Home Tamil MedicineHerbs கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணி

by Dr.K.Subashini
0 comment

கரிசலாங்கண்ணி
திரு.அ.சுகுமாரன்

 

Sept 19, 2009
 
 
தின்ற கரிசாலை தேகம் திரை போக்கும்       
தின்ற கரிசாலை சிறந்த நரை போக்கும்
தின்ற கரிசாலை தேகம் சிறுபிள்ளை
தின்ற கரிசாலை சிதையாது இவ் வாக்கையே
 

நாற்பது வகையான நோய்களைக் குணப்படுத்தும் சக்தி படைத்தது தெய்வீக மூளிகையான கரிசாலை. இதை நாள்தோறும் உண்டுவந்தால் பித்தமும், கபமும் வெளியேறும். கண்பார்வை மங்காது. கண்களில் ஒளி உண்டாகும். பல்வலி வராது. ஈளை மறையும். சுக்கிலம் கட்டும். ஆண்மை உண்டாகும். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும். புற்றுநோய் வராது. காசம், வெள்ளை, வெட்டை முதலியவை விலகும். நரையும், திரையும் மாறும். ஆன்மா மிளிரும். விதியே மாறும். நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து இலைகள் சாப்பிடுவது போதும். கரிசாலையை மென்று பல் துலக்கினால் பல்வலி மறையும்.

 

இது இருவகைப் பூக்கள் உடையது. மஞ்சள், வெள்ளை. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன. கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

 

வேறு பெயர்கள் -: கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான்,பொற்கொடி 

தாவரப்பெயர் -: ECLIPTA PROSTRATA ROXB.
தாவரக்குடும்பம் -: ASTERACEAE.
வகை -: வெள்ளைக்கரிசலாங்கண்ணி, மஞ்சக்கரிசலாங்கண்ணி.

முக்கிய வேதியப்பொருள்கள்  -:    இலைகளில் ஸ்டிக்மாஸடீரால், மற்றும் ஏ-டெர்தைனில் மெத்தானால் மற்றும் எக்லிப்டின், நிக்கோடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. 16 வகையான பாலி அசிட்டெலினிக்தை யொபீன்கள் எடுக்கப் பட்டுள்ளன.

தாவர அமைப்பு -: எதிரடுக்கில் அமைந்த வெள்ளை நிற மலர்கள் உடைய மிகக்குறுஞ்செடியினம். தரையோடு படர்ந்தும் வளர்வதுண்டு. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஈரமான நிலத்தில் தானே வளர்வது.

குத்து உரோமங்கள் கொண்ட ஒரு பருவச்செடி தலை சிறியது இரு இன மலர்கள் கொண்டது. கதிருள்ளது. இலைக் கோணங்களிலோ உச்சியிலோ இருக்கும். வெளிவட்ட மலர்கள் பெண்பாலானவை, அரைவட்டத்தில் இரு வரிசையிருக்கும். உள்வட்ட மலர்கள் இரு பாலானவை, 4 -5 மடல் கொண்டுமிருக்கும், வளமானவை, பூவடிச்சிதல், அடுக்குத் தட்டு மனிவடிவமானது. பூவடிச்சிதல், இருவரிசையில் இருக்கும். இலை போன்றது பூத்தளம் தட்டையானது. அல்லிகள், பெண் மலரில், மெலிந்தும், முழுமையாகவோ, இருபிளவாகவோ இருக்கும். மஞ்சள் நிறமானவை. இருபால் மலரில், 4 – 5 மடலாயிருக்கும். மகரந்தப்பை அடி மழுங்கியது. சூல் தண்டுக் கரங்கள் குருகலாயும் மழுங்கியும் இருக்கும். கனி, அக்கீன்கள், கதிர்மலர்களில் முப்பட்டையாயும் வெடித்தும் இருக்கும். வட்டத்தட்டு மலரில் அமுக்கியிருக்கும், பாப்பஸ் 1 – 2 நுணுக்கமான பற்களாகக் காணப்படும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.

 

பயன்படும் பாகங்கள் -:  (சமூலம்)

இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 – 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

 

சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.
:தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விடம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில்கட்டவும் விடம் இறங்கும்.

 

நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 – 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.

தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு சூரிய ஒளியில்  8 நாள் வைத்து  வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

 

இது ஒரு வசியமூலிகை – :–நம்மினால் நம்புங்கள் !
பணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே சுழிமுறையான் மெருகேற்று
அணிந்து நின்று "யவசிவய’ " என்று நீயும்
அப்பனே கற்பூரம் தீபம் பார்த்து
துணிந்து நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்
சுத்தமுடன் லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்
அனைவருந்தான் பின் வணங்கி நிற்பார் கேளே.
 -அகத்தியர் பரிபூரணம்.

கரிசாலை சுட்டெரித்த சாம்பல் மையை நெற்றியில் வைத்து கற்பூர தீபம் காட்டி "யவசிவய" மந்திரம் கூறி திருநீறு கொடுத்தால் அதை அணிந்தவர் வசியமாவார். வள்ளல் பெருமான் இதை ஒரு சஞ்சீவி என்கிறார்.

கர்சாலையை எந்த விதத்திலாவது , பச்சையாகவோ சமையல் செய்தோ தினமும் உட்கொள்ளவேண்டும் .இது பரம கருணாநிதியான நம் தலைவரால் கிடைக்கப்பட்டது என்கிறார் .

You may also like

Leave a Comment