்வசிகாமணி நான்மணிமாலைப் பதிப்புக்கு இவர்களருளிய சிறப்புப் பாயிரம் (அப்போது திருவாவடுதுறைத் தம்பிரானாக இருந்தார்கள்) இவர்களது பெரும்புலமைக்குச் சான்றாக விளங்குவது.  இவர்கள் தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தார்கள்;  தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களுக்கு சிலப்பதிகாரத்தின் சிறந்த ஏட்டுப் பிரதியை உதவியருளினார்கள்.  ஆதீனத்தலைமை எழுத்தர் அப்பா பிள்ளையை, உ.வே.சா. அவர்களுக்குத் துணையாக மிதிலைப்பட்டி போன்ற பல இடங்களுக்கும் அனுப்பி, சிறந்த இலக்கிய ஏடுகள் கிடைக்கச் செய்தார்கள்.
 
இவ்வாறு இவர்கள் அருளாட்சி புரிந்து சிவத்தில் கலந்தார்கள்.
 
 
40 ஆம் பட்டம் தாண்டவராய தேசிகசுவாமிகள் (கி.பி.1893—1902)
 
இவர்கள் சிறந்த கொடைவள்ளலாகத் திகழ்ந்தவர்கள்; வரவு சிந்தியாமல் வாரி வழங்கியவர்கள்.
குன்றக்குடி சங்கீத சாகித்திய வித்துவான் இரட்டைப் பல்லவி சக்ரதானம் கிருஷ்ணய்யர், இவர்களின் கொடைத்தன்மை பற்றிப் பாடிய பாடல் இதோ!
 
“நீண்ட கையான்; புகழ் நீதிகள் ஞானம் நிலைக்கவந்த
பாண்டவர் தோழன், இவன் என்று பாரிற் பணிந்திடுவர்
வேண்டும் எலாம்தரும் மேகம், சுரபி, தருவியக்கும்
தாண்டவராய தயாநிதி தன்கொடைத் தன்மை கண்டே!”
 
 
41 ஆம் பட்டம் நடராச தேசிக சுவாமிகள் (கி.பி.1902—1905)
 
இந்தக் குருமூர்த்திகள் போற்றத்தக்க புண்ணியசீலராவார்கள்.  திருமடத்தின் சொத்துக்களைக் காக்கவும் அபிவிருத்தி செய்யவும் பாடுபட்டார்கள்.  இவர்களின் அருளாட்சியில் திருமடத்துச் சொத்துக்களும், திருக்கோயில் சொத்துக்களும் வெளியார் கைவசமாகியிருந்தன. குருமகாசந்நிதானம் அவர்கள் கொஞ்சமும் தளராது அரும்பாடுபட்டு ஆவன செய்து அச்சொத்துக்களை மீட்டார்கள்.  நவரத்தினம் பதித்த கிரீடம் செய்வித்து, குன்றக்குடி சண்முகநாதனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்கள்.
 
42 ஆம் பட்டம் அண்ணாமலை தேசிக சுவாமிகள் (கி.பி.1905—1928)
 
இவர்கள் சிறந்த சித்தர்; சித்தர் நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுடையவர்கள்.  உணவை வெறுத்து, மெளனமூர்த்தியாய்ப் பல காலம் இருந்தருளினார்கள்;  குன்றக்குடி முருகனிடம் அயராத பக்தியுடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.
 
 
43 ஆம் பட்டம் பொன்னம்பல தேசிக சுவாமிகள்(கி.பி.1928—1946)
 
இப்பெரியார் சைவத்திருமுறைகளில் நன்கு திளைத்தவர்கள் கீழ்வேளூர் சொக்கலிங்க ஐயா அவர்களிடம் தேவாரத்திருமுறைகளை நன்கு பயின்றவர்கள்.  பட்டத்திற்கு எழுந்தருளிய பின்னர் தமது ஆசிரியர் சொக்கலிங்க ஐயா அவர்களைக் குன்றக்குடியிலேயே தங்கச் செய்து அவர்களது இறுதிக்காலம் வரையில் ஆதரித்தார்கள்.  நிர்வாக சம்பந்தமான வழக்குகள் பலவற்றில் திருவருளின் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற்றவர்கள்.  ஆதீனச் சொத்துக்கள் பிறர் வசமிருப்பதை அறிந்து அவற்றை மீட்க ஆவன செய்தார்கள்.  24—6—1940 இல் குன்றக்குடி அருள்தரு சண்முகநாதன் திருக்கோயிலுக்கு திருக்குட நீராட்டு விழாச் செய்து மகிழ்ந்தார்கள்.  பிரான்மலை திருக்கோளக்குடி, திருப்புத்தூர் ஆகிய திருக்கோயில்களுக்கு வெள்ளி ரிஷப வாகனம் செய்வித்தருளினார்கள்.  குருமகாசந்நிதானம் அவர்களிடம் குன்றக்குடிக்குமரன் நின்றருள் செய்தான்.  இவர்கள் சதுர்வேதிமங்கலம் அருள் தரு ஆத்மநாயகியிடம் பெரிதும் ஈடுபாடுடையவர்கள்.  ஒருநாள் ஆத்மநாயகியின் அர்த்தசாம பூசைக்குரிய நைவேத்தியங்களில் சர்க்கரைப் பொங்கல் இல்லாமல் நிவேதிக்கப் பெற்றது.  அன்றிரவே குருமகாசந்நிதானத்தின் கனவில் ஆத்மநாயகி எழுந்தருளி, “சர்க்கரைப் பொங்கல் படைப்பதிலா உனக்குக் குறைந்து விடுகிறது?” என்று கேட்டருளினாள்.  காலையில் எழுந்தவுடன் வழிபாட்டை முடித்து சதுர்வேதி மங்கலம் சென்றார்கள்.  உண்மையறிந்து குறை நீக்கி வழிபட்டுத் திரும்பினார்கள்.  இவ்வாறே திருப்புத்தூர்த் திருத்தளிநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பைரவமூர்த்தி, குருநாதர் கனவில் தோன்றினார்.  தமக்குக் குதிரை வாகனம் வேண்டுமென்று கேட்டருளினார்.  அவ்வாறே பைரவமூர்த்திக்குக் குதிரை வாகனம் செய்வித்து, பெருமானை வழிபட்டுத் திரும்பினார்.
 
இவர்கள் தமக்கு மனச்சோர்வு ஏற்பட்ட பொழுதெல்லாம் மடாலயத்து மேல் மாடியில் அமர்ந்து கொண்டே முருகன் சந்நிதானத்தை நோக்கித் தேவாரத் திருப்பாக்களை வீணையில் வைத்து வாசித்து மகிழ்வார்கள்.  இவர்கள் காலத்தில் இவர்களோடு ஒத்துழைத்து ஆதீனத்திற்கு வேண்டிய பணி புரிந்தவர்கள், புதுக்கோட்டை செல்லையா பிள்ளை அவர்களும் சோமசுந்தரம் பிள்ளை அவர்களும் ஆவார்கள். அவ்விருவரிடத்திலும் குருமகாசந்நிதானம் மிகுந்த நேயம் வைத்திருந்தார்கள்.  குருமூர்த்திகள் ஆதீன அருளாட்சியில் உள்ள திருக்கோயில்களுக்குத் திருவாபரணங்கள் பல செய்வித்தார்கள்.  தங்கத்தினாலான கண்டசரமும் சங்கிலியும் முருகனுக்குச் செய்வித்தார்கள்.  ஆதீன மடாலயத்திற்கு வெள்ளிக் குத்துவிளக்கு முதலியன செய்வித்தார்கள்.
 
 
44ஆம் பட்டம் ஆறுமுக தேசிக சுவாமிகள் (கி.பி.1946—1952)
 
திருவருள் திரு ஆறுமுக தேசிக சுவாமிகள் சிலகாலமே ஆட்சி புரிந்தார்கள்.  பல தோட்டங்களை வளர்த்தார்கள்.  தருமையாதீனத்திலிருந்து  இங்கு வந்து, தற்போது அருளாட்சி புரிந்து வரும் 45 ஆம் பட்டம் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமச்சாரிய சுவாமிகள் (தவத்திரு குன்றக்குடி அடிகளார்) அவர்களை அழைத்துவந்து இளவரசாக்கிய பெருமையுடையவர்கள்.  இளவரசரின் துணை கொண்டு குன்றக்குடியில் வானொலிப் பூங்கா அமைத்தார்கள்.  திருக்கோளக்குடியிலும் மின்விளக்கு வசதி செய்வித்தார்கள்.  பாலகவி வே. இராமநாதன் செட்டியார் அவர்களைக் கொண்டு தெய்வசிகாமணி நான்மணி மாலையை மறுபதிப்புச் செய்தருளினார்கள்.  இவ்வாறு அருளாட்சி புரிந்து 1952 இல் பரிபூரணம் அடைந்தார்கள்.
 
அவர்களுக்குப் பின் 45 ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருக்கும் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமச்சாரிய சுவாமிகள் சைவமும், தமிழும், சமுதாயும் உய்யும் வகையில் செய்து வரும் அரும்பெரும் தொண்டுகள் நாடறிந்த பெருஞ்சிறப்புடையனவாகும்.
 
ஆதீன அடியவர் திருக்கூட்டம்:
 
ஞானப்பிரகாச முனிவர் (கி.பி.1550—1600)
 
ஆதீன அடியவர் திருக்கூட்டத்தில் மிகச் சிறப்பாக வைத்து எண்ணப்படுபவர் ஞானப்பிரகாச முனிவர்.  இவர் யாழ்ப்பாணம் வீணாகானபுரம் சாலிவாடீசுரம் (திருநெல்வேலி) என்னும் ஊரில் கார்காத்த வேளாளருள் முடிதொட்ட வேளாளராய்ப் பாண்டி மழவர் குலத்தில் தோன்றியவர்.  யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் அவர்களின் பாட்டனார். சிறந்த சிவநெறிச் செல்வராக விளங்கியவர்.  பறங்கியர் இலங்கையின் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தைப் பிடித்து ஆண்டு வந்த காலத்தில், பறங்கி அதிகாரியின் உணவுக்காக, யாழ்ப்பாணத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமும் முறை வைத்து ஒவ்வொரு கொழுத்த பசுவைக் கொடுக்க வேண்டியிருந்தது.  ஞானப்பிரகாசருடைய முறை வந்தது.  அப்போது ஞானப் பிரகாசர், “நீசன் கொன்று சாப்பிடும் பொருட்டுப் பசுவை நான் கொடுப்பேனாயின் அப்பசுவைக் கொல்லுதலாகிய பாவம் எனக்கு வந்து சேரும்.” என்று கருதி, அதன் காரணமாக ஒருவருக்கும் தெரியாது இரவு நேரத்திலே புறப்பட்டு, தமிழ்நாடு வந்து அடைந்து சிதம்பரம் போய்ச் சேர்ந்தார்.  அந்தத் திருத்தலத்தில் உள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் குளித்து மிளகும் சுத்தமான நீரும் உட்கொண்டு நாற்பத்தைந்து நாள் சிவகாமி அம்மை சந்நிதியில் அவ்வம்மையாரை வழிபட்டுக் கொண்டிருந்தார்.  பின் அங்கிருந்து திருவண்ணாமலையிலிருந்த நமது ஆதீனம் சென்றார்.  அங்குச் சென்று நமது குருமூர்த்திகளின் கட்டளைப்படி வடநாட்டுக்குத் தீர்த்த யாத்திரை செய்வான் வேண்டிப் புறப்பட்டுச் சென்றார்.  வடநாட்டிலுள்ள கெளடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.  அங்கே ஒரு பிராமண சந்நியாசியார் தமது சீடர்களுக்கு நாள் தோறும் தருக்கம், வியாகரணம், மீமாஞ்சை முதலியவற்றைக் கற்பித்து வேதாத்தியயனமும் செய்து வைத்துக் கொண்டிருந்தார்.  ஞானப் பிரகாசர் நாள் தோறும் முறையாக அங்குச் சென்று தூரத்திலே நின்று அவற்றைக் கேட்டு மனத்தில் இருத்திக் கொண்டு சிந்தித்து வந்தார்.  ஒருநாள் அந்த ஆசிரியர் இவரை நோக்கி,”நீவிர் யாவீர்?  நீர் இச்சாத்திரப் பாடங்களின் சாரத்தை உற்று நாள் தோறும் கவனிப்பதில் நன்கு புலப்படுகின்றனவா?” என வினவினார்.  அதற்கு ஞானப் பிரகாசர் கூறிய விடைகளைக் கேட்டு அவர் வியப்படைந்து, இவருக்கு அச்சாத்திரங்கள் முற்றும் முறையாகக் கற்பித்து வந்தார்.  ஞானப்பிரகாசர் ஓராண்டுக்குள் முற்றக் கற்றுணர்ந்தார். பின் ஆசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார்.
 
 
மீண்டும் திருவண்ணாமலைக்குச் சென்று , திருவண்ணாமலை ஆதீனத்தை அடைந்து அக்காலத்திலிருந்த குருமூர்த்திகளிடம் சந்நியாசம் பெற்றுக்கொண்டு சிவாகமங்களை ஓதி உணர்ந்தார்.  திருவண்ணாமலையில் சிலகாலமிருந்து பின் சிதம்பரம் சென்றார்.  அங்குத் தில்லையம்பலவாணரை வழிபட்டுக் கொண்டிருந்தார்.  மக்களுக்குப் பயன்படும் வகையில் சிதம்பரத்தில் திருக்கோயிலுக்குத் தென்கிழக்கு மூலைப்பகுதியில் திருக்குளம் ஒன்று அமைத்தார்.  அந்தத் திருக்குளம் “ஞானப் பிரகாசத் திருக்குளம்” என்று பெயர் பெற்று வழங்கப் படுகிறது.  ஆசிரமம் பெற்ற ஞானப்பிரகாசர் ஞானவிளக்காகத் திகழ்ந்தார்.  நமது ஆதீனக்குருமுதல்வரின் ஞானாசிரியராகிய  அருள் நந்தி சிவாசாரியார் இயற்றிய சிவஞான சித்தியாருக்குச் சிறந்த உரை இயற்றினார்.  வடமொழியில் பெரும்புலமை பெற்ற இவர் வடமொழியில் பல நூல்களை இயற்றினார்.  (காண்க:ஆதீனப் பனுவல்கள்) இவ்வாறு பெருவாழ்வு வாழ்ந்த ஞானப்பிரகாசர் ஒரு பங்குனி மாதம் பூச நாளில் இறைவன் திருவடிப் பேற்றினையடைந்தார்.  இப்பெரியார் யாழ்ப்பாணத்திலிருந்து நமது ஆதீனத்திற்குக்கிடைத்தது முதல் யாழ்ப்பாணத்தினர் தொடர்பு இன்றுவரை இருந்து வருகிறது.
 
சங்கரலிங்க முனிவர் (கி.பி. 1710—1780)
 
இப்பெரியார் பிரான்மலையில் ஆதீன அருளாட்சி இருந்த காலத்தில் குன்றக்குடியில் தங்கியிருந்த மாமுனிவர்;  ஞானக்கடலாகத் திகழ்ந்தவர்; குன்றக்குடித் திருமடத்திலிருந்து பல மாணாக்கர்களுக்குத் தமிழ் அறிவையும் சிவஞானத்தையும் வாரி வழங்கியவர்.  பிற்காலத்தில் “வாலசரஸ்வதி” என்று புகழ் பெற்ற முத்து வேலாயுதக் கவிராயர் இவரது மாணாக்கர்.  அவர் சங்கரலிங்க முனிவரை “நாற்கவி விலாசன்” என்றும் “மெய்த்தவஞான பூரணன்” என்றும் “சைவாகமப் பொக்கிஷம்” என்றும் தாம் எழுதியுள்ள ஒரு சீட்டுக்கவியில் குறிப்பிட்டுள்ளார்.
 
“புனிதமிகு நாற்கவி விலாசன்; மெய்த்தவஞான பூரணன்;
சைவாகமப் பொக்கிஷம் தான சங்கரலிங்க முனிவர் திரு
பொற்பதம் தன்னை நிதமும் போற்று
செயமுத்துவேலாயுதக் கவிராச பூபன்……….”
என்பது அந்தச் சீட்டுக்கவியின் அடிகள்.  மயூரகிரிப் புராணம்பாடிய வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை இம்முனிவரின் மாணாக்கரில் ஒருவராவார்.  மருது பாண்டியரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த 40 புலவர்களில் பலர் சங்கரலிங்க முனிவரின் அருமைச் சீடர்களாவார்கள்.
 
இத்தகு சங்கரலிங்க முனிவர் காலத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களாகிய மருது பாண்டியர சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்தார். அப்போது ஒரு நாள் மருதுபூபதிக்கு இராஜபிளவை நோய் ஏற்பட்டது.  பலமணி, மந்திர, மருந்துகளாலும் அந்த நோய் தீராமல் மிகவும் வருந்தினார்.  அப்போது ஒரு முதியவர் பூபதியை நோக்கி “அரசே,கலியுக வரதனாகிய முருகனுடைய மெய்யன்பர்களால் திருநீறு போடப்பட்டால் நோய் தீரும் என்றார்.  மருதுபாண்டியர், அங்ஙனமாயின் அத்தகையோர் யாருளர் என்று கேட்டார்.  “நாட்டுக்கோட்டைச் செட்டிப்பிள்ளைகளுக்கு முருகன் குலதெய்வம்.  ஆதலால் அவர்களுள் எவரேனும் திருநீறளிப்பது நலம்” என்று சொன்னார் அந்த முதியவர்.  மருது பாண்டியர் “அத்தகைய செட்டியார் ஒருவரைக் கொண்டு வருக.” என்று தம் ஏவலாளர்க்குப் பணித்தார்.
 
அக்கட்டளையை ஏற்றுச் சென்றனர் ஏவலாளர்.  எருது மாட்டில் ஏற்றிய உப்பு வியாபாரியாக எதிர்ப்பட்டார் காடன் செட்டியார் என்பவர்.  ஏவலாளர் அவரை அழைத்து வந்து பாண்டியர் முன்பு விட்டனர். இவ்வாறு விடப்பட்ட காடன் செட்டியார், “யாது ஆகுமோ?” என்று அச்சமுற்றார்.  இதனைக் குறிப்பாலுணர்ந்த மருது பாண்டியர் அவருக்கு முகமன் கூறி,“உங்கள் குலதெய்வமாகிய முருகக் கடவுளைப் பிரார்த்தனை செய்து நான் இந்தப் பிளவை நோயால் வருந்தாது பிழைக்கும் வண்ணம் திருநீறளிக்க வேண்டும்.” என்று வேண்டினார்.  செட்டியார் சிறிது மனந்தெளிந்தார்.  “இந்த மருது பாண்டியர்க்கு அருள் செய்து, என்ன இந்த இடத்தினின்றும் விடுவிக்க வேண்டும் சண்முகநாதா!”என குன்றக்குடி அருள்தரு சண்முகநாதப்பெருமானை நெஞ்சில் நீள நினைந்து பிரார்த்தித்துத் திருநீறு வழங்கினார்.  மருது பாண்டியர் அருகில் இருந்தவரை நோக்கிச் செட்டியாருக்கு உணவு வசதி, தங்கும் வசதி முதலியன தந்து உபசரிக்கும்படி பணித்தார்.  அவ்வாறே செட்டியார் அங்குத் தங்கி அச்சமுடையவராய் சண்முகக் கடவுளின் திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தார். 
 
நீண்ட நாட்களாய்த் தூக்கமின்றி வருந்திய மருதுபாண்டியர் அன்றிரவு அயர்ந்து தூங்கினார்.  தூங்கும்போது பாலசந்நியாசி ஒருவர் மயில் தோகையுடன் வந்து தம் பிளவையைப் பிதுக்கி ஆணியெடுத்து வாழையிலையில் வைத்துவிட்டுப் பிளவை வாயில் திருநீறு வைத்ததாகக் கனவு கண்டார்.  உடனே வெருண்டு எழுந்து பார்த்தார்.  அந்தச் செயல் யாவும் நனவாகவே இருக்கக் கண்டார்!  மகிழ்ந்து வியந்து காடன் செட்டியாரை அருகே வரவழைத்தார்!  என்னே, முருகனின் திருவருள் என்று வியந்தார்!  வாயார வாழ்த்தினார்!  தலையாரக் கும்பிட்டார்;  செட்டியாரைத் தம்முடன் சிலநாள் தங்கும்படி வேண்டினார்.
 
காடன் செட்டியாரும் மருதுபாண்டியருடன் சிலநாள் தங்கியிருந்தார்.  அதன்பின் காடன் செட்டியார் வழிபடும் முருகக் கடவுள், குன்றக்குடி சண்முகநாதன் என்றறிந்தார்.  காடன் செட்டியாருடன் குன்றக்குடி நோக்கிப் புறப்பட்டார்.  மலை மேல் முருகன் எழுந்தருளிய கோயில் சிறியதாக இருப்பதையும் அதனைச் சங்கரலிங்க முனிவர் போற்றி வருவதையும் கண்டார்.  சங்கரலிங்க முனிவரை மன்னர் கண்டதும் பரவசமானார்.  அவர் திருவடிகளைப் பற்றிப்போற்றினார்;  அளவிறந்த பொற்காசுகளைத் திருவடிகளில் காணிக்கையாக்கி வணங்கினார்.  தவநெறிச் செல்வராம் நமது முனிவர் அதனை ஏற்க மறுத்து விட்டார்கள்.  உடனே மன்னர் அந்தப் பொன்னைக் கொண்டு ஒரு கிராமத்தை உண்டாக்கி அதற்குச் “செம்பொன் மாரி” என்று பெயரிட்டுக் காளத்தி நாதருக்குக் காணிக்கையாக்கினார்.
 
பின், குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோயிலை விரிந்து பரந்த அளவில் மண்டபம், மதில், கோபுரம் முதலான திருப்பணிகளும் பிறவும் செய்து திருக்குட நீராட்டுச் செய்வித்தார்;  மருதாபுரியென்னும் தடாகமுண்டாக்கினார். தென்னந்தோப்புக்கள் வைத்தார்.  வெள்ளி மயில்வாகனம், பொற்கவசம், திருத்தேர் முதலியன செய்வித்துத் தைப்பூசத் திருவிழாவும் நடத்தினார்.  சண்முகநாதன் திருவடிக்கண் மாறாத பேரன்பு கொண்டு குன்றக்குடியில் அரண்மனையும் கட்டுவித்து அமர்ந்து வழிபட்டார்.  தமது நோய் தீர்வதற்குக் கருவியாயிருந்த காடன் செட்டியாரைப் போற்றி அவர் பெயரால் அன்னசத்திரம் அமைத்தார்.  இந்த அன்னசத்திரத்துக்கு வேண்டிய நிலங்களும் நிபந்தமாக விட்டார்; மேலும் குன்றக்குடித் தோகையடி விநாயகர் சந்நிதியில் உள்ள தூணில் காடன் செட்டியார் திரு உருவத்தை அமைக்கச் செய்து நன்றி செலுத்தினார்.  இந்தச் சிலையை இன்றும் காணலாம்.  அந்த நாளில் சாந்துப் புலவரைக் கொண்டு மயூரகிரிக் கோவையை இயற்றுவித்தார்.  மயூரகிரிக்கோவை 1778-ஆம் ஆண்டில் அரங்கேற்றப் பெற்றது.  இந்த மயூரகிரிக் கோவையில் சங்கரலிங்க முனிவர் இரண்டு இடங்களில் புகழப் படுகிறார்.  ஞானவள்ளலாகத் திகழ்ந்த நமது முனிவர் கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார்.  தன் கை கொடுப்பதைத் தன் மெய் அறியாத நிலையில் கொடுப்பவரென்றும் கவிஞரோடு கவிஞராக ஒட்டி வாழ்பவரென்றும் மயூரகிரிக் கோவையில் சாந்துப்புலவர்,
“கையன்றி மெய்யறியான் கொடைப்பாலிற் கவிஞர் தம் பால்
மெய்யொன்று சங்கரலிங்கத் தபோநிதி”
எனப் பாராட்டிப் பாடியுள்ளார்.  
 
இத்தகு பெருமை சான்ற மாமுனிவர் இருந்து சிறந்த ஆதீனம், நமது ஆதீனமாகும்.
 
ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள்
 
சைவாதீனங்களில் சென்னை நகரத்தில் பழமையான கட்டளை மடங்கள் உள்ள ஆதீனம் நமது திருவண்ணாமலை ஆதீனமே.  சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள ஆதீனக்கட்டளை மடத்தில் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் வசித்து வந்தார்கள்;  மகாவித்துவானாக விளங்கினார்கள்.  பல புலவர்களுக்கு இலக்கிய, இலக்கண, சாத்திரப் பாடங்கள் கற்பித்தார்கள்.  நமது ஆதீனத் தம்பிரான்களில் பலர் இவரிடம் கல்வி பயின்று சிறப்புற்றார்கள்.  அவர்களில் ஒருவரே திருவாவடுதுறை ஆதீனத்தில் 17 ஆவது பட்டத்தில் விளங்கிய அம்பலவாண தேசிக குருமூர்த்தி ஆவார் என்பதை முன்னரே கண்டுள்ளோம்.  இவரது கலை நுட்பத்தைக் கொண்டே இவரது ஆசிரியராகிய நமது ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளின் புலமையை நன்கு உணரலாம்.  இவர் ஆற்றிய தொண்டுகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது பெரிய புராண உரையாகும்.  பெரிய புராணம் முழுவதற்கும் சிறந்த பதவுரை இயற்றித் தந்த பெருமை நமது ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளையும், நமது திருவண்ணாமலை ஆதீனத்தையுமே சாரும்.
 
அமிர்தலிங்கத் தம்பிரான்
 
இப்பெரியார், சென்னையிலுள்ள மற்றொரு கட்டளை மடமாகிய நமது ஆதீன மயிலாப்பூர் மடத்தில் இருந்தவர்கள்.  பெரிய புராண உரை இயற்றிய ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் காலத்திற்கு முற்பட்டவர்.  மயிலாப்பூரில் திருக்கோயில் கொண்டுள்ள இறைவன்பால் மிகவும் ஈடுபாடு உடையவர்;  பெருங்கவிஞர்.  இப்பெரியோரால் இலக்கண, இலக்கிய சாத்திரப் புலமை பெற்றவர்கள் பலராவார்.  இவர் பலநூல்கள் இயற்றியதாகத் தெரிகிறது.  அவற்றுள் ஒன்று திருமயிலைப் புராணம் ஆகும்.
 
சரவண சுவாமிகள்
 
இம் முனிவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.  நமது ஆதீனத்தில் துறவு பூண்டு மயிலாப்பூர்க் கட்டளை மடத்தில் இருந்து பணியாற்றியவர்.  இவர் காலத்தில் கிறித்தவர்கள் சென்னைக் கடற்கரைப் பகுதியில் வாழும் மக்களுக்கு மருத்துவம் முதலிய உதவிகள் செய்து தமது சமயக் கருத்தை அவர்களிடையே பரப்பி வந்தனர்.  இதனைக் கண்ட இம்முனிவர் சித்த மருத்துவ முறையில் பல மருந்துகள் செய்து, கடற்கரைவாழ் அந்த மக்களுக்கு உதவி செய்து, நீண்ட நேரம் விரிவுரைகளாற்றி அவர்கள் மனத்தில் சைவ சமயக் கருத்துக்களைப் பதிய வைத்துள்ளார்.  இதனை நேரில் கேட்டு அனுபவித்த யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்கள் இப்பெரியாருக்குச் “சபாபிரசங்க சிங்கம்” என்னும் பட்டத்தை வழங்கினார்கள் என்றால் இவர்களது பேச்சாற்றலை நம்மால் கூற இயலுமா?  மேலும் நாவலர் அவர்கள் இவரை “சிவசாத்திரப் பண்டிதர்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.  இவர் அந்தக் கட்டளை மடத்தில் ஏறக்குறைய 50 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார்.  உ.வே.சா. அவர்கள் முதன் முதல் சென்னைக்குச் சென்று தமிழ் இலக்கிய ஏடுகள் தேட முயன்றபோது தமது தள்ளாத 70 ஆவது வயதிலும் அவர்களுடன் சென்று ஏடு இருக்கும் இடங்களை யெல்லாம் காட்டி, அவைகளைப் பெறும் முறைகளையும் கூறி உதவினார்.  இந்த உதவியை உ.வே.சா. அவர்கள் தாம் எழுதிய என் சரித்திரத்தில் பாராட்டி எழுதியுள்ளார்.
 
குமரசாமி முனிவர்
 
இப்பெரியார், நமது ஆதீனக் குரு முதல்வரைப் போற்றிப் பல பாமாலைகள் பாடியவராவார்.  ஞானவந்தாதி, தெய்வசிகாமணி நான்மணிமாலை, சிற்குருமாலை முதலியன இவர் பாடியருளிய நூல்கள்.  அவை உள்ளமுருக்கி ஆனந்த வெள்ளத்தழுத்தும் திருவாசகம் போன்றவை.  நமது ஆதீனத்தின் 39-ஆம் குருமூர்த்தியாக எழுந்தருளியிருந்த ஆறுமுகதேசிக குருமூர்த்தி, தாம் திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானாக இருந்த காலத்தில் நமது ஆதீனத்தால் பதிப்பிக்கப் பெற்ற தெய்வசிகாமணி நான்மணிமாலை, ஞானவந்தாதிப் பதிப்புக்கு வழங்கிய சிறப்புப் பாயிரத்தில் அருள்திரு குமரசாமி முனிவர் பற்றி,
 
“மல்லாரும் மதில்புடைசூழ் திருவண்ணா
மலையில் அருள் வடிவொன் றேந்தி
நல்லார்கள் தொழப் பொலியும் தெய்வசிகா
மணிக்குரவர் நாதன் தாளில்
மனம், மொழி, மெய் அவனடிக்கே உறுத்தி அருள்
ஒருங்கு பெற்ற வரதன், சைவத்
தனம் எனும் சித்தாந்த கலை தெளிந்து நிட்டஇ
கைவந்த தகையன், ஓட்டிற்
கனமுறு பொன்னும் கருதும் துறவினன் ஆ
ரியனை அன்றிக் கனவினும் வே(று)
உ(ன்)னமருவா உளக்குமர சாமிமுனிவரன்”
 
என்று பாடியிருப்பது இம்முனிவர் பெருமானின் பெருமைக்குச் சான்றாகி விளங்குகிறது.
 
சபாபதி முனிவர்
 
இந்தப் பெரியார் 38 ஆவது பட்டத்தில் எழுந்தருளியிருந்த பெரிய ஆறுமுக தேசிக குருமூர்த்திக்குக் காறுபாறாக இருந்து பல தொண்டுகள் செய்தருளியவர்.  மேகம் போன்ற கைம்மாறு கருதாத கொடைவள்ளல்.  இதனை, சிலேடைப்புலி வேம்பத்தூர் பிச்சு ஐயர் தாம் இயற்றிய சண்முகநாதருலாவில்
“…………………………………………………………………………………………….நன்மைதிகழ்
கார்பார் என் றேபெருமை கைக்கொடை காட்டுஞ்சிறந்த
கார்பார் என் றேபுலவர் கண்டுரைக்கும்—–சீர் போர்த்த
நன்மை திகழும் சபாபதி மாமுனி”
(கண்ணி 176—177)
என்று பாராட்டி உள்ளார்.  இவருடைய பணியால் ஆதீனத்திருமடம் ஒளிபெற்று விளங்கியது.  இப்பொழுதுள்ள திருமடத்துக் கட்டடங்கள் முழுவதும் இம்முனிவராலேயே கட்டப் பெற்றவையாகும்.  இதனைக் குன்றக்குடிக் குறவஞ்சி ஆசிரியர்,
“ஆழிசூ ழுலகின் மீ தார்குன்றை நகரினும்
ஊழிதோறும் அழிவிலா தோங்கு புகழ் புண்யநிலை
நிற்கட்டு மென்றே நினைத்தல் செய் தெழில்குலவு
கற்கட்டு மடமும் கவின்தரப் பிரதிட்டை செய் சபாபதிமுனி”
என்று குறிப்பிடுவார்.
 
மேலும் நெற்களஞ்சியங்கள் பல நிறுவினார்;  கும்பகோணத்திற்கு அருகில் நன்செய் நிலங்கள் வாங்கி நல்ல முறையில் விளைச்சலுக்கு ஆவன செய்தார்;  ஆதீனத் திருமடத்திற்குத் தேவையான பாத்திரங்கள் வாங்கினார்.
 
உழைப்பே தவமாகக் கொண்டு நமது ஆதீனத்தின் நிலையை பல்லாற்றானும் உயர்த்திய பெருமையுடைய இம்மாமுனிவரின் திருவுருவம் இவர்களது சொந்தப் பொறுப்பில் கட்டியருளிய ஆதீன முன் மண்டபத்தில் மேற்குப் பக்கத்துத் தூணில் புடைப்புச் சிற்பமாக உள்ளது.  இப்போது எழுந்தருளியிருக்கும் 45 ஆவது குருமகா சந்நிதானம் அவர்கள் இவர்களைப்போற்றும் வகையில் வைகாசி விசாகத் திருவிழாவில் சண்முகநாதப் பெருமான் திருமடத்துக்கு எழுந்தருளும்போது இந்தத் திருவுருவத்திற்குப் பரிவட்டம் கட்டச் செய்து மகிழ்கின்றார்கள்.
 
இராமலிங்கத் தம்பிரான்
 
இப்பெரியார், நமது திருமடத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் உழைத்தவர்.  பிரான்மலைப் பகுதியில் மாணிக்கவல்லி, அபிராமவல்லி, சுவர்ணவல்லி, அமிர்தவல்லி, மரகதவல்லி என்னும் ஐந்து தோப்புக்களை உண்டாக்கினார்.  அந்தத் தோப்புகள் ஆதீனத்திற்கு இப்போதும் நல்ல பலன் தந்து கொண்டிருக்கின்றன.  இப்பெரியாரும் தமது சொந்தப்பொறுப்பில் வயல்கள் வாங்கி ஆதீனத்திற்கு விட்டுள்ளார்.  காசுமீர், நேபாளம் முதலிய பகுதிகளுக்கும் சென்று அங்குத் தேடிய பொருள்களைக் கொண்டு நமது ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கோளக்குடி, பள்ளபட்டி ஆகிய இடங்களில் கி.பி. 1898—இல் கட்டளை மடம் கட்டுவித்தார்.
 
மதுரை ஆதீனத்தில் அப்பொழுது அருளாட்சி புரிந்து வந்த குருமகாசந்நிதானம் அவர்களைக் கொண்டு திருக்கோளக்குடித் தலபுராணம் இயற்றுவித்தார்கள்.
 
வேலாயுதத் தம்பிரான்
 
இவர் சிறந்த புலமை படைத்தவர்.  நிர்வாகத் துறையிலும் வல்லவர்.  “பரதேசி முத்திரை” என்ற மரியாதையைப் பெற்றவர் இவர்.  குன்றக்குடிக்கு அருகிலுள்ள காட்டாத்தாங்குடி என்னும் சிற்றூருக்கு ஒரு முறை சென்றிருந்தார்.  அங்கிருக்கும் பொய் சொல்லா மெய்யரென்னும் ஐயனாருக்கு ஆதீனத்தின் சார்பாகப் பூசை நடந்தது.  அப்பொழுது கிராம மக்கள் மழை இல்லாக் குறையை சுவாமிகளிடம் கூறி முறையிட்டனர். உடனே சுவாமிகளும் அங்கிருக்கும் ஐயனாரை நோக்கி ஒரு திருப்பாடல் பாடினார்.  மழையும் பெய்தது; வறட்சி நீங்கியது;  மக்கள் மனமும் குளிர்ந்தது.  அந்தத் திருப்பாடல் இதோ!
“தருணம் இதுவாகும் தான் மாரி பெய்யக்
கருணை செய்யாதிருக்கலாமா? – வருணனிடம்
நீருரைத்துப் பொய் சொல்லா மெய்யரே இந்நிமிடம்
மாரி பெய்யச் செய்வீர் வரம்.”
 
தியாகராசத் தம்பிரான்
 
இப்பெரியார் திருமடத்திற்கு வேண்டும் திருநீற்றைத் தயாரித்து உதவியர்.  இந்த ஆதீனத்தைச் சேர்ந்த பாண லிங்கங்கள் பலவற்றைச் சேகரித்தவரும் பாதுகாத்தவரும் இவர் எனக் கூறுவர்.  இவர் ஆதீனத்திற்கு வாங்கித் தந்த வயல் தியாகராச வயல் எனப் பெயர் பெறும் எனக் குன்றக்குடிக் குறவஞ்சி கூறுகின்றது.
 
கைலாசத் தம்பிரான்
 
இவர், இந்த ஆதீனத்தின் கும்பகோணம் கிளை மடத்தில் கட்டளைத் தம்பிரானாக நீண்டகாலம் பணியாற்றியவர்.  ஒரு சமயம் கும்பகோணத்திலிருந்த சொத்துக்கள் அபகரிக்கப்படாது செய்த பெருமை இவரையே சாரும்.  இக்காலத்தில் அருளாட்சி புரிந்து வரும் 45 ஆவது பட்டம் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களைத் தருமையாதீனத்திலிருந்து அழைத்து வரும் முயற்சியில் பெரும் பங்கு வகித்தவர் இப்பெரியார் ஆவார்.
 
அடியவர் திருக்கூட்டம்
 
இந்த ஆதீனத்தில் வழிவழியாக வந்த அடியவர் பெருமக்கள் பலராவார்.  அவர்கள் யாவரும் சிந்தையும் சொல்லும், செயலும் தூய்மையராய், வந்த இருவினை நீங்கிய மாண்பினராய் விளங்கி அருந்தொண்டாற்றிய அருளாளர்கள்.  இந்த ஆதீனத்தின் சொத்துக்களில் பல, ஆதீனத்தம்பிரான்களாகிய அடியவர்களாலேயே உண்டாக்கப் பெற்றன.  இவர்கள் குருமகாசந்நிதானங்களின் அளவிலா அருளுக்குப் பாத்திரர்களாய் விளங்கினர் என்று அறிகின்றோம்.
 
ஆதீனப் புலவர் பெருமக்கள்
 
நமது ஆதீனம் கலைபயில் கழகமாக விளங்கியது;  பல புலவர்களை உருவாக்கியது.  சைவ சித்தாந்தச் செந்நெறியை நாடெங்கும் பரப்பியது;  பல பெரும்புலவர்களும் மகாவித்துவான்களும் இங்கு வந்து இருந்து அருந்தமிழ் வளர்த்தனர்.  யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களும், மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்களும் பெரிய ஆறுமுக தேசிக குருமூர்த்திகளால் பாராட்டப்பெற்றதை முன்பே அறிந்தோம்.  சாந்துப்புலவர், மகாவித்துவான் சிலேடைப் புலி வேம்பத்தூர் பிச்சு ஐயர், யாழ்ப்பாணம் தில்லை நாத நாவலர்,உ.வே.சா. முதலியோர் இந்த ஆதீனத்தின் முன்னோர்களால் பாராட்டப் பெற்றவர்கள்.
 
இந்த ஆதீனத்தில் பணியாற்றி வந்த அப்பாபிள்ளை என வழங்கும் சுவாமிநாத பிள்ளை பெரும்புலவராகத் திகழ்ந்தார்.  உ.வே.சா. அவர்களை மிதிலைப்பட்டி முதலிய இடங்களுக்கு அழைத்துச் சென்று மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய பழைய ஏட்டுப் பிரதிகள் கிடைக்கும்படி செய்தவர்;  ஐயர் அவர்கள் இவரால் இந்தப் பக்கத்தில் வழங்கிய பல வரலாறுகளை அறிந்து கொண்டார்.  இதனால் இவரைப் பலபடப் பாராட்டித் தமது என் சரித்திரத்தில் எழுதியுள்ளார்.
 
திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை
 
இவர் சென்னை மயிலாப்பூர்க் கட்டளை மடத்தில் இருந்த பெரும்புலவர்.  திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தமது இளமைப் பருவத்தில் கி.பி.1841 இல் சென்னையிலுள்ள தமிழ்ப் புலவர்களைக் காணும் வேட்கையில் சென்றபோது திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையையும் சந்தித்தார்.  இவர் தம் பெரும்புலமையை அறிந்து இவரிடம் சிலகாலம் கல்லாடம், திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார், திருக்குறள்—பரிமேலழகருரை முதலியவற்றில் தமக்குள்ள ஐயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
 
இது குறித்து, மகாவித்துவான் தமது மாணாக்கர்களுக்குச் சொல்லுகையில், “திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை வீட்டிற்குச் செல்லும் பொழுது கபாலீசுவரர் கோயில் வாயிலின் வழியே தான் செல்வேன்.  அப்பொழுது உள்ளே சென்று சுவாமியைத் தரிசித்துக் கொண்டு போகவேண்டும் என்னும் விருப்பம் இருப்பினும் நேரமாய்விடுமே என்னும் கவலையால் சந்நிதியில் நின்றே அஞ்சலி செய்துவிட்டுச் செல்வேன்.” என்று சொன்னதாக உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.
 
வெண்பாப்புலிக் கவிராயர்
 
இந்த ஆதீனக் குருமூர்த்திகளால் ஆதரிக்கப் பெற்ற பெருங்கவிஞர்கள் பலர், சிலேடை பாடுவதில் சிறந்திருந்தார்கள்.  அவர்களுள் வெண்பாப்புலிக் கவிராயரும் ஒருவர்.  அவருடன் இருந்தவர் வேல்சாமிக் கவிராயர்.  அவரும் சிலேடையில் சிறந்தவர்.  வெண்பாப்புலிக் கவிராயர் ஒருநாள் நமது ஆதீனம் குரு மகா சந்நிதானம் அவர்களை தரிசித்துவிட்டு,  வேல்சாமிக் கவிராயரின் வீட்டுக்குச் சென்றார்.  அவ்வமயம் வேல்சாமிக் கவிராயரின் மழலை மகன் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.  அங்குச் சென்ற வெண்பாப்புலிக் கவிராயர், அவனிடம், “ உன் தந்தையிடம் புலி வந்திருப்பதாகச் சொல்லப்பா.” என்றார்.  உடனே கவிராயர், “உள்ளே வேல் இருக்கிறது. என்று கூறப்பா.” என்றாராம்.  இருவரும் மகிழ்ந்தனர்.  வெண்பாப்புலி சுவாமிநாத ஐயர் என்பவரும் இவ்வாதீனத்தால் பெரிதும் பாராட்டப் பெற்றிருக்கிறார்.
 
வீரபத்திரக் கவிராயர்
 
இக்கவிராயர் வெண்பாப் பாடுவதில் வல்லவர்.  இவ்வாதீனத்தில் வாழ்ந்த வேலாயுதத் தம்பிரானிடம் பயின்றவர்.  “குன்றக்குடிக் குறவஞ்சி” இயற்றியவர்.  இதற்காக “நாயகன் பிறப்பான்” என்னும் கிராமத்தைப் பரிசாகப் பெற்றவர்.  இப்புலவர் பெருமான் திருக்கோளக்குடியில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு வாகனக் கவி முதலிய நூல்களைப் பாடியுள்ளார்.  இறுதிக்காலத்தில் இவ்வாதீனத் தம்பிரானாகவும் விளங்கினார்.
 
கணேச பண்டிதர்
 
இப்புலவர் இளையாற்றங்குடிப் புராணம் இயற்றியவர். திருவண்ணாமலை ஆதீன வித்துவானாகத் திகழ்ந்தவர்.  இத்தகைய புலவர்கள் பலர் நம் ஆதீனத்தைச் சிறப்பித்து இருக்கிறார்கள்.
 
ஆதீனப் பனுவல்கள்
 
சிவஞான சித்தியார் சுபக்க உரை:
 
இந்த அரிய உரை நமது ஞானப்பிரகாச முனிவரால் எழுதப் பெற்றது.  இவ்வுரை சிவாக்கிரயோகிகள், மறைஞான தேசிகர் ஆகிய இரு உரைக்கும் பிற்காலத்தது.  சிவஞான மாபாடியத்திற்கு முற்காலத்தது.  இவ்வுரையில் எழுந்த சில கருத்துக்களையும் “எடுத்து” என்னும் சொல்லுக்கு எழுந்த உரையையும் மறுத்து, திருவாவடுதுறை ஆதீனம் சிவஞான முனிவர் சிவசம்வாத கண்டனம் என்னும் மறுப்பு நூல் ஒன்று எழுதினார்கள்.  அந்த மறுப்பிற்கு நமது ஆதீனச் சீடர்களில் ஒருவர் “வஜ்ஜிரதண்டம்” என்னும் பெயரிட்டு ஒரு மறுப்பு எழுதிச் சமாதானம் கூறினார்.  இது குறித்து 1875-இல் (யுவ ஆண்டு) வெளி வந்த சிவஞான சித்தியார் தத்துவப் பிரகாசர் உரையை வெளியிட்ட கொன்றை மாநகரம் சண்முகசுந்தரம் முதலியார் அவர்கள் “மறுப்புக்கள் ஒவ்வோர் அபிமான வகையால் உண்டாயின.  அன்று முதல் நூல் கருத்திற்கும் உரைக்கும் ஞானப் பிரகாசர் உரை மிகவும் ஒத்தே இருக்கிறது.”  என்று எழுதியுள்ளார்கள்.  கொன்றை மாநகரம் சண்முகசுந்தரம் முதலியார் அவர்கள் எந்த ஆதீனத்தையும் சாராதவர்.  சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் பதிப்பித்து நாட்டிற்கு வழங்கிய சித்தாந்த சைவப் பெரும்புலவராவார்.
 
பெரிய புராண உரை
 
இந்த ஆதீனத்து ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள், சேக்கிழார் பெருமான் செய்தருளிய தெய்வப் பனுவலாம் பெரிய புராணத்திற்குச் சிறந்த பதவுரை தந்தருளினார்.  பெரிய புராணம் முழுவதும் உரையுடன் வெளியிட்ட பெருமை இந்த ஆதீனத்தையே சேரும்.  இப்பெரியார் “காசியாத்திரை  மான்மியம்” என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
 
தெய்வசிகாமணி தோத்திர நூல்கள்
மற்றும் ஆதீன அடியார்களால் ஞானவந்தாதி, தெய்வசிகாமணி நான்மணிமாலை, சிற்குருமாலை, அருணாசல தேசிகமாலை முதலிய நூல்கள் இயற்றப் பெற்றுள்ளன.
 
வடமொழி நூல்கள்
 
எந்த ஆதீனத்தையும் விட இந்த ஆதீனத்தில் வடமொழி நூல்கள் பல இயற்றப் பெற்றுள்ளன. சிவஞான போதத்திற்குச் சிறந்த வியாக்கியானமும், பெளஷ்கர ஆகமத்திற்குச் சிறந்த விருத்தியும் ஞானப் பிரகாச முனிவர் செய்துள்ளார்.  மேலும் ஞானப்பிரகாச முனிவரால் இயற்றப் பெற்ற வடமொழி நூல்கள் வருமாறு:
 
1.சித்தாந்த சிகாமணி
2. பிரமாண தீபிகை
3. பிரசாத தீபிகை
4. அஞ்ஞான விவேசனம்
5. சிவயோக சாரம்
6. சிவயோக ரத்னம்
7. சிவாகமாதி மகான்மிய சங்கிரகம்
 
ஆதீன மரபு
 
நமது திருவண்ணாமலை ஆதீனத் திருமடத்தின் அடியவராக விரும்புவோர் முதன்முதலில் ‘பூப்பிள்ளை’ எனப்படுவர்.  அவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு இத்திருமடத்தின் பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு பற்பல பணிகளைச் செய்வர்.  பின்னர் அவர்கள் “தவசிப்பிள்ளை” என்ற நிலைக்கு உயர்வர்.  தவசிப் பிள்ளையாய் உயர்ந்தவர்கள் இல்லறத்தில் இருந்து கொண்டே குருமகாசந்நிதானம் அவர்களிடம் சமய விசேடதீக்கை முதலியன பெற்று, ஆதீனத்தின் ஆதரவாளராகவும் அருமைச் சீடராகவும் இருந்து பணிபுரிவர்.
 
தவசிப்பிள்ளையாய் இருப்பவருள் இல்லறம் புகாமல் தவநெறியில் தன்னைச் செலுத்தும் தியாகச் சிந்தனையுடையவர் குருமகாசந்நிதானம் அவர்களின் அருளால் காவி வழங்கப் பெற்றுத் துறவு நெறி மேற்கொள்வார்.  இவர் இந்த நிலையில் ‘குட்டி’ என்று அழைக்கப் பெறுவார். ‘குட்டி’யான நிலையில் அவர் பல அனுபவங்களையும் பெற்றிட குருமகாசந்நிதானத்தின் அருளாணை பெற்று வெளியே புறப்படுவார்.  இவ்வாறு வெளியில் புறப்பட்டுப் பரதேசங்களில் சுற்றுவார்.  இப்படிப் பரதேசம் சுற்றும் அடியவர்க்குப் “பரதேசி” என்று பட்டம் சூட்டப்பெறும்.  பற்பல தேசங்களுக்கும் சென்ற பரதேசி, தம்மை நாள் தோறும் தவத்தால் உயரத்திக் கொண்டு குருமூர்த்திகளின் அருளை அங்கெல்லாம் பரப்புவார்.  அப்பணிகளுக்கென வரும் பாத காணிக்கைகளைப் பெறுவார்.  அந்தப் பாத காணிக்கைகளைத் தமது உடைமையாகக் கிஞ்சிற்றும் மயங்கிக் கருதாது அப்பொருள் கொண்டு ஆங்காங்கே வசிக்கும் மக்களின் உடற்பிணி தீர்க்கும் மருத்துவப் பணியும், அறியாமை நீங்கும் அறிவுப் பணியும், உயிர்ப்பிணி நீக்கும் பதி, பசு, பாச நல்விளக்கப் பணியும் செய்து வருவார்.  இவ்வாறு மூன்றாண்டு அல்லது ஆறாண்டு வரை வெளியில் சுற்றிப் பணி செய்தபின், மீந்த பொருளுடன் மீண்டு ஆதீனத்திருமடம் வந்து சேர்வார்;  ஆதீனக் குருமூர்த்திகளின் திருவடிகளுக்கு அப்பொருளைக் காணிக்கையாக்குவார்.  அத்தகையோருக்கு ஆதீனக் குருமூர்த்திகள், “பரதேசி முத்திரை” என்னும் மதிப்பு வழங்கியருள்வார்கள்.  “பரதேசி முத்திரை” பெற்ற நிலையில் அதிகார போதையில் மூழ்காமல், ஆதீனத் தம்பிரான்களுக்கு அடியவராய்ச் செருக்கற்றுப் பணி செய்து வருவாராயின், அவர் “தம்பிரானாக” உயர்த்தப் பெறுவார்.  பின் அவர் தம்பிரான்களுள் சிறந்த நிலை பெறுவாராயின், “பெரிய பூசைத் தம்பிரான்” என்னும் தகுதி பெறுவார்.
 
பெரிய பூசைத்தம்பிரானாய், சிவபூசை செய்து சிறந்து, ஆணவம் ஒடுங்கிக் குருமூர்த்திகளின் திருவடிகளில் தன் மனம் ஒடுங்கி நிற்கும் உயர்நிலை கைவரப் பெற்றோர் “ஒடுக்கத் தம்பிரான்” என்னும் உயர் பெயரடைவர்.  இவர் குருமூர்த்திகளின் சார்பினால் சார்ந்ததன் வண்ணம் ஆகிய நிலையில் குருமூர்த்திகளுக்குரிய அடையாளம் யாவும் தன் பால் தோன்றிச் சிறந்த நிலையில் “சின்னப்பட்டம்” என்னும் சிறப்பினைப் பெறுவார்;  அதன்பின் ஆதீனக் குருமூர்த்திகளாக அமர்ந்து அருள் புரிவார்.
 
45 ஆவது குருமகா சந்நிதானம் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
(தவத்திரு குன்றக்குடி அடிகளார்)
 
இவர்கள் 5-9-1949—இல் ஆதீன இளவரசாக எழுந்தருளினார்கள்.  26—6—1952-இல் குருமகாசந்நிதானமாக ஞான பீடத்தில் அமர்ந்தருளினார்கள்.  இவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்று அழைத்து மகிழ்கிறது.  காலப்போக்கில் “அடிகளார்” என்ற ஒரே சொல்லாலும் அழைத்து மகிழ்கிறது.  பாரதியார் என்றால் எப்படி மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியாரை மட்டுமே குறிப்பதாகுமோ அதுபோல் “அடிகளார்” என்றால் இவர்களை மட்டுமே குறிப்பதாகக் கோடிக்கணக்கான மக்களிடையே இப்பெயர் நிலைபெற்றுள்ளது.  ஆதலால் அடிகளார் என்றே இங்கு குறிப்பிடுவது நலம்.
அடிகளார் அவர்கள் சித்தாந்தச் செந்நெறிக்கும் செந்தமிழ் மொழிக்கும், தமிழகத்து மக்களுக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றியுள்ள தொண்டுகள் நாடறிந்தவை.  இங்கே ‘தவளைத் தாவல் போல்’ சிலவற்றைக் குறிப்பிட்டு இந்த வரலாற்று நூலை நிறைவு செய்யவேண்டியுள்ளது.
 
அடிகளார் அவர்கள், உண்மைச் சமயநெறிக்கு மாறான கருத்துக்களை வெல்லும் சொல்லாற்றலும் செயலாற்றலும் படைத்தவர்கள்.  சைவ சமய சாத்திர தோத்திர நூல்களைப் பயின்று தெளிந்தவர்கள்;  தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் துறை போகியவர்கள்;  ஆங்கில மொழிப் புலமை உடையவர்கள். உலகின் பல்வேறு சமய நூல்களையும் தத்துவ நூல்களையும் ஆழ்ந்து பயின்று சிந்தித்தவர்கள்.  உலகிலுள்ள பல்வேறு அரசியல் ஞானநூல்களையும் கற்றவர்கள்; அறிவியல் நூல்களைப் பயின்றவர்கள்;  சமுதாய வரலாற்றை ஊன்றிக் கற்றவர்கள்;  சமுதாய நிகழ்வுகளைப் பாடமாகக் கொண்டு படித்தவர்கள்; படித்து வருபவர்கள்;  உழைப்பையே தவமாகக் கொண்டவர்கள்.  தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள்.  இவர்கள் செய்துள்ள தொண்டு அளப்பரியது.
 
சொற்பொழிவுப் பணி
 
 
 
அடிகளார் அவர்கள் தமிழகத்தின் தலை சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவர்;  நாவீறு படைத்த நாவலர்;  இவர்களது சொற்பொழிவு தனித்தன்மையுடையது.  அடிகளார் அவர்கள் தலைமை பூணாத அவைகள் இல்லை;  அரசியல் மேடைகளும் இல்லை;  இவர்களது சொற்பொழிவு அமையாத பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் இல்லை;  கல்லூரிகள் இல்லை;  மேனிலைப் பள்ளிகள் இல்லை; உயர்நிலைப் பள்ளிகள் இல்லை;  மாநகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் இல்லை; வானொலி நிலையங்கள் இல்லை; தொலைக்காட்சி நிலையங்கள் இல்லை.  இவர்களது செந்தமிழ் முழக்கம் கேளாத செவிகளில்லை;  இரவும் பகலும் பயணம் செய்து தமிழ்ச் சமய நெறியையும், செந்தமிழ்த் திறத்தையும் மனித நேயத்தின் மாண்பையும் பரப்பியவர்கள் இவர்கள்.
 
வட இந்தியாவிற்குப் பலமுறை சென்று பற்பல பெருநகரங்களில் சொற்பெருக்காற்றியவர்கள்.  தென்மாநிலங்களான கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரள மாநிலங்களில் பலமுறை சுற்றுப் பயணம் செய்து சொற்பொழிவாற்றியவர்கள்.  அந்தமான் தீவுக்குச் சென்று ஒரு வாரம் சுற்றுப் பயணம் செய்து உரையாற்றியவர்கள்.
 
கீழ்த்திசை நாடுகளான மலேசியா, சயாம், இந்தோனேசியா முதலிய நாடுகளுக்குச் சென்று சிவநெறிச் செல்வத்தை வாரி வாரி வழங்கினார்கள்.  28-12-54 முதல் 27-3-55 முடிய அந்த நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார்கள்.  இலங்கைக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களுக்கு அருள்நெறியமுதம் வழங்கினார்கள்.  பின்னர் பலமுறைகள் மேற்குறித்த நாடுகளுக்குச் சென்று பணியாற்றி வந்துள்ளார்கள்.
 
1971-இல் சோவியத் நாட்டுக்குச் சென்று 22 நாள் சுற்றுப் பயணம் செய்து தமிழ்ப் பண்பாட்டு நெறியைப் பரப்பியும் சோவியத் மக்களின் வாழ்நிலையைக் கண்டறிந்தும் வந்தார்கள்.
 
1982-இல் மலேசியா, சிங்கப்பூர், நாடுகளுக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்து அங்கிருந்தவாறே கொரியா, ஹாங்காங், சப்பான், செஞ்சீனா முதலிய நாடுகளுக்கும் சென்று சுற்றுப் பயணம் செய்து, சொற்பொழிவுகளாற்றியும் அந்த நாடுகளின் தொழில், கலை, பண்பாடு, அரசியல், வாழ்நிலைகளைக் கண்டறிந்தும் திரும்பினார்கள்.
 
ஆதீனப் பணிகள்:
 
இவ்வாறு அடிகளார் அவர்கள் சொற்பொழிவுப் பணிகள் ஆற்றி வரினும் ஆதீன நிர்வாகத்தையும், திருக்கோயில்களின் நிர்வாகத்தையும் இருகண்களாகப் போற்றி நடத்தி வருகிறார்கள்.  முந்திய குருமகா சந்நிதானங்கள் எல்லாரும் மடாலயத்திலேயே இருந்து அருளாட்சி செய்தவர்கள்.  அவர்களுக்கு ஆதீனச் சொத்துக்களையும் திருக்கோயில் சொத்துக்களையும் நேரில் காணும் வாய்ப்பு இல்லை.  ஆதீனத்திற்கு, சென்னை, செங்கை அண்ணா, தென்னார்க்காடு, திருவண்ணாமலை சம்புவராயர் தஞ்சாவூர், பசும்பொன் தேவர் திருமகனார், மதுரை, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் சொத்துக்கள் உள்ளன.  அடிகளார் அவர்கள் சென்னையிலிருந்து குமரிவரையுள்ள இந்த மடாலயச் சொத்துக்களையெல்லாம் நேரில் சென்று பார்வையிட்டுக் கவனித்து வருகிறார்கள்.
 
அடிகளார் அவர்கள் ஆதீனப் பொறுப்புக்கு வந்தபொழுது பல சொத்துக்கள் மிகக் குறைந்த குத்தகைக்கு விடப் பெற்றிருந்தன.  அவற்றையெல்லாம் ரத்து செய்து சொத்துக்களை மீட்டு நேரிடை நிர்வாகத்துக்குக் கொண்டு வந்தார்கள்.  அதைப் போலவே சாகுபடிதாரர் அல்லாமல் இடையில் ஆதாயம் பெற்று வந்த இடைத்தரக குத்தகை தாரர்களை அறிந்து, அந்தக் குத்தகைகளையும் ரத்து செய்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நேரிடைக் குத்தகைக்கு விட்டார்கள்.  ஆதீனச் சொத்துக்களை நேரிடையாகக் கவனிக்கவும் அபிவிருத்தி செய்யவும், வசூல் நடவடிக்கைகளை எளிதாக்கவும் ஆதீனச் சொத்துக்கள் அனைத்தையும் 21 கிளைகளாகப் பிரித்தமைத்து ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு காரியக்காரர் என நியமிக்கப் பெற்றனர்.
 
இதனால் நிர்வாகப்பணி சிறப்பாகவும் செம்மையாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது.  ஆதீன, திருக்கோயில் வருமானம் பெருகிக் கொண்டே வருகிறது.  நிர்வாக அலுவர்களையும், விவசாயிகளையும், குத்தகைதாரர்களையும் நேரில் அழைத்துக் குறைகளைக் கேட்டு ஆவன செய்கிறார்கள்.  இதனால் இவர்களது ஆட்சியில் குறை என்பதற்கு இடமேற்படுவதில்லை.  வீணான முறை மன்ற வழக்குகளும்  ஏற்படுவதில்லை.  இனி இவர்களது ஆட்சியில் செய்துள்ள பணிகளைப் பார்க்கலாம்.
 
மடாலயப் பணி
 
அடிகளார் அவர்கள் இளவரசாக இருந்தபோதே மடாலயத் திருமதிலை உயர்த்திக் கட்டுவித்தார்கள்.  பின் மடாலயக் கட்டடத்தைச் செப்பனிட்டுள்ளார்கள்.  மடாலயத்தின் மடைப்பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதுபட்டிருந்ததால் அதனைச் சின்ன மடத்திற்கு, மாற்றி அலுவலகக் கட்டடமாக முற்றிலும் புதுப்பித்துள்ளார்கள்.  சின்ன மடம் முழுவதையும் பிரித்துவிட்டுத் தேவைக்கேற்பப் புதிதாக அமைத்துள்ளார்கள்.
 
திருவண்ணாமலையில்
 
திருவண்ணாமலையில் வேட்டவலம் சாலைக்குத் தென்பால் உள்ளது ஆதீனக்குருமுதல்வர் திருக்கோயில்.  1951—இல் அடிகளார் அவர்கள் இளவரசாக இருந்த காலத்திலேயே இத்திருக்கோயிலைப் புதுப்பித்துத் திருக்குட நீராட்டுச் செய்வித்தார்கள்.  1990-இல் மீண்டும் புதுப்பிக்கப் பெற்று 2—9—90இல் திருக்குட நீராட்டு விழாச் செய்தருள்கிறார்கள்.  இத்திருக்கோயிலில் வழிபாடு முதலியன சிறப்பாக நடைபெற ஆவன செய்துள்ளார்கள்.
 
சொத்துக்கள் மீட்பு—அபிவிருத்திப் பணிகள்
 
சென்னை, மதுரை, நெல்லை, நாகை முதலிய நகரங்களில் இருந்த கட்டடங்கள் 1960இல் புதுப்பித்துக் கட்டப்பெற்றன.  திருக்கோளக்குடியில் நீண்டகாலமாகப் பிறர் ஆக்கிரமிப்பில் இருந்த நன்செய் ஏக்கர் 3.45, புன்செய் ஏக்கர் 7.23 மீட்கப் பெற்றன.  திருப்பரங்குன்றம், பாளையங்கோட்டை, திருமுல்லைவாசல் ஆகிய ஊர்களில் பிறர் ஆக்கிரமிப்பில் இருந்த மனை இடங்கள் மீட்கப் பெற்றன.  பள்ளப்பட்டி கிராமத்தில் புன்செய் ஏக்கர் 28—60 சாசுவத கவுல் குத்தகைக்கு இருந்தது, மீட்கப் பெற்றது.  இதில் தென்னை அபிவிருத்தி செய்யப் பெற்றுள்ளது.  மேலும் பள்ளப்பட்டியில் மலை ஓரப் புன்செய் ஏக்கர் 8-59 கை வசப்படுத்தி அதில் மரங்கள் உற்பத்தி செய்யப் பெற்றுள்ளன.  பள்ளப்பட்டி கிளையில் தென்னை 3500, மா 200, புளி 200 உற்பத்தி செய்யப் பெற்றுள்ளன.  கிருங்காக் கோட்டையில் புன்செய் ஏக்கர் 28—95இல் 2000 மரங்கள் வளர்க்கப் பெற்றுள்ளன.
 
மேலும் திருநெல்வேலி நகரத்தில் 45 கடைகள் கட்டப்பெற்றுள்ளன.  காரியக்காரர் குடியிருப்புக்குக் கட்டடம் ஒன்று விலைக்கு வாங்கப் பெற்றது.  பாளையங்கோட்டை சந்நிதித் தெருவில் 6 வீடுகள் கட்டப்பெற்றுள்ளன.  மதுரை சொக்கப்ப நாயக்கர் தெருவில் உள்ள கட்டடம் புதுப்பிக்கப் பெற்று அதில் 7 கடைகளும், குடியிருப்பு வீடுகளும் கட்டப்பெற்றுள்ளன.  மதுரை காவல் கூடத்தெருவில் கார்ஷெட்டும், கடைகளும் கட்டப் பெற்றுள்ளன.  மதுரை தெற்காவணி மூல வீதிக் கட்டடத்தை மாற்றியமைத்துக் கடைகளும், உட்பகுதியில் 33 குடியிருப்பு வீடுகளும் கட்டப் பெற்றுள்ளன.  குன்றக்குடி கீழரத வீதியில் ஒரு கட்டடம் (பாலித்தீன் பை தொழிலகம்) விரிவாக்கம் செய்யப் பெற்றது.  மேலும் குன்றக்குடியில் நேபாள் தறிக்கூடக் கட்டடம் 2 இலட்ச ரூபாய் செலவில் கட்டப்பெற்றுள்ளது.  சிதம்பரத்தில் செங்கழுநீர்ப் பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு கட்டடம் கட்டப் பெற்றுள்ளது.  சென்னையில் மயிலாப்பூர் நாட்டுப் பிள்ளையார் கோவில் தெரு மனையிடங்களில் குத்தகை அடிப்படையில் பெரிய அளவில் கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விடப் பெற்றுள்ளன.  மேலும் ஆதீன நிலங்கள் 187 ஏக்கர் பரப்பில் தென்னை, மா, புளி, முந்திரித் தோப்புகள் உருவாக்கப்பெற்றுள்ளன.
 
அபிவிருத்திப் பண்ணைத் தலங்களில் கிணறுகள், நீர் இறைவை இயந்திரங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.  மேலும் பல அபிவிருத்திப் பணிகள் செய்யப் பெற்றுள்ளன.  இதனால் ஆதீன வருமானம் பெருகியுள்ளது.  விரிக்கிற்பெருகும்.
 
ஐந்து கோயில்கள்
 
குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீனத்துக்குச் சொந்தமான பிரான்மலை வகை ஐந்து கோயில்களுக்கு வழிவழி (பரம்பரை) அறங்காவலராக இருந்து வருகிறார்கள்.  இந்த ஐந்து கோயில்களாவன:
 
1.   அ. அருள் தரு மங்கைபாகர் திருக்கோயில்—- பிரான்மலை
     ஆ. அருள் தரு திருக்கொடுங்குன்ற நாதர் திருக்கோயில்—பிரான்மலை
      இ. மேற்படி உட்கடைக் கோயில் அருள் தரு உருத்திர கோடீசுவரர் திருக்கோயில்— சதுர்வேதி மங்கலம்
  2. அருள் தரு திருத்தளிநாதர் திருக்கோயில், திருப்புத்தூர்
  3. அருள் தரு ககோளபுரீச்சுரர் திருக்கோயில், திருக்கோளக்குடி
  4. அருள் தரு சண்முகநாதப் பெருமான் திருக்கோயில், குன்றக்குடி.
  5. அருள் தரு தேனாச்சியம்மன் திருக்கோயில்,  தேனாச்சியம்மன் கோயில்
 
பிரான்மலைத் திருக்கோயில்
 
அடிகளார் அவர்களின் அருளாட்சித் தொடக்க காலத்தில் இத்திருக்கோயிலைப் புதுப்பித்துத் திருக்குட நீராட்டுச் செய்வித்தார்கள்.  இத்திருக்கோயிலுக்கு மின் விளக்குகள் அமைக்கப் பெற்றன.  இது திருஞானசம்பந்த சுவாமிகளின் தேவாரப் பதிகம் பெற்ற திருக்கோயில்.  ஆதலால் அவரருளிச் செய்த தேவாரத் திருப்பதிகக் கல்வெட்டு அமைத்துள்ளார்கள்.
 
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா இங்கு நடைபெற்று வருகின்றது. பிரான்மலை, சங்க காலத்து வள்ளல் பாரி ஆண்ட பறம்புமலை.  அடிகளார் அவர்கள் வள்ளல் பாரியையும், சங்ககால இலக்கியங்களையும் போற்றும் வகையில் இங்கு நடைபெறும் சித்திரை விழாக் காலத்தில் வள்ளல் பாரிவிழா நடத்தி வருகிறார்கள்.  தமிழகத்தில் நடைபெறும் புகழ் பெற்ற விழாக்களில் இவ்விழாவும் ஒன்று.  இவ்விழாவில் பேரறிஞர்களுக்கும், பெருங்கவிஞர்களுக்கும், பெருங்கலைஞர்களுக்கும் தவத்திரு அடிகளார் அவர்கள் பட்டம் வழங்கிச் சிறப்பித்து வருகிறார்கள்.  புதிதாக இராஜகோபுரம் எழுப்பும் திருப்பணியோடு இத்திருக்கோயில் திருப்பணி பெருமளவில் நடைபெற்று வருகிறது.  விரைவில் திருக்குட நீராட்டு விழாவும் நடைபெற விருக்கிறது.
 
சதுர்வேதிமங்கலம் திருக்கோயில்
 
இங்கு மாசிமகத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆதீன மண்டபப்படி நாளன்று சமய இலக்கிய நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள்.  இறைவிக்குச் சந்தனக்காப்பு அடிக்கடி செய்வித்து அகமகிழ்வு கொள்கிறார்கள் அடிகளார் அவர்கள்.
 
திருப்புத்தூர்த் திருக்கோயில்
 
இத்திருக்கோயிலில் வைகாசித் திருவிழா ஆண்டு தோறும் நடத்தி வருகிறார்கள்.  இவ்விழாக்காலத்தில் சைவத் திருமுறை நெறி மக்களிடையே பரவும் வகையில் 1957 முதல் திருமுறை விழா நடத்தி வருகிறார்கள். இவ்விழாவில் சமயப் பேரறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், தொண்டர்கள் முதலியோருக்குப் பட்டம் வழங்கிச் சிறப்பித்து மகிழ்கிறார்கள் தவத்திரு அடிகளார் அவர்கள்.  மேலும் இத்திருமுறை விழாவின் அங்கமாக ஒருநாளில் அப்பரடிகள் விழாவும் நடத்தி வருகிறார்கள்.  அப்பரடிகள் சூளையில் இருத்தல், கல்லின் மேல் மிதத்தல், யானையின் காலால் இடறப்படுதல் முதலியவற்றை வரலாற்றுக் காட்சிகளாக நடைபெறச் செய்து அப்பரடிகளின் பெருமையை மக்கள் உணருமாறு செய்வித்தருளுகிறார்கள்.
 
இங்குள்ள திருத்தளிக்குளம் (சீதளி) ஏறத்தாழ 10 ஏக்கர் பரப்புடையது.  இது நீண்டகாலமாகத் தூர்வை யெடுக்கப் பெறாதிருந்தது.  அடிகளார் அவர்களின் முயற்சியினால் 1987-இல் தமிழக அரசு அறநிலையத்துறை உதவியுடன் ரூ 4 லட்சம் செலவில் தூர்வையெடுத்துப் பழுதுபார்க்கப் பெற்றது.  இப்போது புதிதாக இராஜகோபுரம் எடுக்கும் திருப்பணியுடன் இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து வருகிறார்கள்.  விரைவில் திருக்குட நீராட்டு விழா நடைபெறவிருக்கிறது.

 

 

 

அருள் நெறி மன்றம்

 

அருள் நெறிப் பணியில் ஒன்று கல்விப் பணி என்பது அடிகளார் அவர்கள் திருவுள்ளம்.  மடமை நீங்கினால் கடமை இன்னதெனத் தெரியும்.  கடமை தெரிந்தால் துன்பம் தானே நீங்கும்;  எனவே கல்விப் பணியை மேற்கொள்ள 1955 இல் அருள்நெறித் திருப்பணி மன்றம் என்ற அமைப்பை நிறுவினார்கள்.  இந்த மன்றத்தின் வழி ஆதீனம் கல்வி அறக்கட்டளை நிறுவியுள்ளது.  அதன்மூலம் பசும்பொன் தேவர் திருமகன், நெல்லை, தஞ்சை, காயிதே மில்லத், பெரியார் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல ஊர்களில் பல கல்வி நிலையங்களைத் தோற்றுவித்து நடத்தி வருகிறார்கள். 3, தொடக்கப் பள்ளிகளும், 4 நடுநிலைப் பள்ளிகளும், 2 உயர்நிலைப் பள்ளிகளும், 4 மேல்நிலைப் பள்ளிகளும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் “திருவள்ளுவர் கல்லூரி” என்ற முதல்தரக் கல்லூரி ஒன்றும் ஆக 14 கல்வி நிறுவனங்கள் நடைபெற்று வருகின்றன.

 

தமிழ்நாடு தெய்விகப் பேரவை

 

தமிழ்நாடு தெய்விகப் பேரவை, தமிழகத் திருமடங்களின் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பேரமைப்பு.  அருள்நெறித் தந்தை, இந்தப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று, 20-12-69 முதல் 10-5-76 வரை தலைவர் பொறுப்பில் இருந்து பணி செய்தார்கள்.  அந்தக் காலத்தில் பேரவை மூலம் இவர்கள் ஆற்றிய பணி வரலாற்றுச் சிறப்புடையதாகும்.  இப்பணி குறித்துச் சற்றுவிரிவாக எழுதுவதென்றால் அதுவே ஒரு பெரிய நூலாகி விடும்.

 

தமிழ்நாடு தெய்விகப் பேரவைத் தலைவராக இவர்கள் பணியாற்றிய ஆறு ஆண்டுக் காலத்தில் பேரவை மூலம் தமிழகத் திருக்கோயில்களிலெல்லாம் வார வழிபாடு, கூட்டு வழிபாடுகள் நிகழ்ந்தன;  நாடெங்கும் தீண்டாமை விலக்குப்  பணி நடந்தது;  திருக்கோயில் தோறும் உழவாரத் திருத் தொண்டு நடை பெற்றது.  திருக்கோயில்களின் தூய்மை பேணப் பெற்றது; சமுதாய நலப் பணிகள் நிகழ்ந்தன;  பெரியதொரு அச்சகம் பேரவைக்குச் சொந்தமாக அமைக்கப் பெற்றது.  அதன் மூலம் சமய நூல்கள், அறநூல்கள், இயக்க வெளியீடுகள் இலட்சக் கணக்கில் பதிப்பிக்கப் பெற்று நாடு முழுதும் வழங்கப் பெற்றன. ‘அருளோசை’ ‘செய்திக்கதிர்’ இதழ்கள் தரமான முறையில் வெளியிடப் பெற்றுத் தமிழகமெங்கும் பரவின.  அப்பரடிகளும், இராமாநுஜரும் கண்ட பெருநெறி எங்கும் பரவியது;  திருக்கோயில்கள் பல திருப்பணி செய்யப் பெற்றுத் திருக்குட நீராட்டு விழாக்கள் நடைபெற்றன;  சமயப் பரப்புநர் பலர் நியமிக்கப் பெற்றுச் சமயச் சொற்பொழிவுகளும் தொண்டும் நிகழ்ந்தன;  மாவட்ட மாநாடுகள் நடந்தன.  மாநில மாநாடுகள் நடந்தன;  குமரி மாவட்டம் நாகர்கோயிலில் 1975 இல் நடைபெற்ற மாநில மாநாடு, தமிழகச் சமய உலகச் சரித்திரம் கண்டிராத மாநாடு!  2606 கிளைப் பேரவைகளையும் 92669 உறுப்பினர்களையும் கொண்ட மாபெரும் இயக்கமாக இது வளர்ந்திருந்தது.

 

இப்படி வளர்ந்து சிறந்த தமிழ்நாடு தெய்விகப் பேரவை, தமிழகத்தின் நல்லூழின்மையால் 1976 சனவரியில் ஏற்பட்ட நெருக்கடி கால அரசைப் பயன்படுத்தி, சூதர்களால் முடக்கப் பெற்றது.  எனினும் தமிழகமெங்கும் விரிந்து பரந்த நிலையில் வளர்ந்த இப்பேரவைக் கிளைகள் ஆங்காங்கே சிறந்த பணிகளைச் செய்து வருகின்றன.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்!”

 

திருக்குறள் பேரவை

 

தவத்திரு அருள்நெறித் தந்தை, திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுடையவர்கள்.  திருக்குறள்நெறி உலகமனைத்தும் ஒப்புகின்ற—உலகனைத்தையும் வாழ்விக்கின்ற உயர்நெறி என்று கருதுபவர்கள்.  இனி எதிர்காலத்திற்கும் திருக்குறள் நெறி ஏற்றது என்று உறுதியாக நம்புபவர்கள்.  மாமேதை லெனின் கண்ட சமதர்மச் சமுதாயத்தைத் திருக்குறள் மூலம் படைத்துக் காட்டலாம் என்று கருதுபவர்கள்.  சம உரிமை, சம வாய்ப்பு, சமநிலைச் சமுதாயத்தை, சாதி, மத, இன பேதமற்ற பொதுமைச் சமுதாயத்தை—ஒப்புரவுச் சமுதாயத்தைப் படைக்க வல்லது திருக்குறள் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.  எனவே திருக்குறள் நெறியை நடைமுறைப்படுத்தும் ஓர் இயக்கம் வேண்டுமென விழைந்தார்கள்.  இந்த விழைவு, 11—6—1973இல் திருக்குறள் பேரவையாக மலர்ந்தது.

 

இந்தத் திருக்குறள் பேரவை, ஆரவாரமின்றித் தமிழகம்முழுவதும் பரவிக்கால் கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகின்றது.  ஆயிரக் கணக்கான உறுப்பினர்கள் ஆழமாகப் பணி செய்து வருகின்றனர்.  பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.  திருக்குறளை நடைமுறைப் படுத்தும் இயக்கமாதலால் ‘செய்க பொருள்’ கருத்தரங்குகள் நடத்தி,கூட்டுறவு முறையில் தொழில்கள் தொடங்கிப் பலருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி வருகிறது;  கிராம ஏற்புத் திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது;  பழகும் பண்பியலைப் புகட்டி வருகிறது;  கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தி மனித உறவையும் நேயத்தையும் வளர்த்து வருகிறது;  திருக்குறள் உரையாய்வுக் கருத்தரங்குகளை நடத்தி, திருக்குறளின் உண்மைப் பொருளைக் கண்டுணரச் செய்து வருகிறது;  உறவு கலந்து வாழும் ஒப்புரவு நெறியை வற்புறுத்தி வருகிறது.  இப்பேரவை, பல மாவட்ட மாநாடுகளையும் மாநில மாநாடுகளையும் நடத்தி, தமிழக மக்களிடையே தனிச் சிறப்பினைப் பெற்று வருகிறது.

 

திருவருள் பேரவை

 

1982-இல் குமரி மாவட்டம், மண்டைக்காட்டில் நடந்த இனக்கலவரம் நாடறிந்தது.  இந்தக் கலவரத்தின் போது இவர்கள் அங்குச் சென்று 17—3—82 முதல் 26—3—82 வரை தங்கி, தமது உயிருக்கும் அஞ்சாமல் செய்த அமைதிப் பணி வரலாற்றுப் புகழ் வாய்ந்தது;  1981 இல் இராமநாதபுரம் இனக்கலவரம் 1982இல் புளியங்குடி இனக்கலவரம் முதலியவற்றில் இவர்கள் மேற்கொண்ட அமைதிப் பணி மக்களிடையே நல்லுணர்வையும் பெரும்பயனையும் விளைவித்தது.  இந்த அமைதிப் பணிகளைச் செய்த போது கிடைத்த பட்டறிவினால் 1982இல் நாகர் கோயிலில் “திருவருள் பேரவை” என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்கள்.  இந்த அமைப்பில் எல்லாச் சமயங்களையும் சார்ந்த மதிப்பு மிக்க பெரியோர்கள் உறுப்பினராகவுள்ளனர்.  அவ்வப்போது மதரீதியாக எழும் பிரச்சனைகளையும், பூசல்களையும் அப்போதைக்கப்போது அணுகி இப்பேரவை தீர்வு கண்டு வருகிறது.  திண்டுக்கல்லில் இந்த ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது சர்வ கட்சியினரையும் அழைத்துப் பேசி, அவர்களுடன் தாமும் உண்ணா நோன்பிருந்து அமைதிப் பணி செய்தார்கள்.  இத்திருவருள் பேரவை இப்போது வேலூர், கோவை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை,இராமநாதபுரம், திண்டுக்கல்,மதுரை, நாகர்கோயில் முதலிய பெருநகரங்களில் அமைந்து பணியாற்றி வருகிறது.

 

கிராமத் திட்டக் குழு

 

“கோயிலைச் சார்ந்து குடிகளும் குடிகளைச் சார்ந்து கோயிலும்” வாழ வேண்டும் என்பது அடிகளார் அவர்களின் முழக்கம்.  மக்கள் வறுமைப் பிணி நீங்கினாலே உயிர்ப்பிணி நீக்கும் சமயப்பணி சிறக்கும் என்பது இவர்களின் கோட்பாடு.  இதனடிப்படையில் குன்றக்குடியில் இவர்கள் அருளாட்சிக்கு வந்த காலத்திலிருந்து கூட்டுறவு முறையில் தொழில்களைத் தொடங்குவித்து நடத்தி வந்தார்கள்.  இந்த உணர்வு காலப் போக்கில் வளர்ந்து 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளில் பிறந்த நாளன்று “குன்றக்குடித் திட்டக்குழு”வாக மலர்ந்தது.  இத்திட்டக் குழுவுக்குக் காரைக்குடி மத்திய மின் வேதியியல் விஞ்ஞானிகள் அறிவுக் கொடை வழங்கி வருகின்றனர்;  அரசுடமையாக்கப் பெற்ற வங்கிகள் நிதி உதவி செய்து வருகின்றன. அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வழி நடத்தி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.  மக்கள் பிரதிநிதிகள் திட்டக்குழு உறுப்பினர்களாக இருந்து உழைப்புக் கொடை வழங்கி வருகிறார்கள்.  அடிகளார் அவர்கள் இத்திட்டக்குழுவின் நெறியாளராக இருந்து அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள்.  குன்றக்குடியில் கூட்டுறவு முறையில் பல தொழில்கள் நிறுவப் பெற்றுள்ளன.  தனியார் தொழில்கள் சிலவும் அமைக்கப் பெற்றுள்ளன.  அரசுத் துறை நிறுவனங்கள் தோன்றியுள்ளன.  எல்லா வகையாலும் குன்றக்குடியைத் தன்னிறைவுடைய கிராமமாக்குவது இவர்களது நோக்கமாக இருந்து வருகிறது.  இதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.  குன்றக்குடிக் கிராமத்தில் கூட்டுறவில் அங்கம் வகிக்காத குடும்பமே இல்லை என்பதும் வேலை வாய்ப்பில்லாத குடும்பம் குன்றக்குடியில் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  இந்தக் கிராமத் திட்டப் பணி பற்றி அறிந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்கள், “This is what I should like for all villages” என்று பாராட்டியுள்ளார்.  இந்திய அரசின் திட்டக்குழு, “Kundrakkudi Pattern” என்று ஏற்றுப் பாராட்டியுள்ளது.  இந்தத் திட்டப் பணியை இப்போது பசும்பொன் மாவட்ட அளவிலும் அடிகளார் அவர்கள் செயற்படுத்தி வருகிறார்கள்.  இந்த மாவட்டத்தில் பல இடங்களில் தொழில் நிறுவனங்கள் அமைக்கப் பெற்று மக்கள் பலரை வாழ்வித்து வருகின்றன.  நெல்லை, மதுரை, காயிதேமில்லத், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தஞ்சை, தென்னார்க்காடு முதலிய மாவட்டங்களிலும் இத்திட்டப்பணி விரிவடைந்துள்ளது.  தஞ்சை மாவட்டத்தில் திருநாளைப் போவார் தோன்றிய மேலாதனூர்க் கிராமத்தையும், மங்கையர்க்கரசியார் தோன்றிய கீழப் பழையாறைக்கிராமத்தையும் தன்னிறைவுக் கிராமங்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.  இவ்விரு ஊர்களிலும் சில தொழில் நிறுவனங்களை இப்போது அமைத்துள்ளார்கள்.  இவ்வாறு கிராமத் திட்டக்குழுப் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

தீண்டாமை விலக்குப் பணி
 

நமது சமய மக்களிடையே உள்ள தீண்டாமையும் சாதி வேறுபாடுகளும் அறவே நீங்கவேண்டும் என்பது அடிகளார் திருவுள்ளம்.  இதற்காக இவர்கள் ஆற்றி வந்துள்ள பணிகள் பல.  இவர்கள் ஆதீனத்தலைவராகப் பட்டம் ஏற்றருளிய விழாவை, தீண்டாமை ஒழிப்பு மாநாடாகவே நடத்தினார்கள்.  அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளாகிய சனவரி 30 ஆம் நாளைத் தீண்டாமை விலக்கு நாளாகக் கொண்டு கருத்தரங்குகள் நடத்தி வருகிறார்கள்.  ஒவ்வொரு ஆங்கில மாதம் 30 ஆம் நாளன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களின் கல்வி வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம், முதலியனவற்றை அறிந்து ஏற்ற பணிகள் செய்து வருகின்றார்கள்.  11—8—84 முதல் 26—8—84 வரை தமிழகத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு தீவிர இயக்கத்தின் தலைவராக இருந்து பணி செய்தார்கள்.  அப்போது தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்த பாத யாத்திரைகளிலும் கலந்து கொண்டார்கள்.  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்திற்கு, பலவகையாலும் இவர்களாற்றி வரும் தொண்டு பரந்தது, விரிந்தது;  ஆழமானது.
 
பிற சமுதாயப் பணிகள்
 
மேலும் இவர்கள் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் வசித்து வரும் ‘வலையர்’ என்ற பிற்பட்ட வகுப்பினர் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.  பொதுவாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு, பிற்பட்ட வகுப்பு வசதியற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புத் தேடித் தருதல், கல்வி வாய்ப்பு வழங்குதல்—தேடித் தருதல் முதலிய பணிகளைக் கடமையாகக் கொண்டுள்ளார்கள்.  வெள்ளம், தீ விபத்துக்கள், கலவரங்கள் நடைபெறும் இடங்களுக்கெல்லாம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடைகள் உணவுப் பொருள்களும் வழங்கி வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வையும் இங்கே சுட்டிச் சொல்வதென்றால் பக்கம் விரிந்து விடும்.
 
சுதேசி விஞ்ஞான இயக்கம்
 
சுதேசி விஞ்ஞான இயக்கம், கிராமப்புற மக்களிடையே அறிவியலைக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப் பெற்றது.  இந்த அமைப்பில் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பலரும், நாட்டின் தலை சிறந்த அறிவியல் அறிஞர்களும் உறுப்பினராக இருந்து பணி செய்து வருகிறார்கள்.  இந்த இயக்கம் அறிவியலைத் தமிழ்மொழியில் கொணரவும், கிராமப்புற மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொண்டு செய்து வருகிறது.  கிராமப்புறங்களில் அறிவியல் கண்காட்சிகள் பல நடத்தியுள்ளது.  மேனிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், அறிவியல் ஆசிரியர்களுக்கும், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தின் வழி மறு பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளது.  இந்த இயக்கத்தின் புரவலராக இருந்து அடிகளார் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
 
எழுத்துப்பணி
 
தவத்திரு அடிகளார் அவர்கள் இதுவரை 35 நூல்கள் எழுதியுள்ளார்கள்.  ‘மணிமொழி’,  ‘தமிழகம்’, ‘அருள் நெறி’, ‘மக்கள் சிந்தனை’ முதலிய இதழ்களை வெளியிட்டு, அவற்றில் பல கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்கள்; சுதேசி விஞ்ஞான இயக்கத்தின் ‘அறிக அறிவியல்’ என்னும் இதழுக்கு நிர்வாக ஆசிரியராக இருந்து பணி செய்து வருகிறார்கள்.  அவ்வப்பொழுது கவிதைகள் பல புனைந்துள்ளார்கள்.  கவியரங்கம் பலவற்றிற்குத் தலைமை வகித்துள்ளார்கள்.  சிறுசிறு நாடகங்களும் எழுதி அரங்கேற்றம் செய்துள்ளார்கள்.
 
பிற பொறுப்புகள்
 
அடிகளார் அவர்கள் மேலும் பல அரசுப்பதவிகளிலும் புகழ் பெற்ற நிறுவனங்களிலும் இருந்து பணியாற்றியுள்ளார்கள்.  பணி செய்து வருகிறார்கள்.  அவை மிகப் பலவாதலின் இங்கே சில மட்டும் குறிக்கப்படுகின்றன.
 
  1. தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர் (1969—76)
  2. இந்திய அரசு சமூகநலக்குழு உறுப்பினர்  (1960)
  3. அகில இந்திய சமாதானக்குழு தலைமைக் குழு உறுப்பினர் (1971)
  4. தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினர்
  5. தமிழ்நாடு அரசு சமூகப் பண்பாட்டுக் கல்வி மறுமலர்ச்சிக் குழு உறுப்பினர்
  6. தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்
  7. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை உயர் மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்
  8. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை ஆலயங்கள் சீர்திருத்தக் குழு உறுப்பினர்
  9. இந்திய அரசு அமைச்சகம் அறிவியல் தொழில் நுட்பத் துறைக்குழு உறுப்பினர்
  10. தமிழ்நாடு அரசு மதுவிலக்குப் பிரச்சாரக் குழு உறுப்பினர்
  11. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கிராம ஒருங்கிணைப்பு வளர்ச்சிக் குழு உறுப்பினர்
  12. தமிழ்நாடு அரசு தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தக்குழு உறுப்பினர்
  13. தமிழ்நாடு அரசு மாநில அஞ்சல்தலை வெளியீட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்
  14. தஞ்சை, தமிழ் பல்கலைக் கழகம்—பாடத் திட்ட ஆய்வுக் குழு உறுப்பினர் (20—8—85——–19—8—88)
 
 
திருமடத்துக்குத் தலைவர்கள் வருகை
 
தவத்திரு அடிகளார் அவர்களின் பணிகள் பன்முக நிலையுடையவை.  அரசியல் கட்சி வேறுபாடற்றவை;  பொதுத் தன்மையுடையவை.  ஆதலால் எல்லாக் கட்சித் தலைவர்களும் அடிகளார் பால் அன்பும் மதிப்பும் கொண்டு குன்றக்குடி ஆதீனத்திற்கு வருகை தந்துள்ளார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள்:
 
  • பேரறிஞர் அண்ணா அவர்கள் (1956, 1962)
  • ஆசாரிய விநோபாபாவே அவர்கள் (1956)
  • இராசாசி அவர்கள் (1957)
  • பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் (பலமுறை)
  • திரு நம்பூதிரிபாட் அவர்கள், 
  • திரு பி.இராமமூர்த்தி அவர்கள் 
  • திரு ப.ஜீவானந்தம் அவர்கள், 
  • பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், 
  • திரு ப.கக்கன் அவர்கள் ஆகியோர் 
குறிப்பிடத் தக்கவர்கள். மற்றும் பல தலைவர்கள் கட்சி வேறுபாடின்றி வருகை தந்திருக்கிறார்கள்.
 
பெற்ற சிறப்புக்கள்
தவத்திரு அடிகளார் அவர்களின் திருக்குறள் நெறி பரப்பும் பணியைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 15—1—1986 இல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில் தமிழக அரசின் முதலாவது “திருவள்ளுவர் விருது” அளித்துப் போற்றியது.
 
இவர்களுடைய தமிழ்ப் பேரறிவையும், ஆதீனத் தலைமையின் சிறப்பையும் சமூகப் பணியின் பெருமையையும் போற்றும் வகையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அதன் வைர விழாவின் போது 14—12—1989 இல் கெளரவ டாக்டர் (D.Lit) பட்டம் தந்து சிறப்பித்தது.
 
இவர்கள் எழுதிய “ஆலயங்கள் சமுதாய மையங்கள்” என்ற நூலுக்கு 15—1—1989-இல் தமிழ்நாடு அரசு முதற்பரிசு தந்து சிறப்பித்தது. இவை தவிர, சிங்கப்பூர் தமிழர் இயக்கம் “தமிழ்மாமுனிவர்” என்று சிறப்பித்தது.  “அருள் நெறித் தந்தை” “மக்கள் சந்நிதானம்”  “புரட்சித் துறவி” “சமுதாய முனிவர்” என்றெல்லாம் தமிழகமும் உலகநாடுகளும் பாராட்டிப் போற்றுகின்றன.
 
தவத்திரு அடிகளார் அவர்களின் பெருவாழ்வு, சிறந்தது; பரந்தது; விரிந்தது.  ஒவ்வொரு பணிக்களத்திலும் நிகழ்ந்த போராட்டங்கள் பல.  அவற்றையெல்லாம் தொகுத்தும் வகுத்தும் உள்ளது உள்ளவாறே எழுதினால் ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகமாகும்.  மிகச் சுருக்கமாக இங்கு எழுதப் பெற்றது.
 
இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த நமது குருமகாசந்நிதானம் தவத்திரு அடிகளார் அவர்களும், நமது ஆதீனமும் மேலும் மேலும் சிறப்புற, காளத்தியப்பர் பேரருளைச் சிந்தித்து, தெய்வசிகாமணி குருமூர்த்தியின் தெய்வத் திருவடிகளை வாழ்த்தி வழிபடுவோமாக!
 
சீர் வாழி! தெய்வசிகாமணி சீர் அருணை
ஊர் வாழி! வாழி உலகெல்லாம்!—கார் வாழி!
சித்தமிழ்தம் ஆன சிவாகமம் வாழி! செழு
முத்தமிழும் வாழி முறை!
 
 
கருவிநூற்பட்டி
 
1குன்றக்குடி, திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீன வரலாறு, வித்துவான் சு.சுவர்ண காளீச்சுரன், சார்வரி ஆவணி–பூரட்டாதி, ஆதீனச் சீடர்கள் வெளியீடு.
 
2. அருணையாதீனக் குரு பரம்பரை அகவல் வித்துவான் சு.சுவர்ண காளீச்சுரன்,  4–7–1961, அருணையாதீனச் சீடர் சங்க வெளியீடு
 
3. திருவாவடுதுறை ஆதீன வரலாறு, திருவாவடுதுறை ஆதீன வித்துவான் த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, விக்ருதி–புரட்டாசி: 1950 திருவாவடுதுறையாதீன வெளியீடு–36.
 
4. ஶ்ரீலஶ்ரீ நல்லூர் ஆறுமுக நாவலர் சரித்திரம், வே. கனரத்தின உபாத்தியாயர், யாழ்ப்பாணம் நாவலர் நூற்றாண்டு விழாச் சபையினரால், மறு பிரசுரமாகவெளியிடப்பட்டது.
 
5. என் சரித்திரம்–மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள், 1982.  மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதைய்யர் நூல் நிலையம்,  சென்னை—1941.
 
6. மயூரகிரிக் கோவை, கோடகுடி சே.சர்க்கரை இராமசாமிப் புலவர் கீலக, ஆனி, (15 கி.பி. 1908)
 
7. தமிழ் இலக்கிய வரலாறு–பதினாறாம் நூற்றாண்டு, மு.அருணாசலம், 1976.  காந்தி வித்யாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், தஞ்சை ஜில்லா.
 
8. சைவ சமய வளர்ச்சி, டாக்டர்.மா. இராசமாணிக்கனார், 1958 ஒளவை நூலகம்—சென்னை.
 
9. திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் ஶ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் I&II  மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர், 1940. டாக்டர். சுவாமிநாதையர் பப்ளிகேஷன்ஸ், சென்னை–5.
 
10. மயூரகிரி என்னும் குன்றக்குடி ஷண்முகநாதருலா, பிரமஶ்ரீ சிலேடைப்புலி பிச்சுவையர்–1938.
 
11.திருவண்ணாமலைத் தல விளக்கம், பதிப்பாசிரியர்: சீ.ஈ.எஸ்.பெருமாள், 1968.  திருவண்ணாமலை ஶ்ரீ அருணாசலேஸ்வரர் தேவஸ்தானம்
 
12. திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலையாதீனத்து ஶ்ரீலஶ்ரீ தேவசிகாமணி தாண்டவராஜ தேசிக பண்டார சந்நிதி அவர்கள் பேரில் இயற்றப்பட்ட  சாஹித்தியங்கள்.
      
 
      1. இரட்டைப்பல்லவி, சங்கீத சாஹித்ய வித்துவான் இராமையர்
       
      2. ஸி.எஸ். கிருஷ்ணசாமி சர்மா, விஜய, சிங்கரவி (கி.பி. 1893)
 
13. திருக்கைலாச பரம்பரைத் திருவண்ணாமலயாதீனத்துப் பிரதம சற்குரு மூர்த்தியாகிய ஶ்ரீமத்தேவ சிகாமணி தேசிகர் மீது, அவ்வாதீனத்து ஶ்ரீ குமரசாமி முனிவரால் அருளிச் செய்யப் பட்ட ஞானவந்தாதியும், நான்மணி மாலையும், யாழ்ப்பாணத்துப் புலோலியம்பதி ம.தில்லைநாத பிள்ளை பதிப்பு. சர்வசித்து,வைகாசி (கி.பி. 1887)
 
14. பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.  1974. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
 
 
 
 

 

குன்றக்குடி

திருவண்ணாமலை ஆதீனம்
குருமுதல்வர்
திருவருள்திரு தெய்வசிகாமணி தேசிகர்
சிற்குரு மாலை
(அருள்திரு குமாரசாமி முனிவர்)
 
வருவரு தோற்றம் எழுவகை
யாக வகுத்திடுநாற்
கருவரு துன்பக் கடல் நீந்து
வங்கம தாம் உலகிற்(கு)
ஒருவரு ணாமுலைப் பாகர்
பதாம்புயத்(து) உண்மைபெருந்
திருவரு ணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 

தருவரு ணத்துவம் ஈதென்
றுணர்ந்துபா சம்கடிந்து
குருவருள் நித்தம் என் நெஞ்சே,
பிடித்(து) அன்பு கூர் அயன்மால்
இருவரும் நாடி அண்ணாமலை
யாரை இறைஞ்சுமனத்
திருவரு ணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 

மருவரு பூங்குழல் மாணார்கள்
ஆசை வலைக்குள் அல
மருவரு நின்கழற் போதெண்ணி
எய்துவ தாநலமைந்
தருவரும் வேத முனிவரும்
போற்றத்தகும் அருள்செய்
திருவரு ணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 

அருவமி தாம்பர மானந்தச்
சோதிய னாதியெதென்(று)
உருவரி தாமென யாவரும்
காணவொண் ணாபொருளைப்
பருவமு ணர்ந்துநன் மாணாக்க
ருக்கருள் பான்மைதங்கும்
திருவருணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 

பருவழி யாம்சிவ போகமெய்ஞ்
ஞானப் பலனுயிர்க்கும்
கருவழி யாம் எனக் காண்நெஞ்ச
மே, ஒரு காலையினும்
திருவழி யாதுறு  பேரின்ப
வாழ்வு தினம் கொடுக்கும்
திருவரு ணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 

கருவடி வாமய மாதியை
மாசு கடிந்துமிக்காம்
பொருவறு காஞ்சன மாக்கும்
குளிகையைப் போன்றுலகின்
இருவகையாய் அதின் நன்மைப்
பயனன்பர்க்(கு) ஈட்ட வந்த
திருவரு ணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 

செருவுறு மாற்றலராய் அகங்
காரச் சினப்புலியை
வெருவுற மாய்த்துமெய்ப் போதக்
கலையை விளக்கி இன்பச்
சொருவ விவேகச் சுடர்மணி
என்னுளத் தும்திருத்தும்
திருவரு ணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 

திருகுறு மால்மனச் சேட்டைக்
குரங்கைத் திருத்தி, அன்பின்
உருகுறு மாறு செய்(து) ஒன்றாம்
சிவானந்தத் (து) ஊறியதேன்
பருகுற வேஅடி யேற்கும்
இனிதருள் பாலிக்குமெய்த்
திருவருணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 
இருபதின் மேலிரு நான்காக
மங்களும் ஈரிரண்டு
சுருதியின் வாக்கிய மும்தவ
றாது மெய்த் தொண்டர் மனத்(து)
இருள்மல பாசத்தை நீக்கி மெய்ஞ்
ஞான இயற்கைதரும்
திருவருணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!
 

கருவரியென்னும் இருள்போன்ற
வன்மனக் காட்டையெல்லாம்
துருவம தாக்கிப் புலக்குறும்
பாகிய துட்ட விலங்(கு)
ஒருவ, நின் தாள் மலர்க் கேதொண்டு
செய்யவும் உண்மை பெற்றேன்
திருவருணாசலத் தேவ
சிகாமணிச் சிற்குருவே!

 
 
முற்றும்

 

 


 

குறிப்பு: நூல் தட்டச்சு உதவி திருமதி.கீதா சாம்பசிவம்

 

You may also like

Leave a Comment