Home Historymalaysia அள்மிகு வேல்முருகன் – ஞானமுனீஸ்வரர் ஆலயம்.

அள்மிகு வேல்முருகன் – ஞானமுனீஸ்வரர் ஆலயம்.

by Dr.K.Subashini
0 comment

 

அள்மிகு வேல்முருகன் – ஞானமுனீஸ்வரர் ஆலயம்.
 கிருஷ்ணன், சிங்கை.

 

செங்காங் ரிவர்வேல் கிரசண்டில் அருள்மிகு வேல்முருகனுக்கும், ஞான முனீஸ்வரருக்கும் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பலவிதங்களிலும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இருபதாம் நூற்றாண்டில் சிங்கப்பூரில் அமைந்த முதல் ஆலயம் இதுவாகும். இக்கோயில் நவீனக் கட்டிட வடிவமைப்பின் பல உன்னதங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது; அதே வேளையில் தென்னிந்திய ஆலய சாஸ்திரங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஆலயத்தின் அலங்காரக் கலைநயம், சிற்பங்கள், பிரமிக்க வைக்கும் கூடங்கள், சன்னிதிகள் யாவும் மாறுபட்ட கலையழகுடன் அமைந்துள்ளன. ஆலயத்தின் கம்பீரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப் பிரதான சன்னிதிக்கு உயரே மாடம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.இது வழக்கமான கோபுரத்திலிருந்தும் மாறுபட்டது. மண்டபத்துக்கு வெளியிலும், நடைபாதைகளிலும் காணப்படும் சிற்பங்கள் நம்மை மெய்மறக்க வைப்பவை.

இடப் பற்றாக்குறை நிறைந்த சிங்கப்பூரில் விரைவான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.பல இன மக்களின் தேவைக்கு ஏற்பக் குடியிருப்பு, சமய வழிபாட்டுத் தலம் போன்றவற்றை அமைப்பதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. அரசாங்கம் அதற்கேற்ற வழிமுறைகளை மேற்கொள்கிறது.20ம் நூற்றாண்டில் அமைந்த முதல் கோயில் இதுவே என்று கூறலாம். வேல்முருகன் – ஞான முனீஸ்வரர் ஆலயம் இன்றைய சிங்கப்பூர் மக்களின் விருப்பத்தை மனத்தில் கொண்டு, நமது சமயத் தேவைகளையும் அதே வேளையில் நாட்டுக்கு அவசியமானவற்றையும் ஈடு செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

ஆலயத்தைச் சுற்றிலும் இருக்கும் நவீன அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டிடங்களோடு ஒருங்கிணைந்து போகும் வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தை அடுத்து பெளத்த, தாவோ (சீன) ஆலயங்களும் உள்ளன.
வேற்றின மக்களையும் இவ்வாலயம் அரவணைத்துச் செல்கிறது.மற்ற சமயத்தினருடன் நெருக்கமான, இணக்கமான தொடர்பு கொண்டியிருப்பது பல்லின ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. பல சமய வழிபாட்டு மையங்கள் ஒன்றிணைந்து செயல்படுவதால்  மத நல்லிணக்கம் போன்ற எண்ணற்ற நற்பயன்கள் விளைகின்றன.

 
ஆலய வரலாறு

 

 

 

ஸ்ரீ ஞான முனீஸ்வரர்

1940 களில் சிலேத்தார், ஜாலான் காயு ஆகிய பகுதிகளில் குடியேறிகளாக இருந்த நம்மவர்கள் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி, ஸ்ரீ கிருஷ்ண பகவான், ஸ்ரீ மாரியம்மன் ஆகிய கடவுளரை வழிபட்டு வந்தார்கள். தெய்வீக அருள் நிறைந்த இக்கோயிலில் வழங்கப்பட்ட பால் பாயசப் பிரதாசம் பலரையும் ஈர்த்தது. அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்குச் சனிக்கிழமை தோறும் சுவை மிகுந்த பால் பாயசம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பால் அந்த கோயிலுக்குச் சொந்தமான பசுவிடமிருந்தே பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பசு நாள்தோறும் அதிகமான பாலைச் சுரந்ததால் கோயில் தேவை போக எஞ்சிய பாலை மற்றக் கோயிலுக்கும் அனுப்பி வந்தனர்.

 

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில்,  ஸ்ரீ கைலாய கணபதி, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ முத்து மாரியம்மன், ஸ்ரீ ஞான முனீஸ்வரர், ஸ்ரீ வீரபத்திரர் ஆகிய சன்னிதிகளும் இருந்தன.அக்கோயில் பக்தர்களுக்குப் பல அபூர்வ அனுபவங்களும், அதிசய சம்பவங்களும் ஏற்பட்டன.இரவு நேரங்களில் ஸ்ரீ ஞான முனீஸ்வரர் கையில் அரிவாளுடன், காலில் சலங்கையுடன் சுருட்டுப் புகைத்தவாறு நடந்து சென்றதைப் பலர் பார்த்துள்ளார்கள். அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்றும் அத்தெய்வங்களைப் பயபக்தியுடன் வழிபட்டு வருகிறார்கள்.

அருள்மிகு வேல் முருகன்

ஆரம்ப காலங்களில் தஞ்சோங் பகார் துறைமுகப் பகுதியில் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்து வந்தனர். அப்பகுதியிலேயே அமைந்திருந்த மலாயன் இரயில்வே குடியிருப்புகளிலும் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். 1960ம் ஆண்டு சீலாட் சாலையில் அருள்மிகு வேல் முருகன் கோயில் கட்டப்பட்டது. அப்பகுதி வாழ் இந்தியருக்கு இந்த அருள்மிகு வேல் முருகன் ஆலயம் சமய வழிபாட்டுத் தேவைகளை நிறைவேற்றி வந்தது. பங்குனி உத்திரத்தன்று காவடி தூக்கித் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்திய பலரும் அந்நிகழ்ச்சிகளை இன்றும் நினைவு கூர்வர்.

இந்தக் கோயில்கள் அமைந்திருந்த இடங்கள் நகர மேம்பாட்டிற்கு இடம் கொடுக்க வேண்டி இருந்ததால் மாற்று இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய கோயிலாகையால் வருமானமும் குறைவாகவே

இருந்தது. பெரும்பொருள் செலவு செய்து புதிய கோயிலை எப்படிக் கட்டுவது என்று கோவில் நிர்வாகம் கவலை கொண்டது.

 

ஸ்ரீ ஞான முனீஸ்வரர், அருள்மிகு வேல் முருகன் கோயில்களை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் புதிய கோவில்கட்டும் வரை விக்ரஹங்களுக்கு நிலையான ஒரு வழிபாட்டுத் தலத்தைத் தேடுவதில் முனைந்தனர். உடனே கோயில் கட்ட உகந்த இடமும் கிடைக்கவில்லை. பொருள் வசதியும் இல்லாத காரணத்தால், இடைப்பட்ட காலத்தில் சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில் வளாகத்திலிருந்து செயல்படத் தீர்மானித்தனர்.கோயிலைக் கட்டப் பெருமளவில் நிதி சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பக்தர்கள் ஒரு குடையின் கீழ் திரண்டனர்.

சிங்கப்பூரில் இடப்பற்றாக் குறை நிலவிய காரணத்தால் சமூகத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஆலயம் அமைய வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளும் இருந்து வந்தது.வெவ்வேறு வழிபாட்டுப் பாரம்பரியங்களைப் பின்னணியாகக் கொண்ட மூன்று கோயில்கள் ஒரே கோயிலாக இணைந்து ஒரு நிர்வாகத்தின் கீழ், இந்து அறக்கட்டளை வாரியத்தின் உதவியுடன் ஒரே கூரையின் கீழ்க் கொண்டு வரப்பட்டன.பல்வேறு தடைகளும், சிரமங்களும் இருந்தாலும் பக்தர்கள் நம்பிக்கையும், மனவுறுதியும் தளராமல் முயற்சியைக் கைவிடாது செயல் பட்டனர்.

இப்போது அமைந்துள்ள செங்காங் வட்டாரத்தில் தங்கள் கனவு ஆலயத்தை எழுப்ப ஆறு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக நிதி திரட்டி நயமிகு, கலைமிகு ஆலயம் கட்டினார்கள்.இங்கு தமிழில் லட்ச அர்ச்சனை மந்திரங்கள் ஓதப்படுகின்றன.  

 

 

சமய நல்லிணக்கதை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பக்கத்தில் அமைந்திருக்கும் பெளத்த மடம், சீன லியோங் சான் ஆலயம் ஆகியவற்றுடன் இணைந்து தெய்வீக  தீப ஊர்வலத்தை நடத்தி வருகிறார்கள்.

 

ஒரு பிள்ளைக்கு நாம் அளிக்கக் கூடிய சிறந்த பரிசு கல்விதான். கல்விப் பயணத்திற்கு அடிப்படை பாலர் கல்வி.அருள்மிகு வேல்முருகன் – ஞான முனீஸ்வரன் ஆலயம் பாலர் வகுப்புகளைத் தற்போது நடத்தி வருகிறது.தமிழ் வருடப் பிறப்பு, பஞ்சாங்க வாசிப்பு, பங்குனி உத்திர விழா,சிவராத்திரி, பிரதோஷம், அன்னையர் தினம்,சிங்கப்பூர் தேசிய தினத்தையொட்டிச் சந்தன குட விழா போன்ற இந்து சமய வழிபாடுகளுடன் மற்ற முக்கிய சமய விழாக்களும் ஆலயத்தில் நடந்தேறி வருகின்றன.

 

You may also like

Leave a Comment